Saturday, May 30, 2009

ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்

எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில் படுத்துக் கொண்டு நம்மைப் பார்த்துக் காரணமே இல்லாமல் குரைக்கும் சொறி நாய் போல அவன் என் முன் அமர்ந்திருந்தான்.

அவனது சொற்களால் அதற்குச் சில நியாய ஒழுக்கங்களைக் கட்டமைத்து என்னை மறு உற்பத்தி செய்ய முயல்கிறான். அவனுக்குப் பல வருடங்களாக இது மாதிரியான வேலைகளில் ஆர்வமும் உள்ள உந்துதலும் அதிகம்.

1

கடவுளை முன் வைத்து ஒரு முட்டாள் சொன்ன சில விஷயங்களை அவனிடம் ஒரு மாலைப் பொழுதில் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். இருவரும் தெருவோரமாக நின்றுகொண்டு சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சல்களைக் கவனித்துக் கொண்டே சிறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம்.

“கடவுள் நம்முடன் அமர்ந்துகொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நாம் காய் நகர்ந்த்தும் நுட்பங்களை அவதானித்து, நமக்கு சவால்களை ஏற்படுத்தி நமது மன வலிமையை மதிப்பீட்டுக் கொண்டிருக்கிறார்” என்றான்.

அவன் முகத்தில் காரி துப்பினேன். என்னை மிகவும் மோசமான தோரணையில் எட்டிப் பார்த்துவிட்டு முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டான்.

“காகம் மேல பறக்கும்போது அது கடவுள் மீது காக்கா பீ போட்டுவிட்டுப் போனாலும், கடவுள் அமைதியாகத்தான் இருக்கிறார், பக்தன்தான் பரபரப்புக்குள்ளாகுகிறான். உனக்கு மன நோய். யாரையாவது பார்த்து சீக்கிரம் மருத்துவம் செய்து கொள்”

அவன் ஏதோ வேதாந்தி போல சில்லறைத்தனமான கருத்துகளில் பேசிக் கொண்டிருந்தான். அவனது உரையாடலை இரத்துச் செய்துவிட்டு அவனது அசட்டு கடவுள் உவமைகளில் சலிப்புத் தாங்க முடியாத தடுமாற்றங்களை அவனிடம் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டு ஓங்கி அறையலாம் என்று தோன்றியது.

“கடவுள் எப்பொழுதும் நம் முன்னுக்கு ஒரு கயிறைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார், அதைக் கவனிக்காமல் நாம் நம் வேலையில் சல்லாபித்துக் கிடக்கிறோம், அதைப் பிடித்துக் கொண்டு மேலே வா என்ற கடவுளின் உதவும் கரத்தை நாம் கண்டுக் கொள்வதே இல்லையே” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

நான் முதல்முறையாக அப்பொழுதுதான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். எதிரே வந்த காரின் மீது விழுந்து வைத்தேன்.

2

மீண்டும் ஒரு மழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுதியில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. கையில் ஏதோ ஒரு வேதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு விடுதியின் வாசலில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான்.

“வாங்க. . உங்க கடவுள் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.

“நல்லாயிருக்கிறார். .அவ்வப்போது வயிறு பிரச்சனை என்பதால் இப்பொழுதெல்லாம் மலக்கூடத்தில்தான் இருக்கிறார்” என்றேன். எங்குப் பார்த்தாலும் ஒரு தமிழ் தூயவனாக தூயத் தமிழில் உரையாடக்கூடியவனாகத்தான் அவனைப் பார்க்கிறேன்.

“கடவுள் மலத்தின் அதிபதியும்கூட. . தேவையற்ற செத்துப் போன சேர்க்கைகளை இராசாயணத்தின் உந்துதளில் வெளியே தள்ளுகிறார் கடவுள். . . உங்களின் எந்த வசைக்குள்ளும் சிக்காமல் தப்பிக்கும் அளவிற்குக் கடவுளுக்குப் புத்தியுண்டு” என்றான்.

சொற்கள் நாவின் நுணிவரை வந்துவிட்டன. விடுதியின் மேல் மாடி அறையில் அவன் தங்கியிருப்பதாகவும் இன்று இரவு முழுவதும் கடவுளை ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் கூறினான்.

“என்ன ஆராய்ச்சி?”

“இது கொஞ்சம் அறிவியல்பூர்வமான உடற்கூறுகளின் அடிப்படையில் மானுட தந்தையின் ஆண்மையை ஆராய்ச்சி செய்யப் போகிறேன்” என்றான்.

“புரியவில்லையே” என்று அவனது அசடுகளைத் தாங்க முடியாமல் உறுமினேன்.

