Wednesday, September 30, 2009

“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்

தாத்தா வீடு மட்டும் அந்த லயத்தில் தனி வீடுதான். பார்ப்பதற்கு இரண்டு ஒட்டிய வீட்டையும் ஒன்றாக சேர்த்து இணைத்துக் கட்டியது போல கொஞ்சம் பெரியதாகத் தெரியும். முன் வாசலில் நுழைந்தால் 5வினாடியிலேயே பின் வாசல் பக்கமாக வெளியேறிவிடலாம். 2ஆம் நம்பர் தோட்டத்து வீடுகள் மிகவும் சிறியது, மேலும் கதவுகள் இரண்டாகத் திறந்து கொள்ளும் வசதிகள் நிறைந்தது என்றெல்லாம் உமா அக்காள்தான் பிறரிடம் பெருமை அடித்துக் கொண்டிருப்பாள்.

கதவுகள் இரண்டு பிளவுகளாக இருக்கும். கீழ் கதவைச் சாத்தி வைத்து விட்டு வெளிச்சத்திற்காக மேல் கதவைத் திறந்து விட்டுக் கொள்ளலாம். பெரும்பாலும் நான் தாத்தா வீட்டில் இருந்த சமயத்திலெல்லாம் கீழ் கதவு எப்பொழுதும் சாத்திதான் கிடக்கும். அந்த 5 வயதில் கீழ் கதவின் உயரத்தைக் கடந்து போவதென்று எனக்குச் சாத்தியமற்றதாக அமைந்தது.

“டேய் கதவு மேல ஏறன, தாத்தாகிட்ட சொல்லி நெல்லிக்காய் மரத்துல கட்டி ஏத்திற சொல்லிடுவேன். புரியிதா?”

கீழ் கதவில் கைகள் இரண்டையும் தொங்கவிட்டுக் கொண்டு, வெளியே போய் கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அக்காள் அங்கம்மா வீட்டுக்குத்தான் போகிறாள். மதியம் 1மணிக்கு மேல் அவளுக்காக அங்கு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும்.


5ஆம் நம்பர் காலி வீட்டில் எல்லோரும் ஒன்று கூடுவதுதான் முதல் சந்திப்பு. பிறகுதான் சரளி மாமா வீட்டுப் பக்கமாகக் கூட்டம் நகர்ந்து செல்லும். அந்த வீட்டின் பின்புறத்தில்தான் அக்காளும் அவரின் நண்பர்களும் பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு, கித்தா கொட்டையில் துரட்டிப் பிடித்து அடித்தல் போன்ற விளையாட்டெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

மாலை மணி 3க்குள் அக்கா வீடு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் தாத்தாவின் ஆணையாக இருந்தது. அதன்படி எது நடந்தாலும் உமா அக்காள் மட்டும் 3மணிக்கு வீட்டில் இருந்துவிடுவாள். அக்காள் வீடு வந்து சேரும் போது சில சமயம் நான் அந்தக் கீழ் கதவோரமாகவே உறங்கிக் கிடப்பதுண்டு. அவள்தான் என்னைத் தூக்கி வாங்கில் போடுவாள்.

“இது ஒன்னு, எப்ப பாத்தாலும் இந்தக் கதவாண்டே தூங்கி தொலையுது. யேன் பாட்டி கொஞ்சம் தூக்கி அங்கன போட வேண்டியதுதானே?”

“அட போடி இவளே, குனிஞ்சா மறுபடியும் ஏஞ்சிருக்க முடியுமானே தெரியல, இதுல நான் இவன தூக்கி அங்கன போட்டனா, நான் இங்கன வுழுந்து கெடப்பேன், பரவாலயா?”

“நீ இருக்கியெ, இவனுக்கு மேல, எல்லா வேலயும் நாந்தான் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யனும்.”

