நெடுந்தூரப் பயணம்போல
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.
பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.
என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.
சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
Tuesday, December 15, 2009
Monday, December 7, 2009
சிறுகதை: கடைசி பயணி மாரிமுத்து
‘24ஆம் எண் பேருந்து எல்லாரையும் சுமந்து கொண்டு வழக்கமான பாதையை நோக்கி நகர்ந்தது. மாரிமுத்து கிழவன் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். மிக கவனமாக வெளியே எறியப்படும் அவரது பார்வை பேருந்தின் நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறியப்படியே வந்தது.
"ஐயா. . .இந்தத் தோட்ட மாளிகை வந்துச்சின்னா கொஞ்சம் சொல்லிருப்பா"
அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் சொல்லி வைத்தார். எப்பொழுதும் பேருந்து பயணங்கள் அவருக்கு சந்தேகத்திற்குரியவை. உள்ளே ஏறியவுடன் யாரையாவது பிடித்துக் கொண்டு, இறங்குகிற இடம்வரை அவர் மீதே முழுமையான பயணத்தையும் ஒப்படைத்துவிடுவார்.
"தாத்தா. . .நான் சீக்கரம் எறங்கிடுவேன். . டிரைவர்கிட்ட சொல்லிட்டுப் போறேன். . அவரு சொல்லுவாரு எடம் வந்தோன. சரியா? அதுதான் கடைசி ஸ்தோப் போல. . "
பேருந்தை மல்லாந்து பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தலை ஆட்டிக் கொண்டார். முன்னால் டிக்கெட் துப்பும் இயந்திரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் சீன டிரைவரை ஒருமுறை பார்த்தார். அவன் பேசப் போகும் மலாய் இவருக்குப் பிடிப்படுமா என்பதில் புதியதாக ஒரு சந்தேகம் கிளைவிட்டது.
"ஓய் ஓராங் துவா செப்பாட் னைக்லா" (டே கெழவா சீக்கிரம் ஏறு) என வழக்கமாக எல்லாரும் கடிந்துகொண்டு தன் முதுமையின் மீது எறியும் வார்த்தைகள் அவருக்கு மேலும் பதற்றத்தை அளிப்பது போல, இந்தப் பயணத்தில்கூட அந்தச் சீன டிரைவர் இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ திட்டி வைத்தான். முதுமை இவர்களுக்கு ஒரு கேலிக்குரிய விஷயம்.
"டே கெழட்டு படுவா. . ஒழுங்க நிக்க தெரியாதா?" எப்பொழுதோ ஒர் இந்திய வாலிபன் அவசரத்தில் எரிந்து விழுந்தது திட்டு திட்டாக பேருந்தின் உரையாடல்களிலிருந்து இடறின. மாரிமுத்துவுடன் பயணத்தில் இருப்பவர்களின் முகங்கள் திடீரென பயங்கரமானவையாகவும் கொடூரமானவையாகவும் தெரிந்தது. இருக்கையின் விளிம்பில் தனது விழிப்புணர்வை ஒடுக்கிக் கொண்டார்.
பேருந்திலிருந்து ஒவ்வொருவராக வெவ்வேறு இடங்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். மாரிமுத்து மெல்ல எழுந்து பேருந்தின் வேகம் குறையும்வரை மேல் கம்பியைப் பிடித்து சமாளித்துக் கொண்டு ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இருக்கைக்குச் சென்றார்.
"அப்பே. . இத்து தோட்ட மாளிகை டத்தாங். . சயா துருன்லா. ." (தோட்ட மாளிகை வந்ததும் நான் இறங்க வேண்டும்)
"அப்பா இத்து? பகிதாவ் டாலாம் மெலாயுலா. . அப்பா தெம்பாட்?" (என்ன இடம்? மலாய்மொழியில சொல்லு)
"இத்து பங்குனான் லாடாங்" (தோட்ட மாளிகை என்று மலாயில்)
"யூ பி டுடுக்லா. . சயா ஜெரிட் டெங்கான் குவாட் குவாட். . . யூ புன்யா தெலிங்கா ரோசாக்கான்?" (போய் உட்காரு நான் வேகமா கத்தறேன், உன் காதுதான் கெட்டுப் போச்சே)
மாரிமுத்து தடுமாறினார். எல்லோரும் அவரைக் கேலியாக வேடிக்கை பார்த்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ஆடவர் வேகமாகக் கத்தினார்.
"எங்க இப்படி? மார்க்கேட்டுக்காக. . . . "
"இல்லப்பா. . தோட்ட மாளிகைக்குப் போய்க்கிட்டு இருக்கன்..."