உற்பத்தி ஆய்வில் ஈடுபடத்தான் என் வீட்டிலிருந்து 900 கிலோ மீட்டர் தள்ளி வந்திருக்கிறேன். இன்று இந்த ஆராய்ச்சியின் மூலம் கடவுளைக் கொள்ளப் போகிறேன். கடவுள் என் கையில்தான் சாகப் போவதாக வரம் வாங்கிவிட்டார் போல” என்று கொஞ்சம் முரண்பாடாகப் பேசினான்.

“உன் கடவுளை ஏன் நீயே கொள்கிறாய்?”

“பிறகு? ஒருபோதும் உன்னைப் போன்ற அன்பே சிவம் ஆட்களிடம் என் கடவுளை நன் ஒப்படைக்கப் போவதில்லை. வளர்த்துவிட்ட எங்களுக்குத்தான் கடவுளின் மீது அத்துனை உரிமைகளும் உண்டு. ஆதலால் இன்று இரவு நகரத்திலிருந்து 25 மைல் தள்ளியிருக்கும் இந்த மரணித்த விடுதியில் 12ஆவது மாடியில் வைத்து கடவுளை நான் கொலை செய்யப் போகிறேன். சாட்சி நீ மட்டும்தான். வெளியே சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று சொல்லிவிட்டு கைகளை நீட்டினான்.

“உன் கை ரேகையில் என் சத்தியத்தை ஒளி வைத்துக் கொண்டு நீ செய்யப்போகும் அப்பாவித்தனமான கொலைக்கு ஏன் என்னை உடந்தையாக்குகிறாய்? எப்படியோ போ. எனக்கு கவலையில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து 6ஆவது மாடிக்கு நகர்ந்தேன். அவன் ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். கடவுள் சம்பந்தபட்ட கொலைக்கு முன்பதாக சொல்லப்படும் மந்திரமாக இருக்கலாம்.

3

சரியாக மணி 11-ஐ கடந்திருந்தது. உறக்கமே பிடிக்கவில்லை. மெத்தையில் ஒரு நத்தையின் போன்ற நகர்வுக்கு ஒப்பாக உறக்கம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் எப்படிக் கடவுளைக் கொள்ளப் போகிறான்? எங்கிருந்து தொடங்குவான்? அவனது அறைக்குப் போய் அவனது கொலையைப் பார்க்க மனம் அள்ளல்படுத்தியது. போகலாம் ஆனால் அவனைப் போன்ற உற்பத்தியிலும் மரணத்திலும் ஆர்வம் உள்ளவனைத் தனிமையில் அவனது அறையில் சந்திக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

கடவுளின் மரணத்தில் கண்டிப்பாக ஏதாவது விந்தை நிகழலாம். உலகமே அறியும்படியான ஒரு வெளிச்சம் பரவலாம். அல்லது நாய் ஒன்று சாக்கடையில் “ஒன்னுக்கு” போவது போன்ற சம்பவமாக முடிவடைந்துவிடலாம். சன்னலைத் திறந்து காத்திருந்தேன். எப்பொழுது கடவுள் இறப்பார் என்று.

திடீரென்று சொல்ல முடியாது, மிக நிதானமாகவே ஏதோ உயரத்திற்கு எனது நிலப்பரப்பு வளர்வது போல ஒறு பிரமை தட்டியது. என் 6ஆவது அடுக்கு மெல்ல வளர்ந்துகொண்டே உயரத்திற்குச் சென்றது. அப்பொழுது கடவுளின் கொலையைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடவுள் தரையை நோக்கி போய்க்கொண்டிருந்தார். காற்றின் அழுத்தம் தலை முடியை உடைத்து பின்னுக்குத் தள்ளியது. கடவுளுடன் நானும் அவரது மரணத்தை நோக்கி உள்நுழைந்தேன். கடவுள் தலைகீழாக தனது உக்கிரங்களை கரைத்து மண்டை வழியாக உருவெடுத்த பிளவின் ஊடாக வெளியாக்கினார். இன்னும் சிறிது தூரம்தான் கடவுளின் மரணம். தரை. உலகம் கடவுளை அறுக்கப் போகிறது. கடவுளின் பிராந்தியங்களைத் துண்டிக்கப் போகிறது உலகம்.

4

“அன்புள்ள நண்பர் முகிந்தாவுக்கு. நான் இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடிதம் இது. பைத்தியக்கார நாயின் கடிதம் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது நானோ அல்லது கடவுளோ இறந்திருக்கக்கூடும் அல்லது இருவரும். அதனால் என்னைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு இதில் ஆர்வம் இருக்கப்போவதில்லை. என்னைப் பற்றியும் என் பைத்தியக்கார பொழுதுகள் பற்றியும் நீ உன் நண்பர்களிடம் சொல்லி இரக்கப்படப் போகிறாயா அல்லது தோற்றுப்போன என் ஆராய்ச்சிகளின் மீது காரி துப்பப் போகிறாயா என்று எனக்கு தெரியவில்லை.