பாட்டி எப்பொழுதும் அப்படித்தான். மாரியாயி பாட்டி எழுந்து நிமிர்ந்து நடந்து நான் பார்த்தது குறைவுதான். செவனேனு அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ராஜ்யம் நடத்திக் கொண்டிருப்பாள். அக்காள் அதன் பிறகு வீட்டின் குசுனி பக்கமாகப் போகிறவள்தான், வேலையெல்லாம் முடித்துவிட்டுத் திரும்பி வரும் போது சூரிய வெளிச்சம் கீழ் கதவில் ஒளிந்து மறைய தயாராகிக் கொண்டிருக்கும். அக்காள் கீழ் கதவைத் திறந்துவிட்டு, மேல் கதவைக் கொஞ்ச நேரத்திற்குச் சாத்துகிறாள் என்றால், வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்ய போகிறாள் என்பதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

“டேய், அங்கனயே வாங்கு மேலயெ படுத்துரு. கீழ எறங்கி வந்தெ தாத்தாகிட்ட சொல்லி ஒன்ன நெல்லிக்காய் மரத்துலெ கட்டித் தொங்க வுட்டுருவேன்”

உமா அக்காவிற்குத் தெரிந்ததெல்லாம் இந்த நெல்லிக்காய் மரமும் அதில் என்னைத் தொங்கவிடுவதும்தான். அதைச் சொல்லித்தான் என்னைப் பயமுறுத்தி வைத்திருப்பாள். வீட்டு வாசலில் என்பதைவிட வீட்டின் கீழ் கதவிலிருந்து 12அடி தூரத்தில்தான் நெல்லிக்காய் மரம் இருந்தது. எப்பொழுதும் கீழ் கதவின் தடுப்பில் வயிற்றை ஏற்றி நெல்லிக்காய் மரத்தை நோக்கி விரல்களை நீட்டிப் பார்ப்பேன். மரத்தை உள்ளங்கையாலே அடக்கி விடுவது போல சாகசம் செய்து பார்ப்பேன்.

எல்லாமும் என்னால் முடிகிறது ஆனால் இந்தக் கீழ் கதவைக் கடப்பதற்கான உயரமும் உறுதியும் மட்டும் இன்னும் கிட்டாதது பெரும் குறையாகவே இருந்தது. எவ்வளவோ முயற்சித்துப் பார்ப்பேன். எக்கி எக்கி வயிற்றில் கீழ் கதவின் வடு எஞ்சியது மட்டும்தான் மிச்சம். வானீர் ஒழுகியே கதவு வெளுத்துப் போயிருக்கும் போல. அக்காள்தான் எப்பொழுது கதவின் வெளிப் புறத்தையும் உட்புறத்தையும் கரித் துணியில் துடைத்துத் தள்ளுவாள்.

“கதவெ சாப்டறான் போல இவன், எப்படிக் கடிச்சி வச்சிருக்கான் பாரு. டேய் யேன் ஒனக்கு நாங்க சாப்பாடே போடறது இல்லயா? இத போயி சாப்டு வச்சிறுக்கே. அதாண்டா ஒனக்கு அடிக்கடி வயித்தால பிச்சிக்கிட்டு அடிக்குது”

இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் போது மாரியாயி பாட்டி ஏதாவது சினிமா பார்த்தாக வேண்டும். தாத்தாதான் பக்கத்து வீட்டிலிருந்து ஏதாவது சினிமா படம் வாங்கி வந்து போட்டு விடுவார். ஜெனெரேட்டர் சத்தத்துடன் படம் பார்ப்பது என்று பழகிப் போனதாக இருந்தது. பலகை வாங்கில் பாட்டி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நேர்த்தியாக அமர்ந்து கொண்டே தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். வெள்லை கறுப்பு படம் அந்த சிறிய தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவே தெரியும். இருந்தும் அப்பொழுது அதைச் சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு எனக்குப் பக்குவம் போதவில்லைத்தான்.

“அக்கா. . வரக் காப்பி. . அக்கா வரக் காப்பி கலக்கு”

“போச்சுடா ஆரம்பிச்சிட்டான், தாத்தா இவன கட்டி மரத்துலெ ஏத்துங்க”

“தாத்தா வரக் காப்பி. . கலக்க சொல்லு”

தாத்தா அமைதியாக கயிற்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே குசுனி பக்கமாகப் பார்த்து வேகமாகக் கத்துவார்.

