Tuesday, December 15, 2009

கவிதை: எதிர் அழகியல்

நெடுந்தூரப் பயணம்போல
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.


பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.

என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.

சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா

Monday, December 7, 2009

சிறுகதை: கடைசி பயணி மாரிமுத்து

‘24ஆம் எண் பேருந்து எல்லாரையும் சுமந்து கொண்டு வழக்கமான பாதையை நோக்கி நகர்ந்தது. மாரிமுத்து கிழவன் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். மிக கவனமாக வெளியே எறியப்படும் அவரது பார்வை பேருந்தின் நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறியப்படியே வந்தது.


"ஐயா. . .இந்தத் தோட்ட மாளிகை வந்துச்சின்னா கொஞ்சம் சொல்லிருப்பா"

அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் சொல்லி வைத்தார். எப்பொழுதும் பேருந்து பயணங்கள் அவருக்கு சந்தேகத்திற்குரியவை. உள்ளே ஏறியவுடன் யாரையாவது பிடித்துக் கொண்டு, இறங்குகிற இடம்வரை அவர் மீதே முழுமையான பயணத்தையும் ஒப்படைத்துவிடுவார்.

"தாத்தா. . .நான் சீக்கரம் எறங்கிடுவேன். . டிரைவர்கிட்ட சொல்லிட்டுப் போறேன். . அவரு சொல்லுவாரு எடம் வந்தோன. சரியா? அதுதான் கடைசி ஸ்தோப் போல. . "

பேருந்தை மல்லாந்து பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தலை ஆட்டிக் கொண்டார். முன்னால் டிக்கெட் துப்பும் இயந்திரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் சீன டிரைவரை ஒருமுறை பார்த்தார். அவன் பேசப் போகும் மலாய் இவருக்குப் பிடிப்படுமா என்பதில் புதியதாக ஒரு சந்தேகம் கிளைவிட்டது.

"ஓய் ஓராங் துவா செப்பாட் னைக்லா" (டே கெழவா சீக்கிரம் ஏறு) என வழக்கமாக எல்லாரும் கடிந்துகொண்டு தன் முதுமையின் மீது எறியும் வார்த்தைகள் அவருக்கு மேலும் பதற்றத்தை அளிப்பது போல, இந்தப் பயணத்தில்கூட அந்தச் சீன டிரைவர் இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ திட்டி வைத்தான். முதுமை இவர்களுக்கு ஒரு கேலிக்குரிய விஷயம்.

"டே கெழட்டு படுவா. . ஒழுங்க நிக்க தெரியாதா?" எப்பொழுதோ ஒர் இந்திய வாலிபன் அவசரத்தில் எரிந்து விழுந்தது திட்டு திட்டாக பேருந்தின் உரையாடல்களிலிருந்து இடறின. மாரிமுத்துவுடன் பயணத்தில் இருப்பவர்களின் முகங்கள் திடீரென பயங்கரமானவையாகவும் கொடூரமானவையாகவும் தெரிந்தது. இருக்கையின் விளிம்பில் தனது விழிப்புணர்வை ஒடுக்கிக் கொண்டார்.


பேருந்திலிருந்து ஒவ்வொருவராக வெவ்வேறு இடங்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். மாரிமுத்து மெல்ல எழுந்து பேருந்தின் வேகம் குறையும்வரை மேல் கம்பியைப் பிடித்து சமாளித்துக் கொண்டு ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இருக்கைக்குச் சென்றார்.

"அப்பே. . இத்து தோட்ட மாளிகை டத்தாங். . சயா துருன்லா. ." (தோட்ட மாளிகை வந்ததும் நான் இறங்க வேண்டும்)

"அப்பா இத்து? பகிதாவ் டாலாம் மெலாயுலா. . அப்பா தெம்பாட்?" (என்ன இடம்? மலாய்மொழியில சொல்லு)

"இத்து பங்குனான் லாடாங்" (தோட்ட மாளிகை என்று மலாயில்)

"யூ பி டுடுக்லா. . சயா ஜெரிட் டெங்கான் குவாட் குவாட். . . யூ புன்யா தெலிங்கா ரோசாக்கான்?" (போய் உட்காரு நான் வேகமா கத்தறேன், உன் காதுதான் கெட்டுப் போச்சே)

மாரிமுத்து தடுமாறினார். எல்லோரும் அவரைக் கேலியாக வேடிக்கை பார்த்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ஆடவர் வேகமாகக் கத்தினார்.

"எங்க இப்படி? மார்க்கேட்டுக்காக. . . . "

"இல்லப்பா. . தோட்ட மாளிகைக்குப் போய்க்கிட்டு இருக்கன்..."

"அங்க என்ன இருக்கு? காசு தர்றாங்களா?"

"எஸ்.பி.எம் பரீட்சையில தமிழ் எழுக்க முடியாம போயிருமாம். . அதான் அங்க போராட்டம் நடத்தறாங்க. . அங்கன போய் ஏதோ நம்பளாலே முடிஞ்சதெ செய்லாம்னுதான்"

"நீங்க என்ன செய்யப் போறீங்க? போலிஸ்க்காரன் பிடிச்சி உள்ள வச்சான்னாதான் தெரியும். இருக்கறதும் இல்லாம போய்விடும். வீட்டுக்குப் போங்க"

"இல்ல. . . தமிழுப்பா. . போகனும்"

எல்லோரும் இறங்கிவிட்டப் பிறகு, பேருந்து தோட்ட மாளிகைக்குச் செல்லும் சாலையில் வலதுபுறமாக நின்றதும் மாரிமுத்து இறங்கினார்.

"கெழவன் எறங்குது பாரு. . சீக்கரம்!"

நன்றி: உயிரோசை வார இணைய இதழ்

ஆக்கம்: கே.பாலமுருகன்
                  மலேசியா
                
bala_barathi@hotmail.com

Saturday, November 14, 2009

சிறுகதை: வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை

1


மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள் இலேசான மஞ்சள் விளக்கொளியில் ஒவ்வொருவனின் உருவங்களுக்குள்ளும் பதுங்கியிருந்தன.


வங்கியின் வெளிவரந்தாவில் படுத்திருந்தான் மாரிமுத்து. மேலாடையைக் கழற்றி அருகில் இருந்த நீர்க்குழாயின் மேற்பரப்பில் காயப் போட்டிருந்தான். வங்கிக்கு வந்தவர்களின் கால்களிலிருந்து ஒழுகிய நீர் அவன் தலைமாட்டில் குவியத்துவங்கியது. ஈரத்தை உணர்ந்தவன், கைகளைத் தூக்கி வேறு பக்கமாக வைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.

வங்கியின் உள்ளேயிருந்து பார்க்கையில், கண்களைக் கூசும் மஞ்சள் ஒளியில் மாரிமுத்துவின் மெலிந்த தேகம் அருகாமையில் உள்ள தரையில் விழுந்து சுருங்கியிருந்தது. வெளியேயும் உள்ளேயும் ஓடி வருபவர்கள் அவன் நிழலை மிதித்துக் கொண்டிருந்தனர்.

2

வனிதா காரிலேயே கண்ணாடியின் வழியாக அப்பா வங்கியை நோக்கி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை சொட்டு சொட்டாக வெளியை நனைத்துக் கொண்டிருந்தது. கண்ணாடியின் உடலில் வழுக்கி விழுந்த மழைத்துளிகளின் நெளிவைக் கைகளில் பிடிக்க முயன்றவளின் முகம் பிரகாசமாக இருந்தது.

வங்கியினுள்ளே பயங்கர கூட்டம். வனிதா உள்ளே எரிந்துகொண்டிருந்த மங்கிய மஞ்சள் விளக்கைப் பார்த்தபோது, மாரிமுத்து எழுந்து நீர்க்குழாயில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டையை எடுத்து உதறுவதையும் பார்த்தாள். இலேசான இருளும் மஞ்சளும் கலந்த ஒரு மாலை பொழுதின் வசீகரம் அவன் உடலைப் போர்த்தியிருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு பெரிய சாலையை நோக்கி ஓடத் துவங்கினான் மாரிமுத்து.


3

மழைப் பொழுதில் உறக்கத்தைச் சாரல் நனைக்கிறது. ஏதோ ஓர் அசாதரண கனவிலிருந்து திடீரென்று அவசரமாக உள்ளே ஓடிவரும் ஒருவனால் தூக்கியெறியப்படுகிறேன். வங்கிக் கதவைத் திறக்கும் அவசரத்தில் கைப்பிடியை நழுவவிடுகிறான் ஒருவன். மழையின் துளிகளை அவசரமாக உதறிவிட்டுப் போகிறான் ஒருவன். மீதங்கள் ஒரு நதியைப் போல உருண்டு வருகிறது.

நீர்க்குழாயில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். குளிர் உடல் முழுவதும் பரவியது. எங்கே போவதென்று தெரியாமல் வெளியே ஓடிவர, மழைச் சொட்டு சொட்டாகப் பெய்யத் துவங்கியது.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Wednesday, November 4, 2009

கவிதை: எதிர் பிம்பம்




எதிர்பாராவிதமான சந்திப்புகளில்
கசியவிடும் துரோகங்களுக்குச்
சாட்சியமாக
விட்டு வருகிறேன்
எதிர் பிம்பத்தை
எல்லா இடங்களிலும்.

என்னைப் போன்ற
கண்கள் கால்கள்
கைகள் மூக்கு
மயிர் என
எதிர் பிம்பம்
சுயசிதைவிற்காகத் தயாராகியது.

எனக்கானவர்கள்
எனக்கு நெருக்கமானவர்கள்
நண்பர்கள் எதிரிகள்
துரோகிகள் வழிப்போக்கர்கள்
உறவுக்காரர்கள்
என எல்லோருக்கும்
திருப்தியளிக்கும் வகையில்
போலித்தனத்தின் உக்கிரத்தில்
மீண்டும் சாகவும் சிரிக்கவும்
உபசரிக்கவும் பம்மாத்துப் பண்ணவும்
கற்றுக் கொண்டது
எதிர் பிம்பம்.

எல்லாம் உடைவுகளுக்கும்
உடன்பட்டு
கரைந்துகொண்டிருந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: உயிரோசை வார இணைய இதழ்

Thursday, October 29, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்


1
வர்ணங்களின் உதிர்தலுக்குப்
பிறகு
ஒரே எண்ணம்
ஒரே தோற்றம்
ஒரே பிம்பம்.
வெறுமை.

2
எனக்காக இருந்தவை
அனைத்தையும்
உனதாக்கிவிட்டு
மறைந்துவிடுகிறேன்
மலை இடுக்குகளில்
மழைத்துளிகளில்
வீட்டு அறைகளில்
இலைகளின் சுருளில்
இரவின் முணுமுணுப்பில்.

3
திரும்பவும் கேட்கின்றன
எப்பொழுதோ பேசிய
என் சொற்களின் ஒலி
அதே வெறுப்புடன்
அதே இயலாமையுடன்
அதே வலியுடன்.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, October 9, 2009

கதவுகளில் படிந்திருக்கும் கைகள்

மேலும் சில தட்டல்களுக்குப் பிறகு
படிய துவங்கின கைகள்
சொற்ப ஓசைகளில் சில்லறை அலட்சியங்களில்
கைகளை விழுங்கும் கணத்தில்
திறக்கப்படாமலே திடமான
வெறுமையில்
சில கதவுகள்.


சிறு இடைவெளியில்
விட்டுப் போன கைகளின் நிழல்கள்
மீதமாய் படிந்திருந்த தட்டல்களின் ஒலிகள்
மீண்டும் தட்டிக் கொண்டிருந்தன
வெறும் கதவுகளை.

ஓசைகளை தட்டல்களை
கைகளை
உள்ளிழுத்துக் கொண்டன
கதவுகள்
தனது இல்லாமையின் வறுமையைச்
சரிக்கட்டிக் கொள்ள.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Wednesday, September 30, 2009

“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்

தாத்தா வீடு மட்டும் அந்த லயத்தில் தனி வீடுதான். பார்ப்பதற்கு இரண்டு ஒட்டிய வீட்டையும் ஒன்றாக சேர்த்து இணைத்துக் கட்டியது போல கொஞ்சம் பெரியதாகத் தெரியும். முன் வாசலில் நுழைந்தால் 5வினாடியிலேயே பின் வாசல் பக்கமாக வெளியேறிவிடலாம். 2ஆம் நம்பர் தோட்டத்து வீடுகள் மிகவும் சிறியது, மேலும் கதவுகள் இரண்டாகத் திறந்து கொள்ளும் வசதிகள் நிறைந்தது என்றெல்லாம் உமா அக்காள்தான் பிறரிடம் பெருமை அடித்துக் கொண்டிருப்பாள்.

கதவுகள் இரண்டு பிளவுகளாக இருக்கும். கீழ் கதவைச் சாத்தி வைத்து விட்டு வெளிச்சத்திற்காக மேல் கதவைத் திறந்து விட்டுக் கொள்ளலாம். பெரும்பாலும் நான் தாத்தா வீட்டில் இருந்த சமயத்திலெல்லாம் கீழ் கதவு எப்பொழுதும் சாத்திதான் கிடக்கும். அந்த 5 வயதில் கீழ் கதவின் உயரத்தைக் கடந்து போவதென்று எனக்குச் சாத்தியமற்றதாக அமைந்தது.

“டேய் கதவு மேல ஏறன, தாத்தாகிட்ட சொல்லி நெல்லிக்காய் மரத்துல கட்டி ஏத்திற சொல்லிடுவேன். புரியிதா?”

கீழ் கதவில் கைகள் இரண்டையும் தொங்கவிட்டுக் கொண்டு, வெளியே போய் கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அக்காள் அங்கம்மா வீட்டுக்குத்தான் போகிறாள். மதியம் 1மணிக்கு மேல் அவளுக்காக அங்கு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும்.