"அங்க என்ன இருக்கு? காசு தர்றாங்களா?"
"எஸ்.பி.எம் பரீட்சையில தமிழ் எழுக்க முடியாம போயிருமாம். . அதான் அங்க போராட்டம் நடத்தறாங்க. . அங்கன போய் ஏதோ நம்பளாலே முடிஞ்சதெ செய்லாம்னுதான்"
"நீங்க என்ன செய்யப் போறீங்க? போலிஸ்க்காரன் பிடிச்சி உள்ள வச்சான்னாதான் தெரியும். இருக்கறதும் இல்லாம போய்விடும். வீட்டுக்குப் போங்க"
"இல்ல. . . தமிழுப்பா. . போகனும்"
எல்லோரும் இறங்கிவிட்டப் பிறகு, பேருந்து தோட்ட மாளிகைக்குச் செல்லும் சாலையில் வலதுபுறமாக நின்றதும் மாரிமுத்து இறங்கினார்.
"கெழவன் எறங்குது பாரு. . சீக்கரம்!"
நன்றி: உயிரோசை வார இணைய இதழ்
ஆக்கம்: கே.பாலமுருகன்
Saturday, November 14, 2009
சிறுகதை: வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை
1
மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள் இலேசான மஞ்சள் விளக்கொளியில் ஒவ்வொருவனின் உருவங்களுக்குள்ளும் பதுங்கியிருந்தன.
வங்கியின் வெளிவரந்தாவில் படுத்திருந்தான் மாரிமுத்து. மேலாடையைக் கழற்றி அருகில் இருந்த நீர்க்குழாயின் மேற்பரப்பில் காயப் போட்டிருந்தான். வங்கிக்கு வந்தவர்களின் கால்களிலிருந்து ஒழுகிய நீர் அவன் தலைமாட்டில் குவியத்துவங்கியது. ஈரத்தை உணர்ந்தவன், கைகளைத் தூக்கி வேறு பக்கமாக வைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.
வங்கியின் உள்ளேயிருந்து பார்க்கையில், கண்களைக் கூசும் மஞ்சள் ஒளியில் மாரிமுத்துவின் மெலிந்த தேகம் அருகாமையில் உள்ள தரையில் விழுந்து சுருங்கியிருந்தது. வெளியேயும் உள்ளேயும் ஓடி வருபவர்கள் அவன் நிழலை மிதித்துக் கொண்டிருந்தனர்.
2
வனிதா காரிலேயே கண்ணாடியின் வழியாக அப்பா வங்கியை நோக்கி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை சொட்டு சொட்டாக வெளியை நனைத்துக் கொண்டிருந்தது. கண்ணாடியின் உடலில் வழுக்கி விழுந்த மழைத்துளிகளின் நெளிவைக் கைகளில் பிடிக்க முயன்றவளின் முகம் பிரகாசமாக இருந்தது.
வங்கியினுள்ளே பயங்கர கூட்டம். வனிதா உள்ளே எரிந்துகொண்டிருந்த மங்கிய மஞ்சள் விளக்கைப் பார்த்தபோது, மாரிமுத்து எழுந்து நீர்க்குழாயில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டையை எடுத்து உதறுவதையும் பார்த்தாள். இலேசான இருளும் மஞ்சளும் கலந்த ஒரு மாலை பொழுதின் வசீகரம் அவன் உடலைப் போர்த்தியிருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு பெரிய சாலையை நோக்கி ஓடத் துவங்கினான் மாரிமுத்து.
3
மழைப் பொழுதில் உறக்கத்தைச் சாரல் நனைக்கிறது. ஏதோ ஓர் அசாதரண கனவிலிருந்து திடீரென்று அவசரமாக உள்ளே ஓடிவரும் ஒருவனால் தூக்கியெறியப்படுகிறேன். வங்கிக் கதவைத் திறக்கும் அவசரத்தில் கைப்பிடியை நழுவவிடுகிறான் ஒருவன். மழையின் துளிகளை அவசரமாக உதறிவிட்டுப் போகிறான் ஒருவன். மீதங்கள் ஒரு நதியைப் போல உருண்டு வருகிறது.
நீர்க்குழாயில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். குளிர் உடல் முழுவதும் பரவியது. எங்கே போவதென்று தெரியாமல் வெளியே ஓடிவர, மழைச் சொட்டு சொட்டாகப் பெய்யத் துவங்கியது.
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Wednesday, November 4, 2009
கவிதை: எதிர் பிம்பம்
எதிர்பாராவிதமான சந்திப்புகளில்
கசியவிடும் துரோகங்களுக்குச்
சாட்சியமாக
விட்டு வருகிறேன்
எதிர் பிம்பத்தை
எல்லா இடங்களிலும்.