“கேட்கறாந்தானே களக்கியாந்து கொடென், அவன்கிட்ட போய் மல்லுக்கு நிக்கறா”

உமா அக்காள் கடுப்புடன் வரக் காப்பியை ஒரு பிளாஸ்டிக் குவளையில் கலக்கிக் கொண்டு வந்து வாங்கின் மீது எரிச்சலுடன் வைத்துவிட்டுப் போய் விடுவாள். இந்த வரக் காப்பிக் கோரிக்கை எனக்குச் சின்ன வயதிலிருந்தே பழகிப் போனது. தாத்தா வீட்டில் இருந்தவரைக்கும் எப்பொழுதும் இரவில் சாப்பிட்ட பிறகு வரக் காப்பி கண்டிப்பாக வந்தாக வேண்டும்.

உமா அக்காள்தான் பாவம். அந்தக் குசுனியிலேயே அவளுடைய நேரம் முடிவடைந்துவிடும். இதில் வரக் காப்பி கலக்குவது என்பது மேலும் ஒரு சிரமாகிக் கொண்டேயிருந்தது. படுப்பதற்கு முன்பு உமா அக்காளுக்கு வரக் காப்பி குடிக்கும் பழக்கம் இருந்தது ஒருவேளை என்னாலையும்கூட இருக்கலாம் போலும். எனக்குக் கலக்கும் போதே அவளுக்கும் சேர்த்துக் கலக்கிக் கொண்டு, ஒரு உயரமான டப்பாவில் அதை ஊற்றி வைத்திருப்பாள். பிறகு உறங்குவதற்கு முன்பு அதைக் குடித்துவிட்டுத்தான் படுப்பாள்.

என் வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும் வாநீரையும் உதட்டோரம் சிந்திக் கிடக்கும் வரக் காப்பியையும் உமா அக்காள்தான் துடைத்துவிட்டிருக்க வேண்டும். காலையில் எழுந்திருக்கும் போது, வரக் காப்பியின் எந்தச் சுவடும் அடையாளமும் எங்குமே இருக்காது.

“யெக்கா, உமாக்கா. . . வரக் காப்பி கலக்கியாந்து கொடு”
“தாத்தா இவன பாருங்க சும்மா சும்மா வரக் காப்பி கேட்டுக்கிட்டே இருக்கான், மரத்துலெ கட்டி ஏத்திருவோம் வாங்க. . தாத்தா. . ,தாத்தா”

நெல்லிக்காய் மரம் எட்டியதில்லைதான். வெறும் வார்த்தைகளிலேயே நான் அடிக்கடி நெல்லிக்காய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, September 15, 2009

சிறுகதை: வெள்ளத்தில் கரைந்த அடையாளம் (உயிரோசை கதை)


1
தற்செயலாக ஒவ்வொரு மழைப்பொழுதின் இரவிலும் தூக்கத்திலிருந்து எழுந்துவிடும்போது உடல் வியர்த்திருக்கும். அன்று விழித்தெழுந்தபோது ஜூலை மாத மழைக்காலத்தின் குளிர் காற்று உள்ளே நுழையாதபடி அறைக்குள் நிரம்பியிருந்தது குள்ர்சாதனத்தின் குளுமை. வெளியில் மழைப் பெய்து கொண்டிருக்கும் போது நிம்மதியாக உறங்க முடிவதில்லை.

“இராத்திரிலே மழை பேஞ்சா சும்மா போத்திக்கிட்டு படுத்து ஜம்முனு தூங்கலாம்” என்று யாராவது சொன்னால் அவன் முகத்தில் கைமுட்டியைக் கொண்டு இடிக்க வேண்டும் போல தோன்றும்.

அறைக்கதவைத் திறந்ததும் முதலில் தரையைத்தான் பார்ப்பேன். பிறகு அம்மாவின் அறையை எக்கிப் பார்ப்பேன். கதவு மூடப்பட்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும். மழையின் சத்தம் அதிகரிக்கும்போது அம்மாவும் வெளியில் வந்து சன்னலைத் திறந்து வெளியே பார்ப்பார். எங்கள் மழை இரவுகளில் வாடிக்கையாக நிகழும் உறக்கக் களைதல் இவை.