உனக்காவது என் ஆய்வு பற்றி தெரிய வேண்டுமென்றுதான் உன்னை நான் அடிக்கடி தொடர்புக் கொண்டேன். ஆனால் நீயோ என்னைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டே இருந்தாய். புறக்கணிப்பு எவ்வளவு வலி என்று உனக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு கழிச்சடை நீ.

நான் தொடர்ந்து கடவுளிடம் விவாதித்தேன். பல நாட்கள் அவருடன் உரையாடலை மேற்கொண்டேன். பல விவாதங்களில் கடவுள் தோல்வியுற்று என்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தார். இறுதியாக நீ வாழத் தகுதியற்றவன் என்று நானும் கடவுளும் முடிவுக்கு வந்துவிட்டோம். நீ இந்த உலகத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் சுற்றித் திரிந்து அலைந்து சம்பாஷனைச் செய்து கொண்டிருப்பதைக் குறித்து எனக்கும் கடவுளுக்கும் கடும் கோபம். உன்னை வளரவிடுவதில் கடவுளுக்கு ஆர்வம் இல்லை. நீ இன்னும் பல மனிதர்களைக் காயப்படுத்தக்கூடியவன் என்கிற தீர்ப்புக்குக் கடவுள் உடன்பட்டுவிட்டார்.

பிரபஞ்சத்தில் நீ எறிந்த வார்த்தைகளுக்கு நீ பொறுப்பேற்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. உனது கடும் வார்த்தைகள் பிரபஞ்ச வெளியின் தனிமைகளை உசுப்பிவிட்டதால் நீ மரணிக்க வேண்டும் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். வரும் ஞாயிறன்று உனக்கான மரணம் ஒரு உன்னைத் தேடி வரும். அப்பொழுது மழைப் பெய்துகொண்டிருக்கும். உனது விடுதியின் அறையை ஒருவன் கடவுளுக்குக் காட்டிக் கொடுப்பான். அங்கிருந்துதான் நீ உனக்கான வெளியை இழக்கத் துவங்குவாய். இனி நீயும் உன் கடவுளும். வணக்கம்.

“அன்பே சிவம்”

இப்படிக்கு

கடவுள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

சிறுகதை : என் தோழியின் இருப்பு - உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்கான படைப்பு


1


முதல்முறையாக அவளுடைய பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வித்தியாசமாகத்தான் தோன்றியது. அன்று மிகவும் நெருக்கமாக இருந்த பெயர்தான் இன்று ஏதோ வேற்று தேசத்துப் பெண்ணின் பெயரைப் போல விலகியிருந்தது. நான் வீட்டிலில்லாத சமயத்தில் அவள் எப்படியோ என்னுடைய வீட்டைத் தேடி வந்து கொடுத்துவிட்டுப் போனதுதான் இந்தத் திருமணப் பத்திரிக்கை. அவளுடைய பெயர் மலர்கொடி.

அந்தப் பெயரை உச்சரிக்கும் போது, அவளுடைய ஞாபகங்கள் கொடியைப் போல மனதில் ஊர்ந்து சென்று பல திசைகளில் கிளைவிட்டு இறந்தகாலங்களை வெறித்து நிற்கிறது. மலரைப் போலத்தான் இருப்பாள். சாதரணமாக சொல்வதென்றால் அப்படித்தான் உவமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மலர்கொடியைக் கடைசியாக ஏதோ ஓரு கோயில் திருவிழாவில் தற்செயலாகப் பார்த்தும் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தோடுதான் நினைவுப்படுத்திக் கொள்ள முடிகிறது. அவள் அவளாகவே இருந்தால், நான் மட்டும் அவளுடைய ஞாபகங்களைச் சுமந்து திரியும் பத்து டுவா சிறுவனாகவே இருந்து வருகிறேன்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் அவளைப் பார்த்தும் பேசுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காமல் போனதற்கு, திருவிழாவின் கூட்ட நெரிசலை பொய் சமாதானமாகக் கூறிக் கொள்ளலாம். உண்மையில் கூட்டம் நெருக்கிக் கொண்டுதான் இருந்தது. மஞ்சள் பஞ்சாபி உடையில் அவள் அவளாகவே இருக்கிறாள் என்று நான் நினைத்துக் கொண்டது போன்ற தோற்றத்துடன் 5 நிமிடத்திலேயே என்னைக் கடந்துவிட்டாள்.