5ஆம் நம்பர் காலி வீட்டில் எல்லோரும் ஒன்று கூடுவதுதான் முதல் சந்திப்பு. பிறகுதான் சரளி மாமா வீட்டுப் பக்கமாகக் கூட்டம் நகர்ந்து செல்லும். அந்த வீட்டின் பின்புறத்தில்தான் அக்காளும் அவரின் நண்பர்களும் பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு, கித்தா கொட்டையில் துரட்டிப் பிடித்து அடித்தல் போன்ற விளையாட்டெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

மாலை மணி 3க்குள் அக்கா வீடு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் தாத்தாவின் ஆணையாக இருந்தது. அதன்படி எது நடந்தாலும் உமா அக்காள் மட்டும் 3மணிக்கு வீட்டில் இருந்துவிடுவாள். அக்காள் வீடு வந்து சேரும் போது சில சமயம் நான் அந்தக் கீழ் கதவோரமாகவே உறங்கிக் கிடப்பதுண்டு. அவள்தான் என்னைத் தூக்கி வாங்கில் போடுவாள்.

“இது ஒன்னு, எப்ப பாத்தாலும் இந்தக் கதவாண்டே தூங்கி தொலையுது. யேன் பாட்டி கொஞ்சம் தூக்கி அங்கன போட வேண்டியதுதானே?”

“அட போடி இவளே, குனிஞ்சா மறுபடியும் ஏஞ்சிருக்க முடியுமானே தெரியல, இதுல நான் இவன தூக்கி அங்கன போட்டனா, நான் இங்கன வுழுந்து கெடப்பேன், பரவாலயா?”

“நீ இருக்கியெ, இவனுக்கு மேல, எல்லா வேலயும் நாந்தான் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யனும்.”

பாட்டி எப்பொழுதும் அப்படித்தான். மாரியாயி பாட்டி எழுந்து நிமிர்ந்து நடந்து நான் பார்த்தது குறைவுதான். செவனேனு அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ராஜ்யம் நடத்திக் கொண்டிருப்பாள். அக்காள் அதன் பிறகு வீட்டின் குசுனி பக்கமாகப் போகிறவள்தான், வேலையெல்லாம் முடித்துவிட்டுத் திரும்பி வரும் போது சூரிய வெளிச்சம் கீழ் கதவில் ஒளிந்து மறைய தயாராகிக் கொண்டிருக்கும். அக்காள் கீழ் கதவைத் திறந்துவிட்டு, மேல் கதவைக் கொஞ்ச நேரத்திற்குச் சாத்துகிறாள் என்றால், வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்ய போகிறாள் என்பதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

“டேய், அங்கனயே வாங்கு மேலயெ படுத்துரு. கீழ எறங்கி வந்தெ தாத்தாகிட்ட சொல்லி ஒன்ன நெல்லிக்காய் மரத்துலெ கட்டித் தொங்க வுட்டுருவேன்”

உமா அக்காவிற்குத் தெரிந்ததெல்லாம் இந்த நெல்லிக்காய் மரமும் அதில் என்னைத் தொங்கவிடுவதும்தான். அதைச் சொல்லித்தான் என்னைப் பயமுறுத்தி வைத்திருப்பாள். வீட்டு வாசலில் என்பதைவிட வீட்டின் கீழ் கதவிலிருந்து 12அடி தூரத்தில்தான் நெல்லிக்காய் மரம் இருந்தது. எப்பொழுதும் கீழ் கதவின் தடுப்பில் வயிற்றை ஏற்றி நெல்லிக்காய் மரத்தை நோக்கி விரல்களை நீட்டிப் பார்ப்பேன். மரத்தை உள்ளங்கையாலே அடக்கி விடுவது போல சாகசம் செய்து பார்ப்பேன்.

எல்லாமும் என்னால் முடிகிறது ஆனால் இந்தக் கீழ் கதவைக் கடப்பதற்கான உயரமும் உறுதியும் மட்டும் இன்னும் கிட்டாதது பெரும் குறையாகவே இருந்தது. எவ்வளவோ முயற்சித்துப் பார்ப்பேன். எக்கி எக்கி வயிற்றில் கீழ் கதவின் வடு எஞ்சியது மட்டும்தான் மிச்சம். வானீர் ஒழுகியே கதவு வெளுத்துப் போயிருக்கும் போல. அக்காள்தான் எப்பொழுது கதவின் வெளிப் புறத்தையும் உட்புறத்தையும் கரித் துணியில் துடைத்துத் தள்ளுவாள்.

“கதவெ சாப்டறான் போல இவன், எப்படிக் கடிச்சி வச்சிருக்கான் பாரு. டேய் யேன் ஒனக்கு நாங்க சாப்பாடே போடறது இல்லயா? இத போயி சாப்டு வச்சிறுக்கே. அதாண்டா ஒனக்கு அடிக்கடி வயித்தால பிச்சிக்கிட்டு அடிக்குது”

இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் போது மாரியாயி பாட்டி ஏதாவது சினிமா பார்த்தாக வேண்டும். தாத்தாதான் பக்கத்து வீட்டிலிருந்து ஏதாவது சினிமா படம் வாங்கி வந்து போட்டு விடுவார். ஜெனெரேட்டர் சத்தத்துடன் படம் பார்ப்பது என்று பழகிப் போனதாக இருந்தது. பலகை வாங்கில் பாட்டி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நேர்த்தியாக அமர்ந்து கொண்டே தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். வெள்லை கறுப்பு படம் அந்த சிறிய தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவே தெரியும். இருந்தும் அப்பொழுது அதைச் சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு எனக்குப் பக்குவம் போதவில்லைத்தான்.

“அக்கா. . வரக் காப்பி. . அக்கா வரக் காப்பி கலக்கு”

“போச்சுடா ஆரம்பிச்சிட்டான், தாத்தா இவன கட்டி மரத்துலெ ஏத்துங்க”

“தாத்தா வரக் காப்பி. . கலக்க சொல்லு”

தாத்தா அமைதியாக கயிற்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே குசுனி பக்கமாகப் பார்த்து வேகமாகக் கத்துவார்.

“கேட்கறாந்தானே களக்கியாந்து கொடென், அவன்கிட்ட போய் மல்லுக்கு நிக்கறா”

உமா அக்காள் கடுப்புடன் வரக் காப்பியை ஒரு பிளாஸ்டிக் குவளையில் கலக்கிக் கொண்டு வந்து வாங்கின் மீது எரிச்சலுடன் வைத்துவிட்டுப் போய் விடுவாள். இந்த வரக் காப்பிக் கோரிக்கை எனக்குச் சின்ன வயதிலிருந்தே பழகிப் போனது. தாத்தா வீட்டில் இருந்தவரைக்கும் எப்பொழுதும் இரவில் சாப்பிட்ட பிறகு வரக் காப்பி கண்டிப்பாக வந்தாக வேண்டும்.

உமா அக்காள்தான் பாவம். அந்தக் குசுனியிலேயே அவளுடைய நேரம் முடிவடைந்துவிடும். இதில் வரக் காப்பி கலக்குவது என்பது மேலும் ஒரு சிரமாகிக் கொண்டேயிருந்தது. படுப்பதற்கு முன்பு உமா அக்காளுக்கு வரக் காப்பி குடிக்கும் பழக்கம் இருந்தது ஒருவேளை என்னாலையும்கூட இருக்கலாம் போலும். எனக்குக் கலக்கும் போதே அவளுக்கும் சேர்த்துக் கலக்கிக் கொண்டு, ஒரு உயரமான டப்பாவில் அதை ஊற்றி வைத்திருப்பாள். பிறகு உறங்குவதற்கு முன்பு அதைக் குடித்துவிட்டுத்தான் படுப்பாள்.

என் வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும் வாநீரையும் உதட்டோரம் சிந்திக் கிடக்கும் வரக் காப்பியையும் உமா அக்காள்தான் துடைத்துவிட்டிருக்க வேண்டும். காலையில் எழுந்திருக்கும் போது, வரக் காப்பியின் எந்தச் சுவடும் அடையாளமும் எங்குமே இருக்காது.

“யெக்கா, உமாக்கா. . . வரக் காப்பி கலக்கியாந்து கொடு”
“தாத்தா இவன பாருங்க சும்மா சும்மா வரக் காப்பி கேட்டுக்கிட்டே இருக்கான், மரத்துலெ கட்டி ஏத்திருவோம் வாங்க. . தாத்தா. . ,தாத்தா”

நெல்லிக்காய் மரம் எட்டியதில்லைதான். வெறும் வார்த்தைகளிலேயே நான் அடிக்கடி நெல்லிக்காய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, September 15, 2009

சிறுகதை: வெள்ளத்தில் கரைந்த அடையாளம் (உயிரோசை கதை)


1
தற்செயலாக ஒவ்வொரு மழைப்பொழுதின் இரவிலும் தூக்கத்திலிருந்து எழுந்துவிடும்போது உடல் வியர்த்திருக்கும். அன்று விழித்தெழுந்தபோது ஜூலை மாத மழைக்காலத்தின் குளிர் காற்று உள்ளே நுழையாதபடி அறைக்குள் நிரம்பியிருந்தது குள்ர்சாதனத்தின் குளுமை. வெளியில் மழைப் பெய்து கொண்டிருக்கும் போது நிம்மதியாக உறங்க முடிவதில்லை.

“இராத்திரிலே மழை பேஞ்சா சும்மா போத்திக்கிட்டு படுத்து ஜம்முனு தூங்கலாம்” என்று யாராவது சொன்னால் அவன் முகத்தில் கைமுட்டியைக் கொண்டு இடிக்க வேண்டும் போல தோன்றும்.

அறைக்கதவைத் திறந்ததும் முதலில் தரையைத்தான் பார்ப்பேன். பிறகு அம்மாவின் அறையை எக்கிப் பார்ப்பேன். கதவு மூடப்பட்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும். மழையின் சத்தம் அதிகரிக்கும்போது அம்மாவும் வெளியில் வந்து சன்னலைத் திறந்து வெளியே பார்ப்பார். எங்கள் மழை இரவுகளில் வாடிக்கையாக நிகழும் உறக்கக் களைதல் இவை.

“இந்நேரம் அந்த வீடுன்னா வெள்ளம் ஏறியிருக்கும்டா”

அவருக்குள்ளாகாவே வார்த்தைகளை விழுங்கிவிட்டு உள்ளே போய்விடுவார்.
மறுநாள் காலையில் பழைய வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது போலிருந்தது. 11 வருடம் வாழ்ந்துவிட்டு ஒரு மாபெரும் வெள்ளத்தில் அல்லது தொடர் மழைக்காலத்தில் தொலைத்துவிட்ட வீடு.
ஒவ்வொருமுறையும் கம்போங் கெர்பாவ் என்ற அடையாளபலகையைப் பார்க்கும்போதெல்லாம் மனம் வெறுமைக்கொள்ளும். பழைய வீட்டைப் பார்ப்பதில் நமக்குள் ஏற்படும் ஆசுவாசங்களுக்கும் வலிகளுக்கும் வார்த்தைகளே கிடைக்காது.

பெரிய சாலையிலிருந்து 4 அடி தள்ளி குறுகலான சந்திற்குள் நுழையும் ஒரு பாதை. பாதை முழுக்க ஆற்றுநீர் ஓடிய வடு. எங்கோ ஒரு வடுவின் நெளிவில் எனது பாதம் அல்லது அப்பாவின் பாதம் ஒளிந்திருக்கலாம் அல்லது அமிழ்ந்து போயிருக்கலாம். பழைய வீட்டை நோக்கி ஓடும் பாதைக்கு சில மௌளனங்களும் சில வெறுமைகளும் இருக்கவே செய்தன.


இடிந்த வீடுகளுக்குள் பரவலாக விரிந்து கோடுகள் போட்டிருந்தன வெயில். பெரும்பாலான வீட்டின் முன்பக்கத்தில் ஆற்று மண் குவிந்திருக்க அதில் படிந்திருந்த தூசுகளுக்குள் விவரிக்க முடியாமல் போன ஒரு மழைக்காலமும் வெள்ளமும் நிசப்தித்துக் கிடப்பது போல இருந்தது.


“அப்பா. . ஒங்க சப்பாத்தி தண்ணில அடிச்சிக்கிட்டு ஓடுது பாருங்க, பிடிங்க. . ம்ம்மா. . ””

“டே குமாரு. . என்னா வெள்ளமா? தண்ணில ஆட்டம் போடறியா?”
எனக்குள் சேமிக்கப்பட்டிருந்த மழைக்கால வார்த்தைகள் மெல்ல எட்டிப் பார்த்தன. அப்பாவிடம் சொல்ல முடியாமல்போன சில புகார்கள் மழையின் இரைச்சலில் வெள்ளத்தின் பரபரப்பில் காற்றில் பறக்கவிட்ட சில வார்த்தைகள் தரையில் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து சிதறின.

கம்போங் கெர்பாவ் 28-ஏ ஆம் நம்பர் வீடு. முன்கதவும் ஜன்னலும் இடிந்து புறவாசலில் சரிந்து கிடந்தன. உள்ளே எல்லாம் பலகைச் சுவர்களும் காணாமல் போயிருந்தன. வெற்று உடலுடன் நிர்வாணமாய் நின்றிருந்தது பழைய வீடு. அம்மாவும் நானும் வெள்ளத்திற்கு அஞ்சி ஏறி நின்ற பலகை மட்டும் அதே இடத்தில் இரு சுவர்களுக்கும் மத்தியில் பிடிப்புடன் இருந்தது.
2

சீன அப்பே வரும்வரை சேகர் மாமாவும் தாங் அங்கிளும் வெகுநேரம் மழையிலேயே நின்றிருந்தார்கள். அப்பா எங்களை வீட்டிற்குள்ளேயே உயரமான பலகையின் விளிம்பில் அமர வைத்துவிட்டு முன்கதவைச் சாத்திவிட்டார். கதவைத் தள்ளிக்கொண்டு ஆற்றுநீர் சலசலவென சந்துகளின் ஊடே வழிந்து கொண்டிருந்தாலும் விஷ பாம்புகளோ பூராணோ வருவதற்கு வாய்ப்பில்லை.

“டே. .காலையும் சூத்தையும் வச்சிக்கிட்டு ஒழுங்கா அங்கயே இரு, தண்ணீ முட்டிவரைக்கும் வந்திருச்சி”

வீட்டிற்கு மேற்கு பகுதியில் கரையைக்கூட எட்டாத வண்ணம் மேற்பரப்பில் வெறும் மதிய வெயிலை நெளியவிடும் “சீனக் கம்பத்து ஆறு”, இப்பொழுது எங்கள் வீட்டின் தரையை ஐந்தாவது முறையாக தழுவிக் கொண்டு கருமையான நிறத்தில் ஒருசில மர்மங்களை உள்ளிழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. முன்வாசல் கதவின் இறுக்கங்களைத் தளர்த்த முயன்று முட்டிக் கொண்டு இருந்தன ஆற்றுநீர்.