“இந்நேரம் அந்த வீடுன்னா வெள்ளம் ஏறியிருக்கும்டா”

அவருக்குள்ளாகாவே வார்த்தைகளை விழுங்கிவிட்டு உள்ளே போய்விடுவார்.
மறுநாள் காலையில் பழைய வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது போலிருந்தது. 11 வருடம் வாழ்ந்துவிட்டு ஒரு மாபெரும் வெள்ளத்தில் அல்லது தொடர் மழைக்காலத்தில் தொலைத்துவிட்ட வீடு.
ஒவ்வொருமுறையும் கம்போங் கெர்பாவ் என்ற அடையாளபலகையைப் பார்க்கும்போதெல்லாம் மனம் வெறுமைக்கொள்ளும். பழைய வீட்டைப் பார்ப்பதில் நமக்குள் ஏற்படும் ஆசுவாசங்களுக்கும் வலிகளுக்கும் வார்த்தைகளே கிடைக்காது.

பெரிய சாலையிலிருந்து 4 அடி தள்ளி குறுகலான சந்திற்குள் நுழையும் ஒரு பாதை. பாதை முழுக்க ஆற்றுநீர் ஓடிய வடு. எங்கோ ஒரு வடுவின் நெளிவில் எனது பாதம் அல்லது அப்பாவின் பாதம் ஒளிந்திருக்கலாம் அல்லது அமிழ்ந்து போயிருக்கலாம். பழைய வீட்டை நோக்கி ஓடும் பாதைக்கு சில மௌளனங்களும் சில வெறுமைகளும் இருக்கவே செய்தன.


இடிந்த வீடுகளுக்குள் பரவலாக விரிந்து கோடுகள் போட்டிருந்தன வெயில். பெரும்பாலான வீட்டின் முன்பக்கத்தில் ஆற்று மண் குவிந்திருக்க அதில் படிந்திருந்த தூசுகளுக்குள் விவரிக்க முடியாமல் போன ஒரு மழைக்காலமும் வெள்ளமும் நிசப்தித்துக் கிடப்பது போல இருந்தது.


“அப்பா. . ஒங்க சப்பாத்தி தண்ணில அடிச்சிக்கிட்டு ஓடுது பாருங்க, பிடிங்க. . ம்ம்மா. . ””

“டே குமாரு. . என்னா வெள்ளமா? தண்ணில ஆட்டம் போடறியா?”
எனக்குள் சேமிக்கப்பட்டிருந்த மழைக்கால வார்த்தைகள் மெல்ல எட்டிப் பார்த்தன. அப்பாவிடம் சொல்ல முடியாமல்போன சில புகார்கள் மழையின் இரைச்சலில் வெள்ளத்தின் பரபரப்பில் காற்றில் பறக்கவிட்ட சில வார்த்தைகள் தரையில் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து சிதறின.

கம்போங் கெர்பாவ் 28-ஏ ஆம் நம்பர் வீடு. முன்கதவும் ஜன்னலும் இடிந்து புறவாசலில் சரிந்து கிடந்தன. உள்ளே எல்லாம் பலகைச் சுவர்களும் காணாமல் போயிருந்தன. வெற்று உடலுடன் நிர்வாணமாய் நின்றிருந்தது பழைய வீடு. அம்மாவும் நானும் வெள்ளத்திற்கு அஞ்சி ஏறி நின்ற பலகை மட்டும் அதே இடத்தில் இரு சுவர்களுக்கும் மத்தியில் பிடிப்புடன் இருந்தது.
2

சீன அப்பே வரும்வரை சேகர் மாமாவும் தாங் அங்கிளும் வெகுநேரம் மழையிலேயே நின்றிருந்தார்கள். அப்பா எங்களை வீட்டிற்குள்ளேயே உயரமான பலகையின் விளிம்பில் அமர வைத்துவிட்டு முன்கதவைச் சாத்திவிட்டார். கதவைத் தள்ளிக்கொண்டு ஆற்றுநீர் சலசலவென சந்துகளின் ஊடே வழிந்து கொண்டிருந்தாலும் விஷ பாம்புகளோ பூராணோ வருவதற்கு வாய்ப்பில்லை.