என்னைப் போன்ற
கண்கள் கால்கள்
கைகள் மூக்கு
மயிர் என
எதிர் பிம்பம்
சுயசிதைவிற்காகத் தயாராகியது.
எனக்கானவர்கள்
எனக்கு நெருக்கமானவர்கள்
நண்பர்கள் எதிரிகள்
துரோகிகள் வழிப்போக்கர்கள்
உறவுக்காரர்கள்
என எல்லோருக்கும்
திருப்தியளிக்கும் வகையில்
போலித்தனத்தின் உக்கிரத்தில்
மீண்டும் சாகவும் சிரிக்கவும்
உபசரிக்கவும் பம்மாத்துப் பண்ணவும்
கற்றுக் கொண்டது
எதிர் பிம்பம்.
எல்லாம் உடைவுகளுக்கும்
உடன்பட்டு
கரைந்துகொண்டிருந்தது.
கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: உயிரோசை வார இணைய இதழ்
Thursday, October 29, 2009
கே.பாலமுருகன் கவிதைகள்
1
வர்ணங்களின் உதிர்தலுக்குப்
பிறகு
ஒரே எண்ணம்
ஒரே தோற்றம்
ஒரே பிம்பம்.
வெறுமை.
2
எனக்காக இருந்தவை
அனைத்தையும்
உனதாக்கிவிட்டு
மறைந்துவிடுகிறேன்
மலை இடுக்குகளில்
மழைத்துளிகளில்
வீட்டு அறைகளில்
இலைகளின் சுருளில்
இரவின் முணுமுணுப்பில்.
திரும்பவும் கேட்கின்றன
எப்பொழுதோ பேசியஎன் சொற்களின் ஒலி
அதே வெறுப்புடன்
அதே இயலாமையுடன்
அதே வலியுடன்.
கே.பாலமுருகன்
மலேசியா
Friday, October 9, 2009
கதவுகளில் படிந்திருக்கும் கைகள்
மேலும் சில தட்டல்களுக்குப் பிறகு
படிய துவங்கின கைகள்
சொற்ப ஓசைகளில் சில்லறை அலட்சியங்களில்
கைகளை விழுங்கும் கணத்தில்
திறக்கப்படாமலே திடமான
வெறுமையில்
சில கதவுகள்.
விட்டுப் போன கைகளின் நிழல்கள்
மீதமாய் படிந்திருந்த தட்டல்களின் ஒலிகள்
மீண்டும் தட்டிக் கொண்டிருந்தன
வெறும் கதவுகளை.
ஓசைகளை தட்டல்களை
கைகளை
உள்ளிழுத்துக் கொண்டன
கதவுகள்
தனது இல்லாமையின் வறுமையைச்
சரிக்கட்டிக் கொள்ள.
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Wednesday, September 30, 2009
“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்
தாத்தா வீடு மட்டும் அந்த லயத்தில் தனி வீடுதான். பார்ப்பதற்கு இரண்டு ஒட்டிய வீட்டையும் ஒன்றாக சேர்த்து இணைத்துக் கட்டியது போல கொஞ்சம் பெரியதாகத் தெரியும். முன் வாசலில் நுழைந்தால் 5வினாடியிலேயே பின் வாசல் பக்கமாக வெளியேறிவிடலாம். 2ஆம் நம்பர் தோட்டத்து வீடுகள் மிகவும் சிறியது, மேலும் கதவுகள் இரண்டாகத் திறந்து கொள்ளும் வசதிகள் நிறைந்தது என்றெல்லாம் உமா அக்காள்தான் பிறரிடம் பெருமை அடித்துக் கொண்டிருப்பாள்.
கதவுகள் இரண்டு பிளவுகளாக இருக்கும். கீழ் கதவைச் சாத்தி வைத்து விட்டு வெளிச்சத்திற்காக மேல் கதவைத் திறந்து விட்டுக் கொள்ளலாம். பெரும்பாலும் நான் தாத்தா வீட்டில் இருந்த சமயத்திலெல்லாம் கீழ் கதவு எப்பொழுதும் சாத்திதான் கிடக்கும். அந்த 5 வயதில் கீழ் கதவின் உயரத்தைக் கடந்து போவதென்று எனக்குச் சாத்தியமற்றதாக அமைந்தது.
“டேய் கதவு மேல ஏறன, தாத்தாகிட்ட சொல்லி நெல்லிக்காய் மரத்துல கட்டி ஏத்திற சொல்லிடுவேன். புரியிதா?”