“டேய் மலர் மாதிரி இருக்குடா, அங்க பாரு மஞ்ச கலரு”

“பாத்தெண்டா, மலரு என்னெ பாக்கலெ போல, மலர்தானே?”

“நல்லா பாருடா, அதுதான். என்னாடா ஒனக்குப் போயி சரியா தெரிலனு கேக்கறெ?”

நான் அர்த்தப்பட்டுக் கூறியவை அருகாமையில் இருந்த நண்பனுக்கு குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் என் மனதில் சேமித்து வைத்திருந்த மலர் இவளாக இருக்க முடியுமா? அவளுடைய தோள்களில் கையை சாத்திக் கொண்டு கூடவே ஒரு வாலிபன் நடந்து கொண்டிருந்தான். முரட்டுத் தோற்றம் அவனுக்கு. மலரை எடுத்து மாட்டுக் கொம்பில் சூட்டியது போன்ற உவமைச் சிறப்பாக இருக்கும் போல. சிறிது நேரத்தில் கூட்ட நெரிசலில் அவள் அந்த மலர்கொடி, இவ்வளவு காலம் நான் பார்க்க தவறிய என் மலர்கொடி, காணமல் போய் கொண்டிருப்பதைக்கூட உணர முடியாமல் நானும் கூட்டத்துடன் கூட்டமாக எதிலிருந்தோ நழுவிப் போயிருந்தேன். அவளுடைய முகம் முன்பு போல இல்லை. வெளிரிப் போயிருந்ததை மட்டும் வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்ள முடிந்தது.

“என்னாடா மச்சான், தெரியாத மாதிரி இருந்துட்டெ? ஒனக்குனு சின்ன வயசு கூட்டாளி அவ மட்டும்தானெ? எப்பவும் சொல்லி பெருமைபட்டுக்குவே. யேண்டா நீங்க பேசிக்க மாட்டிங்களா?”

“அவுங்க பத்து டுவாலேந்து போயி பல வருசம் ஆச்சுடா. நாந்தான் ஒங்ககிட்டலாம் சொல்ல மறந்துட்டென் போல, ஒனக்கு என்னா தெரியாதா? எங்கடா அவுங்க குடும்பம் இப்ப அங்க இருக்கு? முன்ன ஒரு தடவெ சுக்குல் போட்டி வெளையாட்டுக்குப் போயிருந்த போது பாத்தென், 16வயசு இருக்கும். வந்து பேசுனுச்சு. எப்படி இருக்கேனு கேட்டுச்சி. அப்பறம் சாதரணமா விலகிப் போச்சுடா”

“அதுக்கப்பறம் நீ பாக்கவெ இல்லையாடா?”

“சந்தர்ப்பம் கிடைக்கலடா. . எங்கயும் தேடாமலே இருந்துட்டேன்.”

உண்மையில் நான் மலர்கொடியைத் தேடாமல் இருந்ததுதான் ஆச்சர்யம். அவள் பத்து டுவா கம்பத்திலிருந்து வெளியேறும் போது எனக்கு 10வயது அவளுக்கு 9 வயது. வயது வித்தியாசம் பார்க்காமல் வாடா போடா என்றுதான் கூப்பிடுவாள். வயது வித்தியாசம் தெரியாமல்தான் நாங்களும் 5வயதிலிருந்து வளர்ந்து வந்தோம். அவளுடைய அப்பாவின் சிவப்பு கார் இன்னமும் என் நினைவுகளில் மலர்கொடியைச் சுமந்து கொண்டு நான் தொட முடியாத தூரத்திற்குப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காரில்தானே அவள் குடும்பமே இடம் பெயர்ந்து போனார்கள். வீட்டு ஜன்னலில் தலையைக் கவிழ்த்தபடி அந்தக் கார் இருந்தும் இல்லாமல் போகும் தொடக்கத்தையும் பிறகு இல்லாமலே போன சூன்யத்தையும் காட்சி பிசகாமல் பார்த்துக் கொண்டே பல வருடம் கடந்துவிட்டேன்.

இன்னமும் அவள் அந்தக் காரில்தான் சென்று கொண்டிருக்கிறாள். மலர்கொடியை அந்தக் காரிலிருந்து இறங்கவிடாமல் செய்வது, அதே ஜன்னலில் இன்னமும் வயதைக் கடக்க முடியாமல் நின்று கொண்டிருக்கும் அந்த 10 வயது சிறுவனான ‘நான்தான்’. காலங்கள்தான் சில விஷயங்களுக்கு மருந்து என்பார்கள், ஆனால் எனக்கென்னவோ காலங்கள் மறுத்துப் போனவையாகத்தான் தெரிகிறது. மலர்கொடியும் நானும் சேர்ந்து சுற்றி விளையாடிய பத்து டுவா கம்பம் இன்றும்கூட அப்படியேதான் இருக்கிறதாக மனதில் படுகிறது. மலர்கொடியைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கலாம். அவள் என்றுமே சுவார்ஷயம் குறையாமல்தான் எனக்குள் குவிந்து கிடக்கிறாள்.