“டே. .காலையும் சூத்தையும் வச்சிக்கிட்டு ஒழுங்கா அங்கயே இரு, தண்ணீ முட்டிவரைக்கும் வந்திருச்சி”

வீட்டிற்கு மேற்கு பகுதியில் கரையைக்கூட எட்டாத வண்ணம் மேற்பரப்பில் வெறும் மதிய வெயிலை நெளியவிடும் “சீனக் கம்பத்து ஆறு”, இப்பொழுது எங்கள் வீட்டின் தரையை ஐந்தாவது முறையாக தழுவிக் கொண்டு கருமையான நிறத்தில் ஒருசில மர்மங்களை உள்ளிழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. முன்வாசல் கதவின் இறுக்கங்களைத் தளர்த்த முயன்று முட்டிக் கொண்டு இருந்தன ஆற்றுநீர்.

“ம்ம்மா தண்ணீ எப்ப போவும்?”

“இப்படி வெள்ளம் ஏறும்னு முன்னயே தெரியாமே போச்சே, , சீனன் சேவா காசு வாங்க மட்டும் வந்திருவான் கரட்டா, சனியன் பிடிச்சவன். . காசு தராங்கனு சொல்லுவான். . ஆனா வாங்கித் தரமாட்டான் கழிச்சில போறவன்”

அம்மா பலகையின் மேல் ஏறி நின்றுகொண்டு வீட்டிற்கு வெளியில் பார்த்தார். சேகர் மாமாவிற்கும் பக்கத்து வீட்டுச் சீனனுக்கும் அநேகமாகச் சண்டை வந்துவிடலாம் என்று பயந்துகொண்டிருந்தார்.

“ஏய் ராதா. . அவன உள்ளே வந்துரே சொல்லு. . எதுக்குப் பெரச்சன? சீனன் வந்தான்னா அவன்கிட்ட கேட்டுக்கலாம், இவன் என்னா பண்ணுவான்?”

சேகர் மாமாவும் தாங் அங்கிளும் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரின் தலை உச்சியிலிருந்தும் மழைநீர் ஒழுகி வாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியே துப்பிவிட்டு சேகர் மாமா வெள்ளத்தின் மேற்பரப்பை ஓங்கி எத்துவதன் மூலம் தனது வெறுப்புணர்வைக் காட்டினார்.

நாங்கள் வசித்து வந்த சீன கம்பத்திற்கு மற்றுமொரு பெயர் இருக்க நேர்ந்தது. “கம்போங் கெர்பாவ்”. எருமைகள் மேயும் கம்பம் என்று சீனர்கள் சொல்வார்கள். ஒரு காலத்தில் இங்கு வசித்த ஆற்றோர குடியிருப்புவாசிகள் எருமைகளை வளர்த்தார்கள் என்றும், அவர்கள் எருமைகளைக் கொண்டுவரும் பாதையின் விளிம்புகளில்தான் இந்தச் சீனக் கம்பம் உருவாகி இருப்பதால் அதற்கு “கம்போங் கெர்பாவ்” என்ற பெயரும் வந்துவிட்டதாம்.

அப்பா இரவில் வேலை முடிந்து வரும் வழியில் இந்தக் கமபத்தின் ஆற்றோரம் சில எருமைகள் மேய்வதையும் அந்த எருமைகளுக்கு மத்தியில் யாரோ ஒரு அப்பே கிழவன் நடமாடுவதையும் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அது அப்பாவின் பிரமையாக இருந்திருக்கலாம்.

வெள்ளத்தின் அடர் ஓட்டத்திலும் சிலர் தண்ணீரின் மேற்பரப்பில் எருமை மாடுகளின் தலைகள் மிதந்து வருவதாகக் கூறியபோது சிறு பரவசம் ஏற்படத் துவங்கின. ஆனால் அது பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெரிய பாதையின் சாக்கடையிலிருந்து உடைந்து வீடுகளுக்குள் புகுந்துகொண்டிருந்தன.