“ம்ம்மா தண்ணீ எப்ப போவும்?”

“இப்படி வெள்ளம் ஏறும்னு முன்னயே தெரியாமே போச்சே, , சீனன் சேவா காசு வாங்க மட்டும் வந்திருவான் கரட்டா, சனியன் பிடிச்சவன். . காசு தராங்கனு சொல்லுவான். . ஆனா வாங்கித் தரமாட்டான் கழிச்சில போறவன்”

அம்மா பலகையின் மேல் ஏறி நின்றுகொண்டு வீட்டிற்கு வெளியில் பார்த்தார். சேகர் மாமாவிற்கும் பக்கத்து வீட்டுச் சீனனுக்கும் அநேகமாகச் சண்டை வந்துவிடலாம் என்று பயந்துகொண்டிருந்தார்.

“ஏய் ராதா. . அவன உள்ளே வந்துரே சொல்லு. . எதுக்குப் பெரச்சன? சீனன் வந்தான்னா அவன்கிட்ட கேட்டுக்கலாம், இவன் என்னா பண்ணுவான்?”

சேகர் மாமாவும் தாங் அங்கிளும் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரின் தலை உச்சியிலிருந்தும் மழைநீர் ஒழுகி வாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியே துப்பிவிட்டு சேகர் மாமா வெள்ளத்தின் மேற்பரப்பை ஓங்கி எத்துவதன் மூலம் தனது வெறுப்புணர்வைக் காட்டினார்.

நாங்கள் வசித்து வந்த சீன கம்பத்திற்கு மற்றுமொரு பெயர் இருக்க நேர்ந்தது. “கம்போங் கெர்பாவ்”. எருமைகள் மேயும் கம்பம் என்று சீனர்கள் சொல்வார்கள். ஒரு காலத்தில் இங்கு வசித்த ஆற்றோர குடியிருப்புவாசிகள் எருமைகளை வளர்த்தார்கள் என்றும், அவர்கள் எருமைகளைக் கொண்டுவரும் பாதையின் விளிம்புகளில்தான் இந்தச் சீனக் கம்பம் உருவாகி இருப்பதால் அதற்கு “கம்போங் கெர்பாவ்” என்ற பெயரும் வந்துவிட்டதாம்.

அப்பா இரவில் வேலை முடிந்து வரும் வழியில் இந்தக் கமபத்தின் ஆற்றோரம் சில எருமைகள் மேய்வதையும் அந்த எருமைகளுக்கு மத்தியில் யாரோ ஒரு அப்பே கிழவன் நடமாடுவதையும் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அது அப்பாவின் பிரமையாக இருந்திருக்கலாம்.

வெள்ளத்தின் அடர் ஓட்டத்திலும் சிலர் தண்ணீரின் மேற்பரப்பில் எருமை மாடுகளின் தலைகள் மிதந்து வருவதாகக் கூறியபோது சிறு பரவசம் ஏற்படத் துவங்கின. ஆனால் அது பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெரிய பாதையின் சாக்கடையிலிருந்து உடைந்து வீடுகளுக்குள் புகுந்துகொண்டிருந்தன.

இரவில் சப்தமின்றி இருள் மிதந்துகொண்டிருக்க அம்மாவும் நானும் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு ஈரம் காய்ந்த ஆடைகளுடன் பலகையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அமர்ந்திருக்கும் பலகை இரண்டாவது அறையில் இருப்பதால் அதில் உயரமாக நின்று கொண்டு எக்கிப் பார்த்தால் பக்கத்து அறையும் வீட்டிற்கு வெளியேயும் தெரியும்.

அப்பா மோட்டாரைத் தள்ளிக் கொண்டு போய் மேட்டுப் பகுதியில் வைத்துவிட்டு கால் சட்டையை முட்டிவரை மடக்கி ஒதுக்கி வைத்துவிட்டு வெள்ளத்தில் நடந்துவரும் போதெல்லாம் தூரத்திலிருந்து அப்பாவின் வருகையை என்னால் உறுதி செய்ய இயலும். ஒவ்வொருமுறையும் அவர் அப்படித்தான் வந்துவிட்டு எங்கள் இருப்பை உறுதி செய்துவிட்டுச் செல்வதோடு நாசி லெமாக் அல்லது ரொட்டி சானாய் பொட்டலத்தைத் தந்துவிட்டுப் போவார். எனக்குச் சாப்பிட விருப்பம் இருக்காது. அம்மா என் வாயில் வலுக்கட்டாயமாகத் திணிக்க முயலும்போதெல்லாம் அவரின் கைகளில் ஆற்றுநீரின் வாசம் வீசிக் கொண்டிருக்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 300 ரிங்கிட் தரப்போவதாக மாநில அரசாங்கத்திடமிருந்து தகவல் வந்திருப்பதாகக் கம்பத்தில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது குறித்து சீனர்கள் மத்தியில் பேசப்படும். ஆனால் அப்பா அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவராக இருந்துவிட்டதால் எங்களுக்கு அந்த 300 ரிங்கிட் கிடைத்ததில்லை. மேலும் அங்குள்ள யாருக்கும் அந்த 300 ரிங்கிட் கிடைக்கவும் இல்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டதுண்டு.

சீனர்களின் கலாச்சார கலைப்பாடுகள் கம்போங் கெர்பாவ் வீட்டின் அமைப்புகளில் இருந்தன. அவர்களின் சாமி படங்கள் வைப்பதற்காகவே வீட்டின் முன்பகுதியில் சுவரோடு தூக்கி நிறுத்தியிருக்கும் பலகை சாமி மேடையும், ஊதுபத்திகளைச் சொருகி வைக்க வீட்டின் பல இடங்களில் முக்கோண வடிவத்திலான சுவரோடு ஒட்டியிருக்கும் சிவப்பு நிற சிறு பெட்டியும் இருக்கும். அந்தக் கம்பத்தில் 64 சீனக் குடும்பங்களும் 2 தமிழ் குடும்பங்களும் வசிக்க, சீனர்களின் பெறுநாள் காலங்களில் எங்காவது தொலைந்து போனால்தான் அன்றைய பொழுதைச் சரிகட்ட இயலும்.
ஒன்று எங்கள் குடும்பம் மற்றொன்று சரசு அக்காவின் குடும்பம். அவரின் கணவன் எங்கேயோ ஓடிவிட்டதால், அவரே கையுறை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டார்.

முன்வீட்டுச் சீனன் எப்பொழுதும் சரசு அக்காவின் குழந்தைகளைப் பார்த்தால் ஏதாவது பொருளைக் கொண்டு அடித்துத் துரட்டுவான். அவன் வளர்த்து வைத்திருக்கும் செடிகளில் மூத்திரம் பெய்வதற்காகவே அவர்கள் வருகிறார்கள் என்கிற புலம்பலும் அவனிடமிருந்து வரும். சரசு அக்காவின் குழந்தைகளில் ஒருவனுக்கு 4 வயது, மற்றொருவனுக்கு 6 வயது மற்றும் ஒரு பெண் குழைந்தைக்கு 3 வயது. பெண் குழந்தை பெரிய அண்ணனின் இடுப்பில் அரைநிர்வாணமாக அமர்ந்து கொண்டு வெயிலில் கருத்துப் போயிருக்கும். அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு கம்பம் முழுக்க அவர்கள் திரிந்து கொண்டிருப்பார்கள். யாரும் விளையாட கிடைக்காத பொழுதுகளில் கம்பத்தின் கிணற்றடியில் உட்கார்ந்துகொண்டு அவர்களே ஒரு விளையாட்டை விளையாடத் துவங்குவார்கள்.

அம்மாவும் என்னை அவர்களுடன் விளையாட அனுமதித்தது கிடையாது. வெள்ளக் காலத்தின் போது அவர்களின் வீடு முழுவதும் அடித்துக் கொண்டு போய்விட்டதாகக் கேள்விப்பட்டபோது பகிரென்றிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் அங்கிருந்து கையில் கிடைத்த பொருட்களைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ போய்விட்டதாக அம்மா சொன்னார்.

“சரசு அக்கா பிள்ளைங்க இப்பெ என்னா பண்ணிக்கிட்டு இருப்பாங்கமா?”

வெளியில் சேகர் மாமாவிற்கும் சீனனுக்கும் வாய்ச்சண்டை வலுத்து கைகளப்பாகியிருந்தது. இருவரும் சட்டைகளைப் பிடித்துக் கொண்டு உருளுவதற்கு மல்லுக் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும்போதே சிலர் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டு சீனனின் மூத்த மகன் வெளியில் வந்து சத்தமாகக் கத்தினான்.

“ஏய் இந்தியா. . கெலுவார்லா” (ஏய் இந்தியா. . வெளியேறு)


3

இங்கிருந்த சீனர்கள் எல்லோருக்கும் மலிவு அடுக்குமாடி வீடுகள் கிடைத்ததாகவும் எல்லோரும் அங்கே சென்றுவிட்டதாகவும் முன்பே தெரிய வந்தது. அந்தக் கம்பத்தில் வாழ்ந்த இரு இந்திய குடும்பங்கள் அங்கு வாழ்ந்ததற்கான எந்த உரிமையும் அடையாளமும் இல்லாமல் போனதைப் பற்றி அப்பாவும் கவலைப்பட்டதில்லை.

இப்பொழுதும் யாராவது நண்பர்களை அழைத்து வந்து, “இது நாங்க இருந்த வீடு” என்று காட்டினால்,

"ஏய் இந்தியா. . இனி ரூமா சீனாலா. . இனி கம்போங் சீனாலா” (டே இது சீன வீடுடா. . இது சீனக் கம்பம்” என்று சொல்லக்கூடும்.


-முடிவு-
நன்றி : உயிரோசை வலைத்தலம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com

Thursday, September 10, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்-2

1
தினமும் மீட்கிறேன்
என்னை
சில முரண்களிலிருந்தும்
இன்னும் சில மனிதர்களிடமிருந்தும்.

2
எல்லை கடந்தும்
மீதமாய் பின்தொடர்ந்தன
முள்வெளிகள்.

3
ஒவ்வொரு கதைகளிலும்
சொற்களைத் தொலைத்துவிடும்போது
காலியாகிறது எனக்கான இடம்.
ஒரு கதாபாத்திரமாய் உள்நுழைந்து
எனக்களித்த உரிமையுடன்
கதையை மீண்டும்
அடுக்குகிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Friday, September 4, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்

1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது
மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்
தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்
இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்
வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது
அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3
மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்
ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

Sunday, August 30, 2009

தொலைத்தூர பயணம்



1

நீண்ட பயணத்தின்போது
வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை
ஏற்படுத்தியிருக்கும்.
அல்லது உருவங்கள் கரைந்து
வெறும் சொற்கள் மட்டும்
மிதக்கக்கூடும்.
தொலைத்தூர பயணம் ஒரு மாயையென
அவதாணிப்பற்ற பொழுதுகளுடன்
வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.
பயணத்தவர்களில் சிலர் காணாமல்
போயிருந்தாலும்கூட
ஒரு மர்மயாய் இருப்பின் சூன்யத்தில்
ஒட்டிக்கிடக்கும் வாக்கியங்களால்
நிரம்பக்கூடும்.


2

எதுவரை நீளும் என்கிற முன்னறிவிப்பு
ஏதுமின்றி பயணம் விரிய
அர்த்தமற்று ஓடிக் கொண்டிருக்கின்றன
காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும்
ஓயாமல் சப்தமிட்டுக் கொண்டிருக்கும்
வானொலி பாடல்களும்.


3
ஒரு தொலைத்தூர பயணத்தில்
சில மௌளனங்களைக் கண்டடைந்தேன்.
எனக்குள்ளே நான் பேசிக்கொள்ளும்
வித்தையைக் கற்றிருந்தேன்.
பேசாமல் விடுப்பட்டுப் போன
உரையாடல்களின் போதாமைகளைச்
சரிக்கட்டிக் கொண்டிருக்கவும் செய்தேன்.
வெறுமனே சில மணிநேரங்கள் அமர்ந்திருப்பதைத் தவிர
சில அதிசயங்களும் நிகழும் தொலைத்தூர பயணத்தில்.

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, August 25, 2009

உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல


உதிர்வது அவ்வளவு
கடினமான காரியமல்ல.
அல்லது அலட்சியமான
ஓர் துர்சம்பவத்திற்கான
பிரயாசையுமல்ல.

உதிர்வது எளிதில்
நடந்துவிடக்கூடியது.
மயிர்போல உதிர்த்துவிடப்படுவது
அல்லது இலைக்கு நிகரான சராசரி உதிர்வின் உச்சமுமாக
ஒலியிலிருந்து சொற்கள் உதிர்வதுபோல
உடலிலிருந்து வயது உதிர்வதுபோல
கண்களிலிருந்து வெளிச்சம் உதிர்வதுபோல
பிடிகளிலிருந்து தளர்ந்து வீழ்வதன் சூட்சமமென
எல்லாமும் ஒரு பிடிகளுக்குள் சிக்கித்தவிக்கும் நிதர்சனத்திற்காக
ஒன்றையொன்று உதிர்த்துக்கொள்வதன் மூலம்
படைப்பின் வேர்களைக் கடந்து செல்ல.

உதிர்வது மிக இரகசியமானது.
ஒரு இலையின் சிறு நுனி காம்புகளில்
ஒளிந்து கிடக்கும் அல்லது
மழைத்துளியின் விளிம்பு சொட்டுகளில்
தளர்ந்திருக்கும்.
உதிர்வு ஒரு அசம்பாவிதம் அல்ல.
உயிர்களுக்குள் உயிர்களுக்கு வெளியில்
பிரபஞ்சகளில் பிரபஞ்ச வெளிக்குள்
நிகழும் சராசரி.