2

பத்து டுவா கம்பத்தில் இருக்கும்போது என் பக்கத்து வீட்டிற்கு ஒர் இரவு பொழுதில்தான் மலர்கொடியும் அவளின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். இரவு நெடுக பக்கத்து வீட்டில் பொருள்களை அடுக்கும் ஓசையும் மேசையின் கால்கள் தரையில் நகரும் ஓசையும் மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தது. என் வீட்டு குசுனி பக்கமாக நின்று பார்த்தால் தகறத்தின் சந்திலிருந்து மலர்கொடியின் வீட்டின் அடுப்பு வைக்கும் சிமெண்டு கல் சின்னதாய் தெரியும். அந்தச் சந்திலிருந்துதான் மலர்கொடி அவளுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு தலையைச் சோர்வாகத் தோளில் சாய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அன்றிலிருந்துதான் மலர்கொடியை எனக்குத் தெரியும். ஓரிரு நாட்கள் அவள் குசுனியில் அழுது அரற்றிக் கொண்டிருப்பதையும் பிறகு அம்மாவின் முதுகில் ஏறிக் கொண்டு கால்கள் இரண்டையும் உதறிக் கொண்டு இருப்பதையும் அதே சந்தின் வழிதான் பார்த்தேன். ஒரு நாள் சந்தின் அளவு விரிந்து அவளை வீட்டின் பின்புறக் கதவின் விளிம்பில் முதன் முதலாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டேன். முதலில் குருகுருவென்று பார்த்துவிட்டு பிறகு சடாரென்று உள்ளே நுழைந்து கதவை அடைத்துவிட்டாள்.பெருத்த ஏமாற்றத்துடன் வயலை நோக்கி சாவகாசமாக நின்றுகொண்டிருக்கும் அந்தக் கதவின் அருகில் பரிதாபமாகச் சம்மனமிட்டு அமர்ந்திருந்தேன். எப்பொழுதும் அப்படி அமர்வது வழக்கம்தான்.

மறுநாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, என் வீட்டு எதிரிலுள்ள புளியமரம் ஓரம் சரிந்து கிடக்கும் பழைய ஊஞ்சலில் ஏறி குந்திகாலிட்டு அமர்ந்து கொண்டு எங்கள் வீட்டின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வெளியே வந்து நின்றதும் முதலில் வழக்கம் போல குருகுருவென்று பார்த்துவிட்டு, சிறிது நேரத்தில் மென்மையான சிரிப்பும் அவளிடமிருந்து வெளிப்பட்டது. நானும் பதிலுக்குச் சிரித்து வைத்தேன். மலர்கொடி என்னிடம் பேசிய முதல் வார்த்தை, அந்தப் புளிய மரத்தின் அடிவாரத்தில்தான் நிகழ்ந்தது.

“இது ஒங்களோட ஊஞ்சளா?”

அன்றிலிருந்து மதிய நேரம் தொடங்கி அவ்வப்போது சாய்ங்காலமும் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் தடமாக அந்தப் பழைய ஊஞ்சள் மாறிப் போனது. புளிய மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி முதல் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய பழைய சைக்கிள் வரை எங்களுடைய உரையாடல் வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றி நீளும். என் அம்மாவோ அல்லது மலர்கொடியின் அம்மாவோ அழைத்தால்தான் ஊஞ்சளிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடுவோம். அவள் அவளாகவே இருந்தாள், நான் மட்டும்தான் அவளுக்காகவே என் இருப்பைத் தயார்படுத்திக் கொண்டே போகிறேன் என்பதெல்லாம் அப்பொழுது என்னால் உணர முடியாத விஷயங்கள்.

என் வீட்டுப் பின்புறத்தில் தலை கவிழ்ந்து கிடக்கும் சைக்கிளை அவளுக்காகத்தான் முதன்முறையாக வெளியில் எடுத்துச் சுத்தப்படுத்தினேன். நான் அவளுக்காக எடுத்து வந்த முதல் பொருள் ஒரு சாதரண பழைய சைக்கிள்தான். இருவரும் அதில் ஏறிக் கொண்டு தோ தாத்தா வீட்டுப் பக்கமாக சென்று விளையாடுவோம். ஊஞ்சளுக்கு சிறகு முளைத்திருந்தால் அது முதலில் தோ தாத்தா வீட்டுப் பக்கம்தான் போயிருக்கும் அல்லது சைக்கிளாகத்தான் மாறியிருக்கும். எங்களுடைய தடம் ஊஞ்சளிலிருந்து விலகி சைக்கிளுக்கு மாறியது.