கீழ் கதவில் கைகள் இரண்டையும் தொங்கவிட்டுக் கொண்டு, வெளியே போய் கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அக்காள் அங்கம்மா வீட்டுக்குத்தான் போகிறாள். மதியம் 1மணிக்கு மேல் அவளுக்காக அங்கு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும்.
5ஆம் நம்பர் காலி வீட்டில் எல்லோரும் ஒன்று கூடுவதுதான் முதல் சந்திப்பு. பிறகுதான் சரளி மாமா வீட்டுப் பக்கமாகக் கூட்டம் நகர்ந்து செல்லும். அந்த வீட்டின் பின்புறத்தில்தான் அக்காளும் அவரின் நண்பர்களும் பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு, கித்தா கொட்டையில் துரட்டிப் பிடித்து அடித்தல் போன்ற விளையாட்டெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
மாலை மணி 3க்குள் அக்கா வீடு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் தாத்தாவின் ஆணையாக இருந்தது. அதன்படி எது நடந்தாலும் உமா அக்காள் மட்டும் 3மணிக்கு வீட்டில் இருந்துவிடுவாள். அக்காள் வீடு வந்து சேரும் போது சில சமயம் நான் அந்தக் கீழ் கதவோரமாகவே உறங்கிக் கிடப்பதுண்டு. அவள்தான் என்னைத் தூக்கி வாங்கில் போடுவாள்.
“இது ஒன்னு, எப்ப பாத்தாலும் இந்தக் கதவாண்டே தூங்கி தொலையுது. யேன் பாட்டி கொஞ்சம் தூக்கி அங்கன போட வேண்டியதுதானே?”
“அட போடி இவளே, குனிஞ்சா மறுபடியும் ஏஞ்சிருக்க முடியுமானே தெரியல, இதுல நான் இவன தூக்கி அங்கன போட்டனா, நான் இங்கன வுழுந்து கெடப்பேன், பரவாலயா?”
“நீ இருக்கியெ, இவனுக்கு மேல, எல்லா வேலயும் நாந்தான் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யனும்.”
பாட்டி எப்பொழுதும் அப்படித்தான். மாரியாயி பாட்டி எழுந்து நிமிர்ந்து நடந்து நான் பார்த்தது குறைவுதான். செவனேனு அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ராஜ்யம் நடத்திக் கொண்டிருப்பாள். அக்காள் அதன் பிறகு வீட்டின் குசுனி பக்கமாகப் போகிறவள்தான், வேலையெல்லாம் முடித்துவிட்டுத் திரும்பி வரும் போது சூரிய வெளிச்சம் கீழ் கதவில் ஒளிந்து மறைய தயாராகிக் கொண்டிருக்கும். அக்காள் கீழ் கதவைத் திறந்துவிட்டு, மேல் கதவைக் கொஞ்ச நேரத்திற்குச் சாத்துகிறாள் என்றால், வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்ய போகிறாள் என்பதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
“டேய், அங்கனயே வாங்கு மேலயெ படுத்துரு. கீழ எறங்கி வந்தெ தாத்தாகிட்ட சொல்லி ஒன்ன நெல்லிக்காய் மரத்துலெ கட்டித் தொங்க வுட்டுருவேன்”
உமா அக்காவிற்குத் தெரிந்ததெல்லாம் இந்த நெல்லிக்காய் மரமும் அதில் என்னைத் தொங்கவிடுவதும்தான். அதைச் சொல்லித்தான் என்னைப் பயமுறுத்தி வைத்திருப்பாள். வீட்டு வாசலில் என்பதைவிட வீட்டின் கீழ் கதவிலிருந்து 12அடி தூரத்தில்தான் நெல்லிக்காய் மரம் இருந்தது. எப்பொழுதும் கீழ் கதவின் தடுப்பில் வயிற்றை ஏற்றி நெல்லிக்காய் மரத்தை நோக்கி விரல்களை நீட்டிப் பார்ப்பேன். மரத்தை உள்ளங்கையாலே அடக்கி விடுவது போல சாகசம் செய்து பார்ப்பேன்.
எல்லாமும் என்னால் முடிகிறது ஆனால் இந்தக் கீழ் கதவைக் கடப்பதற்கான உயரமும் உறுதியும் மட்டும் இன்னும் கிட்டாதது பெரும் குறையாகவே இருந்தது. எவ்வளவோ முயற்சித்துப் பார்ப்பேன். எக்கி எக்கி வயிற்றில் கீழ் கதவின் வடு எஞ்சியது மட்டும்தான் மிச்சம். வானீர் ஒழுகியே கதவு வெளுத்துப் போயிருக்கும் போல. அக்காள்தான் எப்பொழுது கதவின் வெளிப் புறத்தையும் உட்புறத்தையும் கரித் துணியில் துடைத்துத் தள்ளுவாள்.