கே.பாலமுருகன்
உயிரோசை - Uyirosai

Sunday, August 23, 2009

இரயில் பயணம்


1
இரு ஆண்களுக்கு மத்தியிலான இருக்கை
பயணம் நெடுக காலியாகவே இருந்தது.
கால் வலிக்க இறுகியிருந்த பெண்களின்
நெரிசலுடன் இரயில் சப்தமின்றி
விரைந்து கொண்டிருந்தது.

2
சிறு இடைவெளியுமின்றி
ஒருவர் முகத்தை ஒருவர் உரசிக்கொண்டு
அடுத்தவர் சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டு
உடல் உறுப்புகள் பற்றிய கவனம் சிதறும்
ஓர் இரயில் பயணத்தில்.

அருகிலிருப்பவனின் அக்குளில்
புதைந்துவிட்ட மற்றவர்களின் முகங்கள்
தெரிவதற்குள்
சரிந்து விழுகின்றன உடல்கள்
ஒவ்வொரு நிலையத்திலும்.

உடல் வியர்த்துக்கொட்ட
ஒரு துர்நாற்றாமாக பரவுகின்றது
நெருக்கடியும் அதிருப்தியும்.
கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில்
யாரிடமிருந்தோ வந்திருந்த குறுந்தகவல்
சப்தமிடுகின்றது.
“நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com

Friday, August 21, 2009

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை


1

எல்லோரும் நடந்துவிட்டு
கொஞ்சம் நிலத்தை
எனக்காக விட்டுவைத்திருந்தார்கள்.
நடந்தேன். தவழ்ந்தேன்.
பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன்.

மீண்டும் சேகரிக்க
ஏதுமில்லாததால்
முன்னோர்களின் காலடி
சப்தங்களை நிலம் முழுக்க
ஆராய்ந்தேன். சிலாகித்தேன்.
கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.

பிறகொருநாள்
வேலிகள் பூட்டினேன்.
பாதுகாத்தேன். பயம்கொண்டேன்.
பெரும்வெளியின் ஒரு துளியில்
பற்றுக்கொண்டேன்.

வேலியில்
முள்கம்பிகள் பொருத்தினேன்.
குருதி சொட்ட கீறி
பார்த்தேன். நிம்மதிகொண்டேன்.
தினம் ஒருமுறை காயப்பட்டு
அப்பொழுதும் பற்றுக்கொண்டேன்.

உறக்கத்தின் பாதியில்
நடுநிசிக்கு ஓடிவந்தேன்.
வீடு தொலைந்தேன். ஆடைகள்
தொலைந்தேன். நடுவீதியில்
கொண்ட பற்றைப் பிடித்துக்கொண்டு
நடந்தேன்.

நிலத்தின் எல்லாம் திசைகளிலும்
சிக்குண்ட என்னைத் தேடி பிடித்து
சட்டைபைக்குள் அடைத்துவிட்டு
விடுபடும் கணத்தில்
நிலம் என் கால்களைப் பிடித்துக்கொண்டு
பின் தொடர. யார் அகதி என்கிற குழப்பத்தில்
எல்லோரும் நிலத்தின் மேல் நிலத்துடன் நடக்கத் துவங்கினோம்.

2
விக்ரமாதித்யன் கதை சொல்லாததால்
வேதாளமெல்லாம் நிலத்தின்
முதுகைப் பிடித்துக் கொண்டு
செத்துப் போயின.
வேதாளத்தைக் கொன்ற பாவத்தை
இன்று சுமப்பதென்னவோ
ஒரு வரலாறு மட்டுமே.

3
உத்தரவு கிடைத்ததும்
நகரத்துவங்கினோம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு.

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, August 18, 2009

ஈழ சகோதரர்கள்

ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம்
யாருக்கும் கேட்காத அளவிற்கு இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின் சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.




அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்.
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்.


விட்டுவந்த இடங்களிலெல்லாம்
திட்டுத்திட்டாக வீடுகளும்
மனிதர்களும்.


--
கே.பாலமுருகன்
thinnai

Monday, August 17, 2009

கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்


ஒரு நீண்ட உரையாடலின்போது
எனக்கும் கடவுளுக்கும்
சர்ச்சை உருவாகியிருந்தது
யார் முதலில் தோற்க வேண்டும்
என்கிற தொடர் விவாதத்தில்
நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு
கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருவர் மீது ஒருவர்
மெல்லிய துரோகங்களாக
படிந்திருக்கும் சந்தர்ப்பத்தில்
யார் முதலில் யாரை தூக்கி வீசுப் போகிறோம்
என்கிற அச்சம் பரவியிருந்தது.

மீதமிருந்த என் எச்சங்களைக் கடவுளும்
கடவுளின் இல்லாமைகளின் உக்கிரத்தை நானும்
ஒரு சுமையென தூக்கிக்கொண்டு
மீண்டும் சராசரி கடவுளாக
பக்தனாக பாமரனாக
துரோகியாக நாயாக
பேயாக புழுவாக
மண்ணாக சிவனாக.

கே.பாலமுருகன்

நன்றி: திண்ணை

bala_barathi@hotmail.com

Thursday, August 6, 2009

நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

பக்கத்து ஊரிலிருந்து
தப்பித்து வந்த
மழைக்குருவியின் கால்களிலிருந்து
தவறுதலாகச் சொட்டிவிட்டது
சில மழைத்துளிகள்

வெகுநேரமாக தனது சிறகை
சிலுப்பிக் கொண்டிருந்த
சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும்
தேங்கிக் கிடந்தது மழைக்காலம்

உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது
கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீரில்
எப்பொழுதோ அனுபவித்த ஒரு மழைக்காலத்தின்
துயரங்கள் ஒட்டிக் கிடந்தன.

நீ சிரிக்கும்போதெல்லாம்
அதன் ஒலியிலிருந்து பிரிந்து வருகிறது
இருவரும் ஒன்றாக பார்த்து இரசித்து நனைந்து
சாலையின் ஓரங்களில் கைகளை நீட்டி
விளையாட்டாக எக்கிப் பிடிக்க நினைத்த
ஒரு மழைப்பொழுது.


சாரலுக்குப் பிறகு
முழுக்க நனைந்துவிடுகிறது
மனமும் பொழுதுகளும்.


2

எங்கோ பிடித்த மழை
இங்கு வந்து
பழி தீர்க்கிறது.
ஒவ்வொரு சொட்டிலும் துரோகமும் அவமானங்களும்
நிரம்பி ஒழுகுகின்றன.
இனி யார் சொல்லியும்
திரும்பப் பெறாத மழை.

கே.பாலமுருகன்
மலேசியா

thanks:thinnai.com
bala_barathi@hotmail.com

Wednesday, August 5, 2009

சிறுகதை: செல்லம்மாவின் மரணத்திற்கு வந்தவர்கள்

செல்லம்மா அக்காள் இறந்துபோயிருந்தாள். வாசற்படியில் அமர்ந்துகொண்டு பிதற்றலுக்கு ஆளாகி ஒரு பைத்தியநிலையில் தம்பிவேணு யாருமற்ற வெளியைப் பார்த்து தொடர்ந்து முணகிக் கொண்டே இருந்தான். தம்பிவேணுக்கு 54வயதாகியிருந்ததை யாரும் ஞாபகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அரைக்கால் சட்டையுடன் முட்டிகளில் விம்மி புடைத்திருக்கும் சேற்றுப் புண்களின் வீச்சத்துடன் கால்கள் இரண்டையும் மடக்கி மெலிந்து போயிருந்த மார்பகத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு செல்லம்மா அக்காள் படுத்திருந்ததை வெறித்துக் கொண்டிருந்தான்.

"கடைசிவரைக்கும் தனியாவே இருந்து எந்த சொகமும் பார்க்காமெ செத்துட்டா. . கொண்டு போயி போடக்கூட எவனும் இல்லெ மகன்னு சொல்லிக்கிட்டு. . தனியா மட்டும் வாழ்ந்துட்டா இப்படித்தான். ."

தம்பிவேணுக்கு எழுந்துபோய் அந்த வார்த்தைகளை ஒப்புவித்துக் கொண்டிருந்தவனின் வாயில் ஓங்கி அல்லது முடிந்தவரையில் உயரமாக எகிறி சினிமா கதாநாயகனின் உடல்மொழிக்கேற்ப பலம்கொண்டு குத்த வேண்டும் போல இருந்தது. கால்கள் அவனது இயலாமையைக் கட்டிப் போட்டிருந்ததால் கண்களை நிமிர்த்தி வீட்டுக்குள்ளாக பரவியிருக்கும் ஒரு துர்மரணத்தைச் சுவாசித்துப் பார்த்தான். மரணத்திற்கு ஒரு வாசமுண்டு. செல்லம்மாவின் தலைமாட்டிலிருந்து 3அடி தொலைவில் கொளுத்தி வைத்திருந்த ஊதுவத்தி மணம் செல்லம்மாள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது.

"எவனாவது பொணத்தெ எடுத்துப் போட்டுத்தான் ஆகணும். அக்கம்பக்கம் மனுசாளுங்க எதுக்கு இருக்காங்க. நாங்களாம் இல்லையா?"

மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்ததை உறுதி செய்வது போல இடத்திற்கு உகந்த சொற்களை உதிர்த்துவிட்டு தன் வருகையைப் பதிவு செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவரின் கழிவிரக்கம் தம்பிவேணுக்கு மேலும் கோபத்தை வலுக்கச் செய்தது. பாய்ந்துபோய் அவரின் மார்பில் குதிக்க வேண்டும் என்பதற்கு நிகரான மனச்சித்தரிப்பில் அவன் ஆழ்ந்திருந்தான். கற்பனையால் அவரைப் போட்டு வெளுத்துக் கட்டினான். அவனால் இயன்றது தனது கற்பனைகளில் அவனை நுழைத்து அதற்குக் கால்கள் கொடுப்பது மட்டுமே.

"சரியா. . இந்தம்மாக்குச் சொந்தக்காரனுங்க எங்க இருக்கானுங்கனு தெரில, தகவல் சொல்ல யாரெ கூப்டறதுன்னும் தெரில. நம்ப பாட்டுக்கு எப்படிப் பொணத்தெ தூக்கறது?"

கூட்டத்தில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சிலருக்குள்ளிருந்து ஒரு தலை மட்டும் எழுந்து தீர்ப்பு வழங்க முற்பட்டது.

"இல்லைப்பா.. அவுங்க இங்க இருந்தவரைக்கும் யாருமே அவங்கள பாக்க வரல. . அப்படின்னா யாரும் இல்ல போல"

"அதெப்படிப்பா ஒரு மனுசனுக்கு எந்தச் சொந்தமும் இல்லாமெ போயிரும்? நம்பத்தான் முயற்சி எடுத்து தேடணும், இல்லன்னா பேப்பர்ல அறிவிப்பு கொடுக்கணும்"

செல்லம்மாளின் உடலில் ஈக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. தம்பிவேணு எழுந்து உள்ளே சென்று அந்த ஈக்களை விரட்டலாம் என்று உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து தளர்த்துவதற்கு மெல்ல களைந்தான்.

வீட்டின் முன்வாசல் கதவுவரை அருகிலிருந்த நண்பருடன் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தவரின் குரல் மெல்ல உடைந்து சோகமான தொனிக்கு மாறியது.

"ச்சே.. பாவம்லே"

அவனை அங்கேயே நிறுத்தி முகத்தில் காறி உமிழ வேண்டும். தம்பிவேணு எழுந்து திடமாக நிற்பது போல காட்டிக் கொண்டான். அவனது உடல் அதற்குச் சற்றும் இடமளிக்காத சூழலில் வயிற்றுப் பகுதியில் சுளீரென ஒரு வலி. அது ஒருவேளை பசியாகக்கூட இருக்கலாம். வீட்டிலிருந்து வெளியேறி சீனக்கடைக்குச் சென்றால் ஏதாவது மிச்சம் மீதியைத் தூக்கி வீசுவான். அதைப் பாவப்பட்ட ஜென்மமென வாங்கிக் கொண்டு கடையோரத்தில் அமர்ந்துகொண்டு சாப்பிடலாம். அவனைக் கடக்கும் உயர்வகை மகிழுந்தின் உரிமையாளர் யாராகினும் ஆங்கிலத்தில் எதையாவது திட்டி வைக்கலாம். (ஜப்பான் தொழில்நுட்பவகை கார்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவார்கள்) அதைத் தமிழில் மொழிபெயர்த்தால், "கழிசடை! அநாகரிக நாய்" இப்படி ஏதாவது விளங்கும். பாவம் தம்பிவேணுக்கு கர்மம் இந்த ஆங்கிலமும் தெரியாது, தமிழையும் சரியாக உச்சரிக்க வராது.

"அப்பே. . மக்கான்." இப்படி முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு கேட்க மட்டுமே தெரியும்.

செல்லம்மாளுக்காக இல்லை, அவளின் இறந்த பிரேதத்திற்காக போலித்தனமான குரல்களையும் விசாரணைகளையும் சுமந்துகொண்டு ஒவ்வொருவராக உள்ளே நுழைந்துகொண்டிருந்ததை தம்பிவேணு பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொருவரும் வாயில் மரணத்தைக் கவ்விக்கொண்டும், உள்ளே வந்ததும் வெளியே துப்புவதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார்கள். நாக்கு வெளியில் தொங்க பேய் போல முகத்தை மாற்றியமைத்துக் கொண்டு சரசரவென வீட்டிற்குள் வந்து விழுந்து தொலைத்தார்கள்.

அவனுக்குக் கண்கள் மங்குவது போலவும் செல்லம்மாளின் வீட்டில் ஆள்நடமாட்டம் அவனுடைய வெளியை அறுப்பது போலவும் தொடர் பிரமையென உருவாகிக் கொண்டே இருந்தது.