அவள் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு, அவளுடைய இங்கிலிஸ் கவுனை கொஞ்சம் மேலே தூக்கி சொருகிக் கொள்வாள். நான் பெரிய யூ.டி.சி (எங்கள் இடத்தின் பழைய பேருந்தின் பெயர்) ஓட்டுனர் போல கம்பீரமாகச் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பேன். எங்களுடைய பயணம் வெகு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்து கொள்ளும் தூரம்தான் செல்லும் ஆனால் எங்களின் அந்த நேரமானது பட்டாம் பூச்சியாய் பல திசைகளில் எங்களைச் சுற்றி சிறகடித்துக் கொண்டிருக்கும்.

“எங்க போனம்?”

“என்னயெ கோலாலம்பூர்ல எறக்கி உடு”

அப்பொழுதெல்லாம் என் கம்பத்து வீட்டின் பின் புறத்தில்தான் கோலாலம்பூர் இருந்தது. அதாவது என்னுடைய மலர்கொடியின் கோலாலம்பூர். அவளைக் கோலாலம்பூரில் இறக்கிவிட்டு இல்லாத பயணிகளைப் பாசாங்குதனமாக ஏதேதோ ஊர்களில் இறக்கிவிட்டுக் கொண்டே போவேன். பிறகு பேருந்து(என்னுடைய பழைய சைக்கிள்) மீண்டும் கோலாலம்பூருக்குப் போய் சொல்லி வைத்தாற் போல மலர்கொடியை ஏற்றிக் கொண்டு 3 நிமிடத்திலேயே சுங்கைப்பட்டாணியை வந்தடைந்துவிடும். இது கோமாளித்தனமான விளையாட்டாக அப்பொழுது எங்களுக்குத் தெரிந்ததில்லை. இன்றும்கூட அது கோமாளித்தனமான விளையாட்டாக எனக்குத் தோன்றவில்லை. நான் இன்னமும் அந்தப் பழைய சைக்கிளில் மலர்கொடிக்காகக் காத்திருக்கிறேன். அவள் என்னுடைய கம்பத்து வீட்டின் பின்புறக் கோலாலம்பூரில் இருக்கிறாள். என்றாவது என் பேருந்து அவளுக்காக அந்தக் கோலாலம்பூர் போகும் என்று கறபனையில் கொஞ்சம் நம்பிக்கைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.

அங்கிருந்த சமயங்களில் நானும் மலர்கொடியும் எங்கள் வீட்டையும் வீட்டின் பின்புறத்திலுள்ள வயலையும் சுற்றித் திரியத் தொடங்கிய காலக்கட்டம்தான் மறக்க முடியாததாக இருந்தது. வயல்பரப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும், மேலும் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் மத்தியில் நடப்பதற்கான பாதையும் இருக்கும். எப்படியோ அந்தப் பாதையில் நடந்து போய் வீட்டிலிருந்து பல மீட்டர் தூரம் விலகி வந்து வீட்டை நோக்கி பார்த்துக் கொள்வோம். வீடு மிக தொலைவில் சிறு புள்ளியாய் தெரியும் போது மலர்கொடி துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்துக் கொள்வாள்.

“டேய் அங்க பாருடா. . நம்ப வீடு கண்ணுக்கெ தெரியுல. ஐஐஐஐ ய்ய்ய்யா. . நம்ப வீட்டுக்குப் போக வேணாம். எங்கம்மா நல்லா தேடட்டும்”

“ஏய் மலரு, ஒங்கம்மா ஒன்ன போட்டு அடிப்பாங்க. வா போயிறலாம்”

“யேன் ஒங்கப்பா ஒன்ன அடிக்க மாட்டாறா? ஒனக்கும்தான் அடி உழும். ரெண்டு பேரும் சேந்து வாங்கலாம்டா, இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்”

“மலரு நீ யேன் சொன்னா கேக்கவே மாட்டறெ?”