இரவில் சப்தமின்றி இருள் மிதந்துகொண்டிருக்க அம்மாவும் நானும் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு ஈரம் காய்ந்த ஆடைகளுடன் பலகையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அமர்ந்திருக்கும் பலகை இரண்டாவது அறையில் இருப்பதால் அதில் உயரமாக நின்று கொண்டு எக்கிப் பார்த்தால் பக்கத்து அறையும் வீட்டிற்கு வெளியேயும் தெரியும்.

அப்பா மோட்டாரைத் தள்ளிக் கொண்டு போய் மேட்டுப் பகுதியில் வைத்துவிட்டு கால் சட்டையை முட்டிவரை மடக்கி ஒதுக்கி வைத்துவிட்டு வெள்ளத்தில் நடந்துவரும் போதெல்லாம் தூரத்திலிருந்து அப்பாவின் வருகையை என்னால் உறுதி செய்ய இயலும். ஒவ்வொருமுறையும் அவர் அப்படித்தான் வந்துவிட்டு எங்கள் இருப்பை உறுதி செய்துவிட்டுச் செல்வதோடு நாசி லெமாக் அல்லது ரொட்டி சானாய் பொட்டலத்தைத் தந்துவிட்டுப் போவார். எனக்குச் சாப்பிட விருப்பம் இருக்காது. அம்மா என் வாயில் வலுக்கட்டாயமாகத் திணிக்க முயலும்போதெல்லாம் அவரின் கைகளில் ஆற்றுநீரின் வாசம் வீசிக் கொண்டிருக்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 300 ரிங்கிட் தரப்போவதாக மாநில அரசாங்கத்திடமிருந்து தகவல் வந்திருப்பதாகக் கம்பத்தில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது குறித்து சீனர்கள் மத்தியில் பேசப்படும். ஆனால் அப்பா அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவராக இருந்துவிட்டதால் எங்களுக்கு அந்த 300 ரிங்கிட் கிடைத்ததில்லை. மேலும் அங்குள்ள யாருக்கும் அந்த 300 ரிங்கிட் கிடைக்கவும் இல்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டதுண்டு.

சீனர்களின் கலாச்சார கலைப்பாடுகள் கம்போங் கெர்பாவ் வீட்டின் அமைப்புகளில் இருந்தன. அவர்களின் சாமி படங்கள் வைப்பதற்காகவே வீட்டின் முன்பகுதியில் சுவரோடு தூக்கி நிறுத்தியிருக்கும் பலகை சாமி மேடையும், ஊதுபத்திகளைச் சொருகி வைக்க வீட்டின் பல இடங்களில் முக்கோண வடிவத்திலான சுவரோடு ஒட்டியிருக்கும் சிவப்பு நிற சிறு பெட்டியும் இருக்கும். அந்தக் கம்பத்தில் 64 சீனக் குடும்பங்களும் 2 தமிழ் குடும்பங்களும் வசிக்க, சீனர்களின் பெறுநாள் காலங்களில் எங்காவது தொலைந்து போனால்தான் அன்றைய பொழுதைச் சரிகட்ட இயலும்.
ஒன்று எங்கள் குடும்பம் மற்றொன்று சரசு அக்காவின் குடும்பம். அவரின் கணவன் எங்கேயோ ஓடிவிட்டதால், அவரே கையுறை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டார்.

முன்வீட்டுச் சீனன் எப்பொழுதும் சரசு அக்காவின் குழந்தைகளைப் பார்த்தால் ஏதாவது பொருளைக் கொண்டு அடித்துத் துரட்டுவான். அவன் வளர்த்து வைத்திருக்கும் செடிகளில் மூத்திரம் பெய்வதற்காகவே அவர்கள் வருகிறார்கள் என்கிற புலம்பலும் அவனிடமிருந்து வரும். சரசு அக்காவின் குழந்தைகளில் ஒருவனுக்கு 4 வயது, மற்றொருவனுக்கு 6 வயது மற்றும் ஒரு பெண் குழைந்தைக்கு 3 வயது. பெண் குழந்தை பெரிய அண்ணனின் இடுப்பில் அரைநிர்வாணமாக அமர்ந்து கொண்டு வெயிலில் கருத்துப் போயிருக்கும். அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு கம்பம் முழுக்க அவர்கள் திரிந்து கொண்டிருப்பார்கள். யாரும் விளையாட கிடைக்காத பொழுதுகளில் கம்பத்தின் கிணற்றடியில் உட்கார்ந்துகொண்டு அவர்களே ஒரு விளையாட்டை விளையாடத் துவங்குவார்கள்.