"சாங்கியம் செய்ய காசு வேணும்பா. . சொந்தக்காரங்க யாரும் இல்லெ. . அவுங்க இங்க வந்து ஒரு ஆறு மாசம்தான். எங்கேந்து வந்தவங்கனும் தெரில. வீடு முழுக்க ஏதாவது பணம் இருக்கானு தேடிப் பாருங்கப்பா. . யாரு அடக்கம் பண்ற செலவெ எடுத்துக்குறாங்களோ அவுங்க கையில கொடுத்துறலாம்"

தம்பிவேணு வீட்டிற்குள் எக்கிப் பார்த்தான். இருள் விலகி ஓர் அதிசயம் நிகழ வேண்டும் எனக் காட்சிகளை உடைத்துச் செதுக்கினான். செல்லம்மா எழுகிறாள். எழுந்து அமர்ந்துகொண்டு எல்லோரையும் பார்த்து சிரிக்கிறாள். தையல் இயந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு துணிகளைத் தயார்ப்படுத்தி வைக்கிறாள். தையல் இயந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க, செல்லம்மா வீட்டில் ஒரு இரம்மியமான பழைய பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கவும் செய்கிறது.

"டே! தம்பிவேணு வீட்டுப் பக்கம்வாடா. . சோறு தரேன். நல்லா சாப்ட்டுக்க. யேன் இங்க உக்காந்து இப்படி சாப்படறே?"

முதல்முறையாக இப்படிக் கிழிந்த ஆடைகளுடன் தாடி வளர்ந்த அருவருக்கத்தக்க ஓர் ஆசாமியைப் பார்த்து உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்த செல்லம்மாளைப் பார்த்தது அந்தச் சீனக்கடையில்தான்.

"என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அந்த சீனன்கிட்ட கேட்டண்டா. . கெட்ட வார்த்தைலெ ஏதோ சொல்லிட்டு பைத்தியக்காரப் பையன்னு சொன்னான். . பேரும் சொன்னான். . நீ பாக்கறதுக்கு என் தம்பி மாதிரியே இருக்கடா. . "

"அடப்போடி. ." என்று எதையோ சொல்ல முனைந்தவன், தொண்டைவரை வந்ததும் விழுங்கிக் கொண்டான். நாசி ஆயாம் உணவின் வாடை அவனைச் சமரசம் செய்துவிட்டிருக்கலாம்.

செல்லம்மாளின் வீட்டிற்கு 3 முறைதான் தம்பிவேணு சென்றிருக்கிறான். எவ்வளவோ வற்புறுத்தியும் வீட்டின் வாசல்வரை வந்து அமர்ந்துகொள்ளவே தம்பிவேணுவால் இயன்றது. செல்லம்மாள் தையல் இயந்திரத்தில் கால்களைக் கொண்டு இலகுவாக இயக்க அவளின் கைகள் ஒரு தியானத்தின் ஒருமைக்கேற்ப எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொண்டிருந்தன. தம்பிவேணு வயிறு நிரம்பச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"இனிமே யாருகிட்ட துணி தைக்கறது? பக்கத்துக் கம்பத்துக்குத்தான் போகணும். . யேன்ப்பா பொணத்தெ எப்ப எடுக்கறாங்க? என்ன ஒரு சொந்தக்காரப் பையனும் இல்லையா?"

"தூ. ." வாயில் எதையோ முனகிக் கொண்டே தம்பிவேணு வீட்டிலிருந்து கிளம்பி வேகமாக நடக்கத் துவங்கினான். அதற்கு மேல் அவனது இருப்பு ஓர் ஆபத்தாக முடிந்துவிடும் என்று அஞ்சியவன், அங்கிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதாகத் தீர்மானித்துவிட்டு உடலின் நடுக்கோட்டிலிருந்து தளர்ந்து தொங்கிய அரைக்கால் சட்டையைத் தூக்கி சரிசெய்துகொண்டான். வெயிலின் உக்கிரம் அவனுடைய உடல் முழுக்க பரவ, கால் பாதத்தில் கடுமையாகச் சுட்டது. வெயிலை மிதித்துக் கொண்டு தனது சக்திகளைத் திரட்டி நடையை வேகப்படுத்தினான். பெரிய சாலைக்கு வந்ததும் பசி அதிகமானது. எல்லாமும் எப்பொழுதும் போல நகர்ந்துகொண்டும் விரைந்துகொண்டும் நேர்த்தியாகக் காட்சியளித்தது. சாலையை வலதுபக்கமாகக் கடந்து சீனக்கடைக்கு நடந்துகொண்டிருந்தான் தம்பிவேணு.

கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com
நன்றி: உயிரோசை வார இதழ்

Tuesday, August 4, 2009

மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்



1

சொற்கள் உடைந்து தவறியப்போது
ஒவ்வொரு சொற்களின் வலைவுகளிலும் நெளிவுகளிலும்
சிறு சிறு துண்டுகளென நான் சேர்க்கப்பட்டிருந்தேன்.
கோழைத்தனமாக அதிகாரத்திற்குப் பயந்தபோது
அறைக்குள் நெளிந்து துடித்தழுதபோது
தோல்விகளைக் கண்டு உலர்ந்து கிடந்தபோது
சோம்பலில் நாள்முழுக்க உறங்கிக் கிடந்தபோது
மூத்தவர்கள் காறி உமிழ்ந்து வசைகளை எறிந்தபோது
நண்பர்கள் தூரோகியென விரட்டியடித்தபோது
கதைகளுக்கும் கவிதைகளுக்கும் வார்த்தைகள் தேட அவைகள்
எட்டி நின்று என்மேல் வெறுமையை கரைத்தபோது
என் முகமும் அகமும் அருகாமையின் கலைநேர்த்தியுடனும்
ஒழுங்குகளின் மிகைவடிவங்களுடனும் புகைப்படங்களென
சொற்களுக்குள் சேமிக்கப்பட்டிருந்தன.

சொற்கள் உடைவதில் ஒரு சந்தர்ப்பமென
பல அதிசயங்கள் நிகழலாம்.
அவற்றுள் என் ஆல்பமும்
என் முகங்களும்
பிறர் மிதித்துச் செல்ல
மிக அதீதமான வசதியுடன் சாலைகளில்
சில துரோகங்களையும் சில அவமானங்களையும்
முகப்புகளென அடியொட்டி
இலவசமாக கிடைக்கும்.
குறைந்தபட்சம் விலை அதிகமுள்ள
காலணிகளுடன் வாருங்கள்.

2

பிறரின் வசதிகளுக்கேற்ப
எனது ஆல்பம்
தயாரிக்கப்பட்டது.
முதல் பக்கத்தில் உங்கள் பெயர்களைப்
பதிவிட மறவாதீர்கள்.
மேலும் கடைசிவரை ஆல்பத்தைப் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்கு
என் முகம் பதித்த ஒரு குறுந்தட்டு
இலவசமாகக் கொடுக்கப்படும்.
நீங்கள் விரும்பும்படி சிதைத்துக்கொள்ள.


3

திரையரங்குகளிருந்து படம் முடிந்ததும்
வெளியே சிதறுபவர்களுக்கு
எனது சிதைந்த ஆல்பத்தைப் பார்ப்பதில்
அவசரமிருந்தது.
கைகளுக்கெட்டிய என் புகைப்படங்களை
இலகுவாகக் கிழித்தெறிந்துவிட்டு நகர்ந்தார்கள்.

வேலை முடிந்து “மாமாக்” கடையில்
ஒரு கோப்பை தேநீர் அருந்திவிட்டு வந்தவர்கள்
ஒரு சோம்பலான அசைவுகளுடன் வெறுமனே
என் ஆல்பத்தை எத்திவிட்டு சிறு பரவசத்துடன்
நடந்தார்கள்.

தமிழ் இலக்கியக்கூட்டம் முடிவடைந்து
ஆவேச சொற்களுடன் பொங்கியபடியே வந்த ஆர்வலர்கள்
என் ஆல்பத்தின் ஆபாசங்களைக் கண்டு
நடுங்கி கொதித்தெழுந்து
வீரியமடைந்த மறுகணத்தில்
கொத்தி கொத்தி தின்றார்கள் மீதமிருந்த
புகைப்படங்களை.


4

இவ்வளவு சம்பவங்களுக்கும் சிதைவுகளுக்குப் பிறகும்
மேலும் கலர் படங்களுடன்
இலவசமாகவே கிடைக்கும்
எனது முகங்களையும் அகத்தின்
புகைப்படங்களையும் கொண்டிருக்கும்
ஆல்பம்.


கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Saturday, May 30, 2009

ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்

எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில் படுத்துக் கொண்டு நம்மைப் பார்த்துக் காரணமே இல்லாமல் குரைக்கும் சொறி நாய் போல அவன் என் முன் அமர்ந்திருந்தான்.

அவனது சொற்களால் அதற்குச் சில நியாய ஒழுக்கங்களைக் கட்டமைத்து என்னை மறு உற்பத்தி செய்ய முயல்கிறான். அவனுக்குப் பல வருடங்களாக இது மாதிரியான வேலைகளில் ஆர்வமும் உள்ள உந்துதலும் அதிகம்.

1

கடவுளை முன் வைத்து ஒரு முட்டாள் சொன்ன சில விஷயங்களை அவனிடம் ஒரு மாலைப் பொழுதில் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். இருவரும் தெருவோரமாக நின்றுகொண்டு சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சல்களைக் கவனித்துக் கொண்டே சிறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம்.

“கடவுள் நம்முடன் அமர்ந்துகொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நாம் காய் நகர்ந்த்தும் நுட்பங்களை அவதானித்து, நமக்கு சவால்களை ஏற்படுத்தி நமது மன வலிமையை மதிப்பீட்டுக் கொண்டிருக்கிறார்” என்றான்.

அவன் முகத்தில் காரி துப்பினேன். என்னை மிகவும் மோசமான தோரணையில் எட்டிப் பார்த்துவிட்டு முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டான்.

“காகம் மேல பறக்கும்போது அது கடவுள் மீது காக்கா பீ போட்டுவிட்டுப் போனாலும், கடவுள் அமைதியாகத்தான் இருக்கிறார், பக்தன்தான் பரபரப்புக்குள்ளாகுகிறான். உனக்கு மன நோய். யாரையாவது பார்த்து சீக்கிரம் மருத்துவம் செய்து கொள்”

அவன் ஏதோ வேதாந்தி போல சில்லறைத்தனமான கருத்துகளில் பேசிக் கொண்டிருந்தான். அவனது உரையாடலை இரத்துச் செய்துவிட்டு அவனது அசட்டு கடவுள் உவமைகளில் சலிப்புத் தாங்க முடியாத தடுமாற்றங்களை அவனிடம் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டு ஓங்கி அறையலாம் என்று தோன்றியது.

“கடவுள் எப்பொழுதும் நம் முன்னுக்கு ஒரு கயிறைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார், அதைக் கவனிக்காமல் நாம் நம் வேலையில் சல்லாபித்துக் கிடக்கிறோம், அதைப் பிடித்துக் கொண்டு மேலே வா என்ற கடவுளின் உதவும் கரத்தை நாம் கண்டுக் கொள்வதே இல்லையே” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

நான் முதல்முறையாக அப்பொழுதுதான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். எதிரே வந்த காரின் மீது விழுந்து வைத்தேன்.

2

மீண்டும் ஒரு மழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுதியில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. கையில் ஏதோ ஒரு வேதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு விடுதியின் வாசலில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான்.

“வாங்க. . உங்க கடவுள் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.

“நல்லாயிருக்கிறார். .அவ்வப்போது வயிறு பிரச்சனை என்பதால் இப்பொழுதெல்லாம் மலக்கூடத்தில்தான் இருக்கிறார்” என்றேன். எங்குப் பார்த்தாலும் ஒரு தமிழ் தூயவனாக தூயத் தமிழில் உரையாடக்கூடியவனாகத்தான் அவனைப் பார்க்கிறேன்.

“கடவுள் மலத்தின் அதிபதியும்கூட. . தேவையற்ற செத்துப் போன சேர்க்கைகளை இராசாயணத்தின் உந்துதளில் வெளியே தள்ளுகிறார் கடவுள். . . உங்களின் எந்த வசைக்குள்ளும் சிக்காமல் தப்பிக்கும் அளவிற்குக் கடவுளுக்குப் புத்தியுண்டு” என்றான்.

சொற்கள் நாவின் நுணிவரை வந்துவிட்டன. விடுதியின் மேல் மாடி அறையில் அவன் தங்கியிருப்பதாகவும் இன்று இரவு முழுவதும் கடவுளை ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் கூறினான்.

“என்ன ஆராய்ச்சி?”

“இது கொஞ்சம் அறிவியல்பூர்வமான உடற்கூறுகளின் அடிப்படையில் மானுட தந்தையின் ஆண்மையை ஆராய்ச்சி செய்யப் போகிறேன்” என்றான்.

“புரியவில்லையே” என்று அவனது அசடுகளைத் தாங்க முடியாமல் உறுமினேன்.

உற்பத்தி ஆய்வில் ஈடுபடத்தான் என் வீட்டிலிருந்து 900 கிலோ மீட்டர் தள்ளி வந்திருக்கிறேன். இன்று இந்த ஆராய்ச்சியின் மூலம் கடவுளைக் கொள்ளப் போகிறேன். கடவுள் என் கையில்தான் சாகப் போவதாக வரம் வாங்கிவிட்டார் போல” என்று கொஞ்சம் முரண்பாடாகப் பேசினான்.

“உன் கடவுளை ஏன் நீயே கொள்கிறாய்?”

“பிறகு? ஒருபோதும் உன்னைப் போன்ற அன்பே சிவம் ஆட்களிடம் என் கடவுளை நன் ஒப்படைக்கப் போவதில்லை. வளர்த்துவிட்ட எங்களுக்குத்தான் கடவுளின் மீது அத்துனை உரிமைகளும் உண்டு. ஆதலால் இன்று இரவு நகரத்திலிருந்து 25 மைல் தள்ளியிருக்கும் இந்த மரணித்த விடுதியில் 12ஆவது மாடியில் வைத்து கடவுளை நான் கொலை செய்யப் போகிறேன். சாட்சி நீ மட்டும்தான். வெளியே சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று சொல்லிவிட்டு கைகளை நீட்டினான்.

“உன் கை ரேகையில் என் சத்தியத்தை ஒளி வைத்துக் கொண்டு நீ செய்யப்போகும் அப்பாவித்தனமான கொலைக்கு ஏன் என்னை உடந்தையாக்குகிறாய்? எப்படியோ போ. எனக்கு கவலையில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து 6ஆவது மாடிக்கு நகர்ந்தேன். அவன் ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். கடவுள் சம்பந்தபட்ட கொலைக்கு முன்பதாக சொல்லப்படும் மந்திரமாக இருக்கலாம்.