“பொம்பளை பிள்ளிங்கனா அப்படிதான், நீ சும்மா இரு”

மலர்கொடிக்கு அப்பொழுது 8வயதுதான் ஆனால் அவள் பேசிய சில வார்த்தைகள் இன்னமும் முதிர்ச்சி குன்றாமல் அப்படியேதான் என் காதுகளின் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்டா” என்று கூறியவள் என்னைப் பாதியிலே இந்த நினைவுகளுக்குப் பறிகொடுத்துவிட்டுப் போனதுதான் எஞ்சியது. அந்த வயல், நாங்கள் பார்த்து ஏங்கிய தூரம், சிறு புள்ளியாய் தெரிந்த வீடு, வயல் பாதைகள் எல்லாமும் அந்த சின்ன வயசு மலர்கொடிக்காக சுவார்ஷயம் குறையாமல் எனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தனை வயதாகியும் இன்னமும் குசுனி பக்கமாக வந்து நிற்கும் பொழுது, சந்தின் வழியாகப் பார்ப்பேன். வெறும் இருள் மட்டும்தான் சுருங்கிக் கிடந்த போதும் மீண்டும் மீண்டும் அந்த இருளுக்குள்ளிருந்து தெரியும் மலர்கொடியின் சின்ன வயசு இங்கிலிஸ் கவுனுக்காக இருளைப் பார்த்தே ஏமாந்து போவேன்.


3

`“யேண்டா, அந்த மலரு பிள்ள கல்யாணத்துக்குப் போயிட்டு வரனும், மறந்துறாத. வீட்டுக்கு வந்து கொடுத்துட்டுப் போனுச்சு”

நாற்காலியில் அமர்ந்து கொண்டு அம்மா கூறிவிட்டுப் போனதை மெல்ல சுவீகரிக்கத் தொடங்கினேன். நிச்சயம் மலர்கொடி கல்யாணத்திற்க்குப் போய்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பத்திரிக்கையில் அவளுடைய பெயர் அழகாகத் தெரிந்தது. அவள் பெயர் மட்டும்தான்.

“மலரு நான் ஒன்னுக்குப் போவ போறேன், பாத்துக்க யாராச்சம் வராங்களானு”

“டேய் அசிங்க பிடிச்சவனே, அங்கயா நீ ஒன்னுக்குப் போவ?”

எங்கள் வீட்டின் ஜன்னலிலிருந்து கொஞ்சம் எக்கிப் பார்த்தால் வயலை ஒட்டி நிற்கும் வாழை மரங்கள் ஒழுங்கற்ற நிலையில் தெரியும். அந்த மறைவில்தான் மலர்கொடியைக் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு நான் சிறுநீர் கழிப்பேன். அவள் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டு, எனக்குக் கேட்கும்படி கத்துவாள்.

“டேய் வெக்கம் இல்லாத பையன்டா நீ”

அவளும் வீட்டின் பின்புறச் சாக்கடையில் சில சமயங்களின் கால்கள் இரண்டையும் பரப்பிக் கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக அமர்ந்து கொண்டிருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று கொண்டு மீண்டும் வழக்கப்படி கத்தித் தீர்த்துவிடுவாள். இன்றும் நான்சுவர் மறைவில் சிறுநீர் கழிப்பதற்காக உடையைக் கலைக்கும் போது, அதே மலர்கொடி, எனக்குப் பின்புறத்தில் நின்று கொண்டு அதே தோரணையில் கத்துவது போலத்தான் இருக்கிறது.

“டேய் வெக்கம் கெட்டவனே. . இப்படியா ஒன்னுக்குப் போவாங்க?”

0 0 0 0 0 0

“டேய், வந்து சாப்டுடா. . டேய். .”

அம்மா மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார். எழுந்து நிமிரும் போது, தலைக்கு மேலிருந்து ஏதோ ஒன்று கழன்று கொண்டு வீழ்ந்தது போல இருந்தது. இலேசான தடுமாற்றம். பத்திரிக்கையைச் சரிப்படுத்தி என் அறை மேசையில் வைத்துக் கொண்டேன். அவளுடைய கல்யாணத்திற்கு இன்னமும் 5 நாட்கள் இருந்தன. என் மலர்கொடியை அல்லது நான் இன்னமும் சேகரித்து வைத்திருக்கும் அந்த பத்து டுவா மலர்கொடியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருப்பது சுகமாக இருந்தது. எனக்கென்று இருக்கும் ஒரேயொரு சின்ன வயசு கூட்டாளி அவள் மட்டும்தானே. அவள் அவளாகவே இருக்கட்டும் எனக்குள் மட்டும். அவளுக்கு இப்பொழுதுதான் 5 வயது, கால்களை உதறிக் கொண்டு அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருக்கிறாள்.


கே.பாலமுருகன்

மலேசியா

Friday, May 29, 2009

சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்

கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து வீழும் பறவையின் சிறகு போல சொக்கியிருக்கும். நீ நின்று கொண்டிருப்பது ஒரு சாமியாடியின் கோவில் என்பதைத் தெரிந்து கொள். நேராக நடந்து மலைமேட்டின் தொங்கல்வரை செல்.