அம்மாவும் என்னை அவர்களுடன் விளையாட அனுமதித்தது கிடையாது. வெள்ளக் காலத்தின் போது அவர்களின் வீடு முழுவதும் அடித்துக் கொண்டு போய்விட்டதாகக் கேள்விப்பட்டபோது பகிரென்றிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் அங்கிருந்து கையில் கிடைத்த பொருட்களைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ போய்விட்டதாக அம்மா சொன்னார்.

“சரசு அக்கா பிள்ளைங்க இப்பெ என்னா பண்ணிக்கிட்டு இருப்பாங்கமா?”

வெளியில் சேகர் மாமாவிற்கும் சீனனுக்கும் வாய்ச்சண்டை வலுத்து கைகளப்பாகியிருந்தது. இருவரும் சட்டைகளைப் பிடித்துக் கொண்டு உருளுவதற்கு மல்லுக் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும்போதே சிலர் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டு சீனனின் மூத்த மகன் வெளியில் வந்து சத்தமாகக் கத்தினான்.

“ஏய் இந்தியா. . கெலுவார்லா” (ஏய் இந்தியா. . வெளியேறு)


3

இங்கிருந்த சீனர்கள் எல்லோருக்கும் மலிவு அடுக்குமாடி வீடுகள் கிடைத்ததாகவும் எல்லோரும் அங்கே சென்றுவிட்டதாகவும் முன்பே தெரிய வந்தது. அந்தக் கம்பத்தில் வாழ்ந்த இரு இந்திய குடும்பங்கள் அங்கு வாழ்ந்ததற்கான எந்த உரிமையும் அடையாளமும் இல்லாமல் போனதைப் பற்றி அப்பாவும் கவலைப்பட்டதில்லை.

இப்பொழுதும் யாராவது நண்பர்களை அழைத்து வந்து, “இது நாங்க இருந்த வீடு” என்று காட்டினால்,

"ஏய் இந்தியா. . இனி ரூமா சீனாலா. . இனி கம்போங் சீனாலா” (டே இது சீன வீடுடா. . இது சீனக் கம்பம்” என்று சொல்லக்கூடும்.


-முடிவு-
நன்றி : உயிரோசை வலைத்தலம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com

Thursday, September 10, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்-2

1
தினமும் மீட்கிறேன்
என்னை
சில முரண்களிலிருந்தும்
இன்னும் சில மனிதர்களிடமிருந்தும்.

2
எல்லை கடந்தும்
மீதமாய் பின்தொடர்ந்தன
முள்வெளிகள்.

3
ஒவ்வொரு கதைகளிலும்
சொற்களைத் தொலைத்துவிடும்போது
காலியாகிறது எனக்கான இடம்.
ஒரு கதாபாத்திரமாய் உள்நுழைந்து
எனக்களித்த உரிமையுடன்
கதையை மீண்டும்
அடுக்குகிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Friday, September 4, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்

1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது
மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்
தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்
இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்
வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது
அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3
மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்
ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

Sunday, August 30, 2009

தொலைத்தூர பயணம்



1

நீண்ட பயணத்தின்போது
வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை
ஏற்படுத்தியிருக்கும்.
அல்லது உருவங்கள் கரைந்து
வெறும் சொற்கள் மட்டும்
மிதக்கக்கூடும்.
தொலைத்தூர பயணம் ஒரு மாயையென
அவதாணிப்பற்ற பொழுதுகளுடன்
வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.
பயணத்தவர்களில் சிலர் காணாமல்
போயிருந்தாலும்கூட
ஒரு மர்மயாய் இருப்பின் சூன்யத்தில்
ஒட்டிக்கிடக்கும் வாக்கியங்களால்
நிரம்பக்கூடும்.