“கதவெ சாப்டறான் போல இவன், எப்படிக் கடிச்சி வச்சிருக்கான் பாரு. டேய் யேன் ஒனக்கு நாங்க சாப்பாடே போடறது இல்லயா? இத போயி சாப்டு வச்சிறுக்கே. அதாண்டா ஒனக்கு அடிக்கடி வயித்தால பிச்சிக்கிட்டு அடிக்குது”
இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் போது மாரியாயி பாட்டி ஏதாவது சினிமா பார்த்தாக வேண்டும். தாத்தாதான் பக்கத்து வீட்டிலிருந்து ஏதாவது சினிமா படம் வாங்கி வந்து போட்டு விடுவார். ஜெனெரேட்டர் சத்தத்துடன் படம் பார்ப்பது என்று பழகிப் போனதாக இருந்தது. பலகை வாங்கில் பாட்டி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நேர்த்தியாக அமர்ந்து கொண்டே தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். வெள்லை கறுப்பு படம் அந்த சிறிய தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவே தெரியும். இருந்தும் அப்பொழுது அதைச் சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு எனக்குப் பக்குவம் போதவில்லைத்தான்.
“அக்கா. . வரக் காப்பி. . அக்கா வரக் காப்பி கலக்கு”
“போச்சுடா ஆரம்பிச்சிட்டான், தாத்தா இவன கட்டி மரத்துலெ ஏத்துங்க”
“தாத்தா வரக் காப்பி. . கலக்க சொல்லு”
தாத்தா அமைதியாக கயிற்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே குசுனி பக்கமாகப் பார்த்து வேகமாகக் கத்துவார்.
“கேட்கறாந்தானே களக்கியாந்து கொடென், அவன்கிட்ட போய் மல்லுக்கு நிக்கறா”
உமா அக்காள் கடுப்புடன் வரக் காப்பியை ஒரு பிளாஸ்டிக் குவளையில் கலக்கிக் கொண்டு வந்து வாங்கின் மீது எரிச்சலுடன் வைத்துவிட்டுப் போய் விடுவாள். இந்த வரக் காப்பிக் கோரிக்கை எனக்குச் சின்ன வயதிலிருந்தே பழகிப் போனது. தாத்தா வீட்டில் இருந்தவரைக்கும் எப்பொழுதும் இரவில் சாப்பிட்ட பிறகு வரக் காப்பி கண்டிப்பாக வந்தாக வேண்டும்.
உமா அக்காள்தான் பாவம். அந்தக் குசுனியிலேயே அவளுடைய நேரம் முடிவடைந்துவிடும். இதில் வரக் காப்பி கலக்குவது என்பது மேலும் ஒரு சிரமாகிக் கொண்டேயிருந்தது. படுப்பதற்கு முன்பு உமா அக்காளுக்கு வரக் காப்பி குடிக்கும் பழக்கம் இருந்தது ஒருவேளை என்னாலையும்கூட இருக்கலாம் போலும். எனக்குக் கலக்கும் போதே அவளுக்கும் சேர்த்துக் கலக்கிக் கொண்டு, ஒரு உயரமான டப்பாவில் அதை ஊற்றி வைத்திருப்பாள். பிறகு உறங்குவதற்கு முன்பு அதைக் குடித்துவிட்டுத்தான் படுப்பாள்.
என் வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும் வாநீரையும் உதட்டோரம் சிந்திக் கிடக்கும் வரக் காப்பியையும் உமா அக்காள்தான் துடைத்துவிட்டிருக்க வேண்டும். காலையில் எழுந்திருக்கும் போது, வரக் காப்பியின் எந்தச் சுவடும் அடையாளமும் எங்குமே இருக்காது.
“யெக்கா, உமாக்கா. . . வரக் காப்பி கலக்கியாந்து கொடு”
“தாத்தா இவன பாருங்க சும்மா சும்மா வரக் காப்பி கேட்டுக்கிட்டே இருக்கான், மரத்துலெ கட்டி ஏத்திருவோம் வாங்க. . தாத்தா. . ,தாத்தா”
நெல்லிக்காய் மரம் எட்டியதில்லைதான். வெறும் வார்த்தைகளிலேயே நான் அடிக்கடி நெல்லிக்காய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Subscribe to:
Posts (Atom)