3

சரியாக மணி 11-ஐ கடந்திருந்தது. உறக்கமே பிடிக்கவில்லை. மெத்தையில் ஒரு நத்தையின் போன்ற நகர்வுக்கு ஒப்பாக உறக்கம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் எப்படிக் கடவுளைக் கொள்ளப் போகிறான்? எங்கிருந்து தொடங்குவான்? அவனது அறைக்குப் போய் அவனது கொலையைப் பார்க்க மனம் அள்ளல்படுத்தியது. போகலாம் ஆனால் அவனைப் போன்ற உற்பத்தியிலும் மரணத்திலும் ஆர்வம் உள்ளவனைத் தனிமையில் அவனது அறையில் சந்திக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

கடவுளின் மரணத்தில் கண்டிப்பாக ஏதாவது விந்தை நிகழலாம். உலகமே அறியும்படியான ஒரு வெளிச்சம் பரவலாம். அல்லது நாய் ஒன்று சாக்கடையில் “ஒன்னுக்கு” போவது போன்ற சம்பவமாக முடிவடைந்துவிடலாம். சன்னலைத் திறந்து காத்திருந்தேன். எப்பொழுது கடவுள் இறப்பார் என்று.

திடீரென்று சொல்ல முடியாது, மிக நிதானமாகவே ஏதோ உயரத்திற்கு எனது நிலப்பரப்பு வளர்வது போல ஒறு பிரமை தட்டியது. என் 6ஆவது அடுக்கு மெல்ல வளர்ந்துகொண்டே உயரத்திற்குச் சென்றது. அப்பொழுது கடவுளின் கொலையைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடவுள் தரையை நோக்கி போய்க்கொண்டிருந்தார். காற்றின் அழுத்தம் தலை முடியை உடைத்து பின்னுக்குத் தள்ளியது. கடவுளுடன் நானும் அவரது மரணத்தை நோக்கி உள்நுழைந்தேன். கடவுள் தலைகீழாக தனது உக்கிரங்களை கரைத்து மண்டை வழியாக உருவெடுத்த பிளவின் ஊடாக வெளியாக்கினார். இன்னும் சிறிது தூரம்தான் கடவுளின் மரணம். தரை. உலகம் கடவுளை அறுக்கப் போகிறது. கடவுளின் பிராந்தியங்களைத் துண்டிக்கப் போகிறது உலகம்.

4

“அன்புள்ள நண்பர் முகிந்தாவுக்கு. நான் இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடிதம் இது. பைத்தியக்கார நாயின் கடிதம் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது நானோ அல்லது கடவுளோ இறந்திருக்கக்கூடும் அல்லது இருவரும். அதனால் என்னைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு இதில் ஆர்வம் இருக்கப்போவதில்லை. என்னைப் பற்றியும் என் பைத்தியக்கார பொழுதுகள் பற்றியும் நீ உன் நண்பர்களிடம் சொல்லி இரக்கப்படப் போகிறாயா அல்லது தோற்றுப்போன என் ஆராய்ச்சிகளின் மீது காரி துப்பப் போகிறாயா என்று எனக்கு தெரியவில்லை.

உனக்காவது என் ஆய்வு பற்றி தெரிய வேண்டுமென்றுதான் உன்னை நான் அடிக்கடி தொடர்புக் கொண்டேன். ஆனால் நீயோ என்னைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டே இருந்தாய். புறக்கணிப்பு எவ்வளவு வலி என்று உனக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு கழிச்சடை நீ.

நான் தொடர்ந்து கடவுளிடம் விவாதித்தேன். பல நாட்கள் அவருடன் உரையாடலை மேற்கொண்டேன். பல விவாதங்களில் கடவுள் தோல்வியுற்று என்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தார். இறுதியாக நீ வாழத் தகுதியற்றவன் என்று நானும் கடவுளும் முடிவுக்கு வந்துவிட்டோம். நீ இந்த உலகத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் சுற்றித் திரிந்து அலைந்து சம்பாஷனைச் செய்து கொண்டிருப்பதைக் குறித்து எனக்கும் கடவுளுக்கும் கடும் கோபம். உன்னை வளரவிடுவதில் கடவுளுக்கு ஆர்வம் இல்லை. நீ இன்னும் பல மனிதர்களைக் காயப்படுத்தக்கூடியவன் என்கிற தீர்ப்புக்குக் கடவுள் உடன்பட்டுவிட்டார்.

பிரபஞ்சத்தில் நீ எறிந்த வார்த்தைகளுக்கு நீ பொறுப்பேற்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. உனது கடும் வார்த்தைகள் பிரபஞ்ச வெளியின் தனிமைகளை உசுப்பிவிட்டதால் நீ மரணிக்க வேண்டும் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். வரும் ஞாயிறன்று உனக்கான மரணம் ஒரு உன்னைத் தேடி வரும். அப்பொழுது மழைப் பெய்துகொண்டிருக்கும். உனது விடுதியின் அறையை ஒருவன் கடவுளுக்குக் காட்டிக் கொடுப்பான். அங்கிருந்துதான் நீ உனக்கான வெளியை இழக்கத் துவங்குவாய். இனி நீயும் உன் கடவுளும். வணக்கம்.

“அன்பே சிவம்”

இப்படிக்கு

கடவுள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

சிறுகதை : என் தோழியின் இருப்பு - உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்கான படைப்பு


1


முதல்முறையாக அவளுடைய பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வித்தியாசமாகத்தான் தோன்றியது. அன்று மிகவும் நெருக்கமாக இருந்த பெயர்தான் இன்று ஏதோ வேற்று தேசத்துப் பெண்ணின் பெயரைப் போல விலகியிருந்தது. நான் வீட்டிலில்லாத சமயத்தில் அவள் எப்படியோ என்னுடைய வீட்டைத் தேடி வந்து கொடுத்துவிட்டுப் போனதுதான் இந்தத் திருமணப் பத்திரிக்கை. அவளுடைய பெயர் மலர்கொடி.

அந்தப் பெயரை உச்சரிக்கும் போது, அவளுடைய ஞாபகங்கள் கொடியைப் போல மனதில் ஊர்ந்து சென்று பல திசைகளில் கிளைவிட்டு இறந்தகாலங்களை வெறித்து நிற்கிறது. மலரைப் போலத்தான் இருப்பாள். சாதரணமாக சொல்வதென்றால் அப்படித்தான் உவமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மலர்கொடியைக் கடைசியாக ஏதோ ஓரு கோயில் திருவிழாவில் தற்செயலாகப் பார்த்தும் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தோடுதான் நினைவுப்படுத்திக் கொள்ள முடிகிறது. அவள் அவளாகவே இருந்தால், நான் மட்டும் அவளுடைய ஞாபகங்களைச் சுமந்து திரியும் பத்து டுவா சிறுவனாகவே இருந்து வருகிறேன்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் அவளைப் பார்த்தும் பேசுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காமல் போனதற்கு, திருவிழாவின் கூட்ட நெரிசலை பொய் சமாதானமாகக் கூறிக் கொள்ளலாம். உண்மையில் கூட்டம் நெருக்கிக் கொண்டுதான் இருந்தது. மஞ்சள் பஞ்சாபி உடையில் அவள் அவளாகவே இருக்கிறாள் என்று நான் நினைத்துக் கொண்டது போன்ற தோற்றத்துடன் 5 நிமிடத்திலேயே என்னைக் கடந்துவிட்டாள்.

“டேய் மலர் மாதிரி இருக்குடா, அங்க பாரு மஞ்ச கலரு”

“பாத்தெண்டா, மலரு என்னெ பாக்கலெ போல, மலர்தானே?”

“நல்லா பாருடா, அதுதான். என்னாடா ஒனக்குப் போயி சரியா தெரிலனு கேக்கறெ?”

நான் அர்த்தப்பட்டுக் கூறியவை அருகாமையில் இருந்த நண்பனுக்கு குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் என் மனதில் சேமித்து வைத்திருந்த மலர் இவளாக இருக்க முடியுமா? அவளுடைய தோள்களில் கையை சாத்திக் கொண்டு கூடவே ஒரு வாலிபன் நடந்து கொண்டிருந்தான். முரட்டுத் தோற்றம் அவனுக்கு. மலரை எடுத்து மாட்டுக் கொம்பில் சூட்டியது போன்ற உவமைச் சிறப்பாக இருக்கும் போல. சிறிது நேரத்தில் கூட்ட நெரிசலில் அவள் அந்த மலர்கொடி, இவ்வளவு காலம் நான் பார்க்க தவறிய என் மலர்கொடி, காணமல் போய் கொண்டிருப்பதைக்கூட உணர முடியாமல் நானும் கூட்டத்துடன் கூட்டமாக எதிலிருந்தோ நழுவிப் போயிருந்தேன். அவளுடைய முகம் முன்பு போல இல்லை. வெளிரிப் போயிருந்ததை மட்டும் வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்ள முடிந்தது.

“என்னாடா மச்சான், தெரியாத மாதிரி இருந்துட்டெ? ஒனக்குனு சின்ன வயசு கூட்டாளி அவ மட்டும்தானெ? எப்பவும் சொல்லி பெருமைபட்டுக்குவே. யேண்டா நீங்க பேசிக்க மாட்டிங்களா?”

“அவுங்க பத்து டுவாலேந்து போயி பல வருசம் ஆச்சுடா. நாந்தான் ஒங்ககிட்டலாம் சொல்ல மறந்துட்டென் போல, ஒனக்கு என்னா தெரியாதா? எங்கடா அவுங்க குடும்பம் இப்ப அங்க இருக்கு? முன்ன ஒரு தடவெ சுக்குல் போட்டி வெளையாட்டுக்குப் போயிருந்த போது பாத்தென், 16வயசு இருக்கும். வந்து பேசுனுச்சு. எப்படி இருக்கேனு கேட்டுச்சி. அப்பறம் சாதரணமா விலகிப் போச்சுடா”

“அதுக்கப்பறம் நீ பாக்கவெ இல்லையாடா?”

“சந்தர்ப்பம் கிடைக்கலடா. . எங்கயும் தேடாமலே இருந்துட்டேன்.”

உண்மையில் நான் மலர்கொடியைத் தேடாமல் இருந்ததுதான் ஆச்சர்யம். அவள் பத்து டுவா கம்பத்திலிருந்து வெளியேறும் போது எனக்கு 10வயது அவளுக்கு 9 வயது. வயது வித்தியாசம் பார்க்காமல் வாடா போடா என்றுதான் கூப்பிடுவாள். வயது வித்தியாசம் தெரியாமல்தான் நாங்களும் 5வயதிலிருந்து வளர்ந்து வந்தோம். அவளுடைய அப்பாவின் சிவப்பு கார் இன்னமும் என் நினைவுகளில் மலர்கொடியைச் சுமந்து கொண்டு நான் தொட முடியாத தூரத்திற்குப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காரில்தானே அவள் குடும்பமே இடம் பெயர்ந்து போனார்கள். வீட்டு ஜன்னலில் தலையைக் கவிழ்த்தபடி அந்தக் கார் இருந்தும் இல்லாமல் போகும் தொடக்கத்தையும் பிறகு இல்லாமலே போன சூன்யத்தையும் காட்சி பிசகாமல் பார்த்துக் கொண்டே பல வருடம் கடந்துவிட்டேன்.

இன்னமும் அவள் அந்தக் காரில்தான் சென்று கொண்டிருக்கிறாள். மலர்கொடியை அந்தக் காரிலிருந்து இறங்கவிடாமல் செய்வது, அதே ஜன்னலில் இன்னமும் வயதைக் கடக்க முடியாமல் நின்று கொண்டிருக்கும் அந்த 10 வயது சிறுவனான ‘நான்தான்’. காலங்கள்தான் சில விஷயங்களுக்கு மருந்து என்பார்கள், ஆனால் எனக்கென்னவோ காலங்கள் மறுத்துப் போனவையாகத்தான் தெரிகிறது. மலர்கொடியும் நானும் சேர்ந்து சுற்றி விளையாடிய பத்து டுவா கம்பம் இன்றும்கூட அப்படியேதான் இருக்கிறதாக மனதில் படுகிறது. மலர்கொடியைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கலாம். அவள் என்றுமே சுவார்ஷயம் குறையாமல்தான் எனக்குள் குவிந்து கிடக்கிறாள்.

2

பத்து டுவா கம்பத்தில் இருக்கும்போது என் பக்கத்து வீட்டிற்கு ஒர் இரவு பொழுதில்தான் மலர்கொடியும் அவளின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். இரவு நெடுக பக்கத்து வீட்டில் பொருள்களை அடுக்கும் ஓசையும் மேசையின் கால்கள் தரையில் நகரும் ஓசையும் மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தது. என் வீட்டு குசுனி பக்கமாக நின்று பார்த்தால் தகறத்தின் சந்திலிருந்து மலர்கொடியின் வீட்டின் அடுப்பு வைக்கும் சிமெண்டு கல் சின்னதாய் தெரியும். அந்தச் சந்திலிருந்துதான் மலர்கொடி அவளுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு தலையைச் சோர்வாகத் தோளில் சாய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அன்றிலிருந்துதான் மலர்கொடியை எனக்குத் தெரியும். ஓரிரு நாட்கள் அவள் குசுனியில் அழுது அரற்றிக் கொண்டிருப்பதையும் பிறகு அம்மாவின் முதுகில் ஏறிக் கொண்டு கால்கள் இரண்டையும் உதறிக் கொண்டு இருப்பதையும் அதே சந்தின் வழிதான் பார்த்தேன். ஒரு நாள் சந்தின் அளவு விரிந்து அவளை வீட்டின் பின்புறக் கதவின் விளிம்பில் முதன் முதலாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டேன். முதலில் குருகுருவென்று பார்த்துவிட்டு பிறகு சடாரென்று உள்ளே நுழைந்து கதவை அடைத்துவிட்டாள்.பெருத்த ஏமாற்றத்துடன் வயலை நோக்கி சாவகாசமாக நின்றுகொண்டிருக்கும் அந்தக் கதவின் அருகில் பரிதாபமாகச் சம்மனமிட்டு அமர்ந்திருந்தேன். எப்பொழுதும் அப்படி அமர்வது வழக்கம்தான்.

மறுநாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, என் வீட்டு எதிரிலுள்ள புளியமரம் ஓரம் சரிந்து கிடக்கும் பழைய ஊஞ்சலில் ஏறி குந்திகாலிட்டு அமர்ந்து கொண்டு எங்கள் வீட்டின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வெளியே வந்து நின்றதும் முதலில் வழக்கம் போல குருகுருவென்று பார்த்துவிட்டு, சிறிது நேரத்தில் மென்மையான சிரிப்பும் அவளிடமிருந்து வெளிப்பட்டது. நானும் பதிலுக்குச் சிரித்து வைத்தேன். மலர்கொடி என்னிடம் பேசிய முதல் வார்த்தை, அந்தப் புளிய மரத்தின் அடிவாரத்தில்தான் நிகழ்ந்தது.

“இது ஒங்களோட ஊஞ்சளா?”

அன்றிலிருந்து மதிய நேரம் தொடங்கி அவ்வப்போது சாய்ங்காலமும் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் தடமாக அந்தப் பழைய ஊஞ்சள் மாறிப் போனது. புளிய மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி முதல் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய பழைய சைக்கிள் வரை எங்களுடைய உரையாடல் வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றி நீளும். என் அம்மாவோ அல்லது மலர்கொடியின் அம்மாவோ அழைத்தால்தான் ஊஞ்சளிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடுவோம். அவள் அவளாகவே இருந்தாள், நான் மட்டும்தான் அவளுக்காகவே என் இருப்பைத் தயார்படுத்திக் கொண்டே போகிறேன் என்பதெல்லாம் அப்பொழுது என்னால் உணர முடியாத விஷயங்கள்.

என் வீட்டுப் பின்புறத்தில் தலை கவிழ்ந்து கிடக்கும் சைக்கிளை அவளுக்காகத்தான் முதன்முறையாக வெளியில் எடுத்துச் சுத்தப்படுத்தினேன். நான் அவளுக்காக எடுத்து வந்த முதல் பொருள் ஒரு சாதரண பழைய சைக்கிள்தான். இருவரும் அதில் ஏறிக் கொண்டு தோ தாத்தா வீட்டுப் பக்கமாக சென்று விளையாடுவோம். ஊஞ்சளுக்கு சிறகு முளைத்திருந்தால் அது முதலில் தோ தாத்தா வீட்டுப் பக்கம்தான் போயிருக்கும் அல்லது சைக்கிளாகத்தான் மாறியிருக்கும். எங்களுடைய தடம் ஊஞ்சளிலிருந்து விலகி சைக்கிளுக்கு மாறியது.

அவள் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு, அவளுடைய இங்கிலிஸ் கவுனை கொஞ்சம் மேலே தூக்கி சொருகிக் கொள்வாள். நான் பெரிய யூ.டி.சி (எங்கள் இடத்தின் பழைய பேருந்தின் பெயர்) ஓட்டுனர் போல கம்பீரமாகச் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பேன். எங்களுடைய பயணம் வெகு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்து கொள்ளும் தூரம்தான் செல்லும் ஆனால் எங்களின் அந்த நேரமானது பட்டாம் பூச்சியாய் பல திசைகளில் எங்களைச் சுற்றி சிறகடித்துக் கொண்டிருக்கும்.

“எங்க போனம்?”

“என்னயெ கோலாலம்பூர்ல எறக்கி உடு”

அப்பொழுதெல்லாம் என் கம்பத்து வீட்டின் பின் புறத்தில்தான் கோலாலம்பூர் இருந்தது. அதாவது என்னுடைய மலர்கொடியின் கோலாலம்பூர். அவளைக் கோலாலம்பூரில் இறக்கிவிட்டு இல்லாத பயணிகளைப் பாசாங்குதனமாக ஏதேதோ ஊர்களில் இறக்கிவிட்டுக் கொண்டே போவேன். பிறகு பேருந்து(என்னுடைய பழைய சைக்கிள்) மீண்டும் கோலாலம்பூருக்குப் போய் சொல்லி வைத்தாற் போல மலர்கொடியை ஏற்றிக் கொண்டு 3 நிமிடத்திலேயே சுங்கைப்பட்டாணியை வந்தடைந்துவிடும். இது கோமாளித்தனமான விளையாட்டாக அப்பொழுது எங்களுக்குத் தெரிந்ததில்லை. இன்றும்கூட அது கோமாளித்தனமான விளையாட்டாக எனக்குத் தோன்றவில்லை. நான் இன்னமும் அந்தப் பழைய சைக்கிளில் மலர்கொடிக்காகக் காத்திருக்கிறேன். அவள் என்னுடைய கம்பத்து வீட்டின் பின்புறக் கோலாலம்பூரில் இருக்கிறாள். என்றாவது என் பேருந்து அவளுக்காக அந்தக் கோலாலம்பூர் போகும் என்று கறபனையில் கொஞ்சம் நம்பிக்கைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.

அங்கிருந்த சமயங்களில் நானும் மலர்கொடியும் எங்கள் வீட்டையும் வீட்டின் பின்புறத்திலுள்ள வயலையும் சுற்றித் திரியத் தொடங்கிய காலக்கட்டம்தான் மறக்க முடியாததாக இருந்தது. வயல்பரப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும், மேலும் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் மத்தியில் நடப்பதற்கான பாதையும் இருக்கும். எப்படியோ அந்தப் பாதையில் நடந்து போய் வீட்டிலிருந்து பல மீட்டர் தூரம் விலகி வந்து வீட்டை நோக்கி பார்த்துக் கொள்வோம். வீடு மிக தொலைவில் சிறு புள்ளியாய் தெரியும் போது மலர்கொடி துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்துக் கொள்வாள்.

“டேய் அங்க பாருடா. . நம்ப வீடு கண்ணுக்கெ தெரியுல. ஐஐஐஐ ய்ய்ய்யா. . நம்ப வீட்டுக்குப் போக வேணாம். எங்கம்மா நல்லா தேடட்டும்”

“ஏய் மலரு, ஒங்கம்மா ஒன்ன போட்டு அடிப்பாங்க. வா போயிறலாம்”

“யேன் ஒங்கப்பா ஒன்ன அடிக்க மாட்டாறா? ஒனக்கும்தான் அடி உழும். ரெண்டு பேரும் சேந்து வாங்கலாம்டா, இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்”

“மலரு நீ யேன் சொன்னா கேக்கவே மாட்டறெ?”

“பொம்பளை பிள்ளிங்கனா அப்படிதான், நீ சும்மா இரு”

மலர்கொடிக்கு அப்பொழுது 8வயதுதான் ஆனால் அவள் பேசிய சில வார்த்தைகள் இன்னமும் முதிர்ச்சி குன்றாமல் அப்படியேதான் என் காதுகளின் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்டா” என்று கூறியவள் என்னைப் பாதியிலே இந்த நினைவுகளுக்குப் பறிகொடுத்துவிட்டுப் போனதுதான் எஞ்சியது. அந்த வயல், நாங்கள் பார்த்து ஏங்கிய தூரம், சிறு புள்ளியாய் தெரிந்த வீடு, வயல் பாதைகள் எல்லாமும் அந்த சின்ன வயசு மலர்கொடிக்காக சுவார்ஷயம் குறையாமல் எனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தனை வயதாகியும் இன்னமும் குசுனி பக்கமாக வந்து நிற்கும் பொழுது, சந்தின் வழியாகப் பார்ப்பேன். வெறும் இருள் மட்டும்தான் சுருங்கிக் கிடந்த போதும் மீண்டும் மீண்டும் அந்த இருளுக்குள்ளிருந்து தெரியும் மலர்கொடியின் சின்ன வயசு இங்கிலிஸ் கவுனுக்காக இருளைப் பார்த்தே ஏமாந்து போவேன்.


3

`“யேண்டா, அந்த மலரு பிள்ள கல்யாணத்துக்குப் போயிட்டு வரனும், மறந்துறாத. வீட்டுக்கு வந்து கொடுத்துட்டுப் போனுச்சு”

நாற்காலியில் அமர்ந்து கொண்டு அம்மா கூறிவிட்டுப் போனதை மெல்ல சுவீகரிக்கத் தொடங்கினேன். நிச்சயம் மலர்கொடி கல்யாணத்திற்க்குப் போய்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பத்திரிக்கையில் அவளுடைய பெயர் அழகாகத் தெரிந்தது. அவள் பெயர் மட்டும்தான்.

“மலரு நான் ஒன்னுக்குப் போவ போறேன், பாத்துக்க யாராச்சம் வராங்களானு”

“டேய் அசிங்க பிடிச்சவனே, அங்கயா நீ ஒன்னுக்குப் போவ?”

எங்கள் வீட்டின் ஜன்னலிலிருந்து கொஞ்சம் எக்கிப் பார்த்தால் வயலை ஒட்டி நிற்கும் வாழை மரங்கள் ஒழுங்கற்ற நிலையில் தெரியும். அந்த மறைவில்தான் மலர்கொடியைக் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு நான் சிறுநீர் கழிப்பேன். அவள் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டு, எனக்குக் கேட்கும்படி கத்துவாள்.

“டேய் வெக்கம் இல்லாத பையன்டா நீ”

அவளும் வீட்டின் பின்புறச் சாக்கடையில் சில சமயங்களின் கால்கள் இரண்டையும் பரப்பிக் கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக அமர்ந்து கொண்டிருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று கொண்டு மீண்டும் வழக்கப்படி கத்தித் தீர்த்துவிடுவாள். இன்றும் நான்சுவர் மறைவில் சிறுநீர் கழிப்பதற்காக உடையைக் கலைக்கும் போது, அதே மலர்கொடி, எனக்குப் பின்புறத்தில் நின்று கொண்டு அதே தோரணையில் கத்துவது போலத்தான் இருக்கிறது.

“டேய் வெக்கம் கெட்டவனே. . இப்படியா ஒன்னுக்குப் போவாங்க?”

0 0 0 0 0 0

“டேய், வந்து சாப்டுடா. . டேய். .”

அம்மா மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார். எழுந்து நிமிரும் போது, தலைக்கு மேலிருந்து ஏதோ ஒன்று கழன்று கொண்டு வீழ்ந்தது போல இருந்தது. இலேசான தடுமாற்றம். பத்திரிக்கையைச் சரிப்படுத்தி என் அறை மேசையில் வைத்துக் கொண்டேன். அவளுடைய கல்யாணத்திற்கு இன்னமும் 5 நாட்கள் இருந்தன. என் மலர்கொடியை அல்லது நான் இன்னமும் சேகரித்து வைத்திருக்கும் அந்த பத்து டுவா மலர்கொடியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருப்பது சுகமாக இருந்தது. எனக்கென்று இருக்கும் ஒரேயொரு சின்ன வயசு கூட்டாளி அவள் மட்டும்தானே. அவள் அவளாகவே இருக்கட்டும் எனக்குள் மட்டும். அவளுக்கு இப்பொழுதுதான் 5 வயது, கால்களை உதறிக் கொண்டு அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருக்கிறாள்.


கே.பாலமுருகன்

மலேசியா

Friday, May 29, 2009

சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்

கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து வீழும் பறவையின் சிறகு போல சொக்கியிருக்கும். நீ நின்று கொண்டிருப்பது ஒரு சாமியாடியின் கோவில் என்பதைத் தெரிந்து கொள். நேராக நடந்து மலைமேட்டின் தொங்கல்வரை செல்.

மிக அருகாமையில் தெரியும், பிறகொரு சமயம் உன்னை அது எங்கோ இழுத்துக் கொண்டு போகும் மாயைப் போல தெரியும். சடாரென்று கோவிலின் கோபுரம் கண்களிலிருந்து மறைந்து கானல்போல வெறும் வெயிலாக மாறுவதாகத் தோன்றும். கொஞ்சமும் அக்கறைப்படாமல் விரைந்து ஏறு. மலையின் உச்சியை அடைந்ததும் உனக்கு உடல் முழுவது வியர்த்திருக்கும். உடனே அந்த வியர்வையைத் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு 5 நிமிடம் அங்கேயே காத்திரு. உடல் மீண்டும் நிதானத்திற்குத் திரும்பியதும் உடலிலிருந்து ஏதாவது துர்நாற்றம் வீசுகிறதா என்பதைத் தெரிந்து கொள். இல்லையென்பதை உறுதி செய்தபின் கோவிலை நோக்கி நட.

“4 நம்பர் சொல்லு. . டே. . சொல்லுடா. . 4 நம்பர்லே எல்லாமும் அடக்கம்டா. . பொணத்து மேல உக்காந்து மை எடுக்கற கலை அவ்ள சாதரணம் இல்லடா. . தலைச்சம் பிள்ளையோடெ முதுகெழும்புலேந்து எடுத்த மை”

“டே. . முரளி. . 4 நம்பர். . டே. . நம்பர் எடுக்கப் போலயா. . டெ. . ஆத்தா காவல் கொடுக்கற நேரம் காட்டுலேந்து தலையடி சாமியாருங்க கொழ பண்றானுங்க. . முரளி. .டே. . தூங்கறான் பாரு.. டே”

அறைக் கதவைத் திறந்த அம்மா இன்னும் கொஞ்சம் நகர்ந்து என்னை நெருங்கியிருக்கலாம். அவரின் அழைப்பு காதுக்குச் சமீபத்தில் கேட்கிறது. விழிப்புநிலையில் இருந்தும் எந்தப் பிரதிபலிப்பும் உடலில் இல்லை. வெறும் பிரக்ஞை மட்டும் அறையில் இருப்பதாக உடல் எங்கோ நழுவிவிட்டது போல. எங்கோ ஒரு மலைபிரதேசத்தின் அடிவாரத்தில் அல்லது சுடுகாட்டின் இருளில் இப்படி அதிசயமான மனநிலையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் அகத்தின் பாதியை அம்மாவின் அழைப்பு கயிறு போட்டு இழுக்கிறது. குரல்களால் நிரம்பிய ஒரு வெளிப்பரப்பு.