2

எதுவரை நீளும் என்கிற முன்னறிவிப்பு
ஏதுமின்றி பயணம் விரிய
அர்த்தமற்று ஓடிக் கொண்டிருக்கின்றன
காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும்
ஓயாமல் சப்தமிட்டுக் கொண்டிருக்கும்
வானொலி பாடல்களும்.


3
ஒரு தொலைத்தூர பயணத்தில்
சில மௌளனங்களைக் கண்டடைந்தேன்.
எனக்குள்ளே நான் பேசிக்கொள்ளும்
வித்தையைக் கற்றிருந்தேன்.
பேசாமல் விடுப்பட்டுப் போன
உரையாடல்களின் போதாமைகளைச்
சரிக்கட்டிக் கொண்டிருக்கவும் செய்தேன்.
வெறுமனே சில மணிநேரங்கள் அமர்ந்திருப்பதைத் தவிர
சில அதிசயங்களும் நிகழும் தொலைத்தூர பயணத்தில்.

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Tuesday, August 25, 2009

உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல


உதிர்வது அவ்வளவு
கடினமான காரியமல்ல.
அல்லது அலட்சியமான
ஓர் துர்சம்பவத்திற்கான
பிரயாசையுமல்ல.

உதிர்வது எளிதில்
நடந்துவிடக்கூடியது.
மயிர்போல உதிர்த்துவிடப்படுவது
அல்லது இலைக்கு நிகரான சராசரி உதிர்வின் உச்சமுமாக
ஒலியிலிருந்து சொற்கள் உதிர்வதுபோல
உடலிலிருந்து வயது உதிர்வதுபோல
கண்களிலிருந்து வெளிச்சம் உதிர்வதுபோல
பிடிகளிலிருந்து தளர்ந்து வீழ்வதன் சூட்சமமென
எல்லாமும் ஒரு பிடிகளுக்குள் சிக்கித்தவிக்கும் நிதர்சனத்திற்காக
ஒன்றையொன்று உதிர்த்துக்கொள்வதன் மூலம்
படைப்பின் வேர்களைக் கடந்து செல்ல.

உதிர்வது மிக இரகசியமானது.
ஒரு இலையின் சிறு நுனி காம்புகளில்
ஒளிந்து கிடக்கும் அல்லது
மழைத்துளியின் விளிம்பு சொட்டுகளில்
தளர்ந்திருக்கும்.
உதிர்வு ஒரு அசம்பாவிதம் அல்ல.
உயிர்களுக்குள் உயிர்களுக்கு வெளியில்
பிரபஞ்சகளில் பிரபஞ்ச வெளிக்குள்
நிகழும் சராசரி.

கே.பாலமுருகன்
உயிரோசை - Uyirosai

Sunday, August 23, 2009

இரயில் பயணம்


1
இரு ஆண்களுக்கு மத்தியிலான இருக்கை
பயணம் நெடுக காலியாகவே இருந்தது.
கால் வலிக்க இறுகியிருந்த பெண்களின்
நெரிசலுடன் இரயில் சப்தமின்றி
விரைந்து கொண்டிருந்தது.

2
சிறு இடைவெளியுமின்றி
ஒருவர் முகத்தை ஒருவர் உரசிக்கொண்டு
அடுத்தவர் சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டு
உடல் உறுப்புகள் பற்றிய கவனம் சிதறும்
ஓர் இரயில் பயணத்தில்.

அருகிலிருப்பவனின் அக்குளில்
புதைந்துவிட்ட மற்றவர்களின் முகங்கள்
தெரிவதற்குள்
சரிந்து விழுகின்றன உடல்கள்
ஒவ்வொரு நிலையத்திலும்.

உடல் வியர்த்துக்கொட்ட
ஒரு துர்நாற்றாமாக பரவுகின்றது
நெருக்கடியும் அதிருப்தியும்.
கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில்
யாரிடமிருந்தோ வந்திருந்த குறுந்தகவல்
சப்தமிடுகின்றது.
“நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com