“டே. . என்னா பண்றான் இன்னும்”

அம்மா வந்து உடலைக் கொஞ்சம் பலம் கொண்டு தட்டினார். மலையிலிருந்து உருண்டு கீழே விழுவது போல திடீர் விழிப்பு. கண்களைத் திறந்திருக்கும் எனக்கு எங்கேயிருந்து இந்த விழிப்பு?

“என்னாடா ஒடம்பு இப்டி வேர்த்திருக்கு? ஏகோன் ஓடுது”

அறைக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தும் நான் மட்டும் அறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன்.

“போய் நம்பரு எடுத்துட்டு வாடா. . மணியாச்சி. சீனன் கடயெ அடைச்சிருவான்”

நிராகரிக்க இயலாத குரல்கள் எனக்குள் உதிர்ந்து ஏதோ ஒரு உருவகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. உணர முடிந்தது. தொண்டைக்குள்ளிருந்து என் அம்மாவின் முகத்தை எட்டிப் பார்த்து பிறகு மீண்டும் சலசலவென நீர்ப்போல உள்ளிறங்கி வயிற்றுப் பகுதியிலுள்ள செல்களை மோதுகின்றன.

“கெட்ட கனவு மாதிரி இருக்குமா”

“சரி. . சரி. . கெளம்பி போ”

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உடலெல்லாம் கூசியது. மோட்டாரை எடுத்துக் கொண்டு நம்பர் கடைக்குச் சென்றேன். அது ஒரு அலமாரி கடை. எல்லாம் பலகை அலமாரிகள். அந்தக் கடைக்குள் நுழைந்து உள்ளே இருட்டில் இருக்கும் ஒரு அறைக்குள் போனால், முதலாளியின் தம்பி பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பான். எப்பொழுதும் உத்தமன் போல வியாக்கியானம் செய்துகொண்டிருக்கக்கூடியவன். அண்ணனைப் பற்றி ஏதாவது குறைப்பட்டும் கொள்வான்.

“ஏசோக் யூ அடா கெனாலா நம்போர்”

நாளை எனக்கு நம்பர் அடிக்கப் போகிறது என்று சப்புக் கட்டினான் மலாய் மொழியில். அவனிடமிருந்து எதையும் கேட்கும் மனநிலையில் நானில்லை. 4 நம்பரை மட்டும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்தேன். அப்பாவின் கார் எண்கள். 7169. அவன் அதைப் பார்த்துவிட்டு ஏதோ முனகினான். அந்த அறையின் இருப்பு அமானுடமான சூழலை ஏற்படுத்துவது போல இருக்கும். தொலைவில் எறியும் சிவப்பு விளக்கும் அதன் உக்கிரமும் நமக்குள்ளும் தாவுவது போல ஒரு பிரமை.

“யூ மாவு தேங்கோக் போமோ சீனா? பொலே கென்னா நம்போர்லா”

சீன சாமியாடியைப் பார்க்கிறாயா? உனக்கும் அதிர்ஸ்டம் கிட்டுமென அவன் உதிர்த்த வார்த்தைகள் கனவில் சொல்வது போல தோன்றியது. எப்பொழுது வெளியே வந்தேன் என்று தெரியவில்லை. சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும்போது மோட்டாரில் சென்று கொண்டிருந்தேன்.

கிழக்குப் பார்த்த ஒரு திசையில் அடர்ந்த காட்டுப் பாதையில் ஓர் இருளில் நகர்ந்து கொண்டிருந்தேன். எங்கோ மலையின் உச்சியிலிருந்து உச்சாடனக் குரல்கள் சரிந்து அடிவாரத்தில் இறங்கி காடு முழுக்க பரவுவது போல ஒரு சப்த அதிர்வு. யாரோ என்னைக் கட்டி இழுத்துக் கொண்டுருக்கிறார்கள். தூரத்திலிருந்து அந்தக் குரல் ஏதோ முனகுகின்றது. அந்த முனகல் ஒரு மந்திரம் போல என்னை இயக்குகின்றது. ஒரு மரத்தடியைக் கடக்கும்போது அம்மாவும் அப்பாவும் அங்கு அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை நோக்கி என் வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன். வெறும் காற்று மட்டும் கசிகிறது எனக்குள்ளிருந்து.

“இங்கு வந்து உக்காரு. . உன் பேரு என்னா?”

“முரளிதரன்”

“முரளி. . நீ வந்து சேந்திருப்பது மலையடி சிவசக்தி கோயிலு”

“உனக்குள்ள 4 நம்பரே இறக்கி உங்க உலகத்துலே இருக்கற குரல்களெ சேகரிக்கனும். . நல்லா கேளு. . உன் வயித்துக்குள்ள முளைச்சிருக்கற சுடுகாடு ரொம்ப பயங்கரமானது. . செத்தவன் சும்மா இருக்கமாட்டான். . வெளிய வரப் பாப்பான். . அவன் வெறும் வார்த்தைகளால் உள்ளவன். . உன்ன பயன்படுத்தி ஒரு வார்த்தையா வெளிய வந்துருவான். . அவனுங்களே அடக்க எண்களால் மட்டும்தான் முடியும். . எண்களெ அழிக்கனும். . அது பற்றிய பிரக்ஞையை எல்லாரும் இழக்கனும். . அப்பத்தான் அந்தச் சுடுகாட்டுப் பிணங்கள் அடங்கும். நல்லா கேட்டுக்கெ நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டெ. .”

அறைக் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள். அப்பாவின் கைகள் என் மீது பட்டு என்னை எதுலிருந்தோ மீட்கின்றன.

“டே. . நேத்து எடுத்தியே நம்பரு அடிச்சிருச்சிடா”

கண்களைத் திறந்ததும் வீட்டிற்கு வெளியிலிருந்து நான்கு உருவங்கள் உள்ளே நுழைய காத்திருந்தன. எட்டிப் பார்த்தேன். அதிர்ந்து போவதற்குள் மீண்டும் அப்பாவின் குரல்.

“டே. . போயி சீனன்கிட்ட காசெ வாங்கிட்டு வந்துரு. எப்படியும் 2000 வெள்ளி கிடைக்கும்”

உடல் ஊனமுற்ற குழைந்தைகள் போல அந்த நான்கு உருவமும் வளைந்து நெளிந்து, சுருண்டு, தவழ்ந்த நிலையில் மனித உருவத்திலிருந்து பிசகிய ஓர் அசாத்திய தோற்றத்தில் இருந்தன. மயக்கம் தலைக்கு எட்டி ஓங்கி அடித்தது. மெல்ல அந்த நால்வரும் வீட்டிற்குள் நீர்ப்போல உருகி ஊர்ந்து நுழைந்து கரைந்தார்கள்.


2

அவ்வளவு தூரம் வந்து இன்னும் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதை வளைந்து வளைந்து எங்கோ போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது புதியதாக முதுகில் ஒரு வலி துவங்கியிருக்கிறது. முதுகு தானாக வளைந்து கொள்ளவும் செய்கிறது. பயண அசதியின் வெளிப்பாடாக இருக்கலாம். 14ஆம் எண் தோட்டத்தில் ஒரு சாமியாடி இருப்பதாகக் கூறியிருந்தார்கள். அவரைப் பார்த்து ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று தோன்றியது. பாதையின் இழுவைக்கேற்ப விட்டுக் கொடுத்தவனாக மோட்டாரில் நகர்ந்து கொண்டிருந்தேன். இரப்பர் தோட்டத்து எல்லைவரை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஒரு பாதை இலேசாக நெளிந்து காட்டுக்குள் ஓடியது. வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

“யாம்மா இங்க சாமியாடி இருக்காராமே. . அவர் வீடு எங்க?”

“அதோ அங்க இராமர் கோயிலு இருக்கே, அதுக்குப் பக்கத்துல முனியாண்டி சாமி கோயிலு இருக்கும் பாருங்க. . அங்கத்தான் அவரு வீடு”

உள்ளே நுழைந்ததும் அந்தச் சாமியாடி காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உறங்கிவிட்டிருந்தார். சங்கடத்துடன் இலேசாக அவருக்கு முன்னால் போய் முனகினேன். இல்லை, நான் முனகவில்லை. ஏதோ உள்ளுக்குள்ளிருந்து.

“வாங்க உக்காருங்க. . சாரி. . தூங்கிட்டேன். மத்தியானம் இப்படித்தான் சாப்டுட்டா தூக்கம் வந்திருது. . சொல்லுங்க என்னா விசயம்? ஏதாவது முடி கயிறு கட்டனுமா? இல்லெ பேயு ஓட்டனுமா?”

“சாமி. . என்னோட பிரச்சனயே வேற. . எனக்கு எப்பவும் ஒரு கனவு வருது ஆனா அந்தக் கனவு ஒவ்வொரு நாளும் வளந்துகிட்டே வருது. அன்னாடம் கனவுலே நான் ஒரே பாதையிலே ஒரே மலை உச்சிய நோக்கி போறேன். . அங்க ஒரு கோபுரம் தெரியுது. . சாமியாடி ஒருத்தர் இருக்காரு. . அவர் எனக்குப் புரியாத பல விஷயங்களே பேசறாரு”

“என்னப்பா ஏதோ கனவு கினவுனு புலம்பறே. . இந்த மாதிரி கெட்ட கனவுலாம் வர்றது சாதாரணம்தானே. . அதுக்கு என்னா. . ஒரு முடி கயிறு கட்டனா சரியா போயிரும்”

“இல்ல சாமி . . ஏதேதோ நடக்குது. என் வயித்துக்குள்ள ஒரு சுடுகாடு இருக்குனு அந்தச் சாமியாடி சொல்றாரு. . ஆனா என் வயித்துலேந்தோ இல்ல என் உடம்புக்குள்ளேந்தோ ஏதோ ஒன்னு இந்த வெளி உலகத்தெ எட்டிப் பாக்குது சாமி. .என்னால அதெ உணர முடியுது. கனவுலே நான் என் பயணத்தெ எங்க முடிக்கறனோ மறுநாள் கனவுலே அங்கேந்தே பயணத்தெ தொடர்றேன் சாமி. .”

“என்னப்ப உளர்றே? வயித்துக்குள்ள சுடுகாடா? அட நி ஒன்னு. சும்மா இதெல்லாம் ஏதாவது காக்கி சேட்டெ அடிச்சிருக்கும். காட்டுப் பாதையிலே போயிருப்பெ.இரு துன்னுரு தர்றேன். போட்டுக்கோ”

வந்த நோக்கம் எதற்கும் இடம் கிடைக்கவில்லை. சாமியாடி ஏதோ மந்திரம் ஓதி என் நெற்றியில் திர்நீரை அப்பினார்.

“தம்பி. . ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரியா தெரியறே. தூரத்துலேந்து பாத்தேன் உன் தலெ ரவுண்டா வலைஞ்சி உடம்புலேந்து வெளியே வந்துட்ட மாதிரி இருக்கு. தொங்கிப் போது. பாத்துப்பா. ரொம்ப குனிஞ்ச வேல ஏதாச்சம் செய்யறயா?


3

மலை உச்சியின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அந்தச் சாமியாடி ஒரு மஞ்சள் விளக்குப் போல கோவிலின் கோபுரத்து சுவரிலிருந்து பிளந்து உள்ளே ஊற்றினார். அவரின் உருவம் நீர்ப்போல உருவமற்ற நிலையில் பரவியிருந்தது.

“பயப்படாதெ! நான் உனக்குள் இருக்கும் ஆழ்மன பிரமை! இல்ல இந்தக் கோயிலோட முன்னால் சாமியாடி. எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. எங்கள் உலகம் உன்னெ பயன்படுத்தி பூமியில உள்ள எல்லாம் எண்களையும் மீண்டும் எடுத்துக்க போறோம். நீ எண்களால் உருவானவன். உன்னெ உன் வயித்துக்குள்ள இருக்கற பிணங்களெ திண்றதுக்காக எல்லாம் எண்களும் உனக்குள்ள வந்துகிட்டு இருக்கு. அருவி போல நீர்ப்போல. நீ ஒருநாள் கரைஞ்சி போகப் போற. எல்லாத்தையும் மீட்கப் போறோம்.. சாமியாடிங்க செஞ்ச எல்லாத்தையும் மீட்கப் போறோம். . எண் மேல செலுத்தன எல்லாம் சூனியங்களையும் எடுத்துக்க போறோம். உலகத்துல்ல மனுசாளுங்க மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு எண் பிறக்குது வளருது, ஒவ்வோர் மனுசனோட வயித்துக்குள்ளயும் போயீ உயிர் வாழுது. பிறகொரு சமயத்துலே அவன் ஒரு எண்ணாகவே இருக்கான். அவனுக்குள்ள அந்த எண்தான் எல்லாமுமா இருக்கு.”

4

என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். முதுகு தண்டு ரொம்பவே வளைந்து காணப்பட்டது. அந்தக் கனவுலகிருந்து என்னால் மீளமுடியவில்லை. தினமும் ஒரு கராரான குரல் எங்கோ தொலைவிலிருந்து கேட்கிறது. இது என்ன பித்தநிலையா அல்லது பிரமையா? வீட்டு முன்வாசலில் வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி அங்கிருந்து கொண்டே ஏதோ முனகினார்.

“டே. . ஏதோ நம்பரு அடிச்சிருச்சாம்? நல்ல இராசிக்காரன்தான் நீ. அந்தக் காலத்துலே நம்பரு அடிக்கறதுக்காக என்னனமோலாம் பண்ணுவானுங்க, வசியம் செய்வானுங்க, சுடுகாட்டுலே உக்காந்து பொணத்துலேந்து மை எடுத்து என்னனமோ பண்ணுவாங்க நம்பரு அடிக்க, அடிச்சிட்டா கோயில்லெ போய் கெடா வெட்டுவானுங்க. நீ அதெல்லாம் செய்யாம பெரிய தொகையா அடிச்சிட்டியே. நம்பரு அடிச்சி நல்லா சாப்டு “8” மாதிரி தலெ சிறுத்தும் வயித்துக்குக் கீழே பெருத்தும் இருக்கறயே”

பகீரென்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கண்ணாடியின் முன் என்னைப் பார்த்தேன். முதுகு தண்டு வளைந்து, கால்கள் சுருங்கி “6” போல தெரிந்தேன். தலை காணாமல் போயிருந்தது.


ஆக்கம்

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com