மிக அருகாமையில் தெரியும், பிறகொரு சமயம் உன்னை அது எங்கோ இழுத்துக் கொண்டு போகும் மாயைப் போல தெரியும். சடாரென்று கோவிலின் கோபுரம் கண்களிலிருந்து மறைந்து கானல்போல வெறும் வெயிலாக மாறுவதாகத் தோன்றும். கொஞ்சமும் அக்கறைப்படாமல் விரைந்து ஏறு. மலையின் உச்சியை அடைந்ததும் உனக்கு உடல் முழுவது வியர்த்திருக்கும். உடனே அந்த வியர்வையைத் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு 5 நிமிடம் அங்கேயே காத்திரு. உடல் மீண்டும் நிதானத்திற்குத் திரும்பியதும் உடலிலிருந்து ஏதாவது துர்நாற்றம் வீசுகிறதா என்பதைத் தெரிந்து கொள். இல்லையென்பதை உறுதி செய்தபின் கோவிலை நோக்கி நட.

“4 நம்பர் சொல்லு. . டே. . சொல்லுடா. . 4 நம்பர்லே எல்லாமும் அடக்கம்டா. . பொணத்து மேல உக்காந்து மை எடுக்கற கலை அவ்ள சாதரணம் இல்லடா. . தலைச்சம் பிள்ளையோடெ முதுகெழும்புலேந்து எடுத்த மை”

“டே. . முரளி. . 4 நம்பர். . டே. . நம்பர் எடுக்கப் போலயா. . டெ. . ஆத்தா காவல் கொடுக்கற நேரம் காட்டுலேந்து தலையடி சாமியாருங்க கொழ பண்றானுங்க. . முரளி. .டே. . தூங்கறான் பாரு.. டே”

அறைக் கதவைத் திறந்த அம்மா இன்னும் கொஞ்சம் நகர்ந்து என்னை நெருங்கியிருக்கலாம். அவரின் அழைப்பு காதுக்குச் சமீபத்தில் கேட்கிறது. விழிப்புநிலையில் இருந்தும் எந்தப் பிரதிபலிப்பும் உடலில் இல்லை. வெறும் பிரக்ஞை மட்டும் அறையில் இருப்பதாக உடல் எங்கோ நழுவிவிட்டது போல. எங்கோ ஒரு மலைபிரதேசத்தின் அடிவாரத்தில் அல்லது சுடுகாட்டின் இருளில் இப்படி அதிசயமான மனநிலையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் அகத்தின் பாதியை அம்மாவின் அழைப்பு கயிறு போட்டு இழுக்கிறது. குரல்களால் நிரம்பிய ஒரு வெளிப்பரப்பு.

“டே. . என்னா பண்றான் இன்னும்”

அம்மா வந்து உடலைக் கொஞ்சம் பலம் கொண்டு தட்டினார். மலையிலிருந்து உருண்டு கீழே விழுவது போல திடீர் விழிப்பு. கண்களைத் திறந்திருக்கும் எனக்கு எங்கேயிருந்து இந்த விழிப்பு?

“என்னாடா ஒடம்பு இப்டி வேர்த்திருக்கு? ஏகோன் ஓடுது”

அறைக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தும் நான் மட்டும் அறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன்.

“போய் நம்பரு எடுத்துட்டு வாடா. . மணியாச்சி. சீனன் கடயெ அடைச்சிருவான்”

நிராகரிக்க இயலாத குரல்கள் எனக்குள் உதிர்ந்து ஏதோ ஒரு உருவகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. உணர முடிந்தது. தொண்டைக்குள்ளிருந்து என் அம்மாவின் முகத்தை எட்டிப் பார்த்து பிறகு மீண்டும் சலசலவென நீர்ப்போல உள்ளிறங்கி வயிற்றுப் பகுதியிலுள்ள செல்களை மோதுகின்றன.

“கெட்ட கனவு மாதிரி இருக்குமா”

“சரி. . சரி. . கெளம்பி போ”

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உடலெல்லாம் கூசியது. மோட்டாரை எடுத்துக் கொண்டு நம்பர் கடைக்குச் சென்றேன். அது ஒரு அலமாரி கடை. எல்லாம் பலகை அலமாரிகள். அந்தக் கடைக்குள் நுழைந்து உள்ளே இருட்டில் இருக்கும் ஒரு அறைக்குள் போனால், முதலாளியின் தம்பி பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பான். எப்பொழுதும் உத்தமன் போல வியாக்கியானம் செய்துகொண்டிருக்கக்கூடியவன். அண்ணனைப் பற்றி ஏதாவது குறைப்பட்டும் கொள்வான்.

“ஏசோக் யூ அடா கெனாலா நம்போர்”

நாளை எனக்கு நம்பர் அடிக்கப் போகிறது என்று சப்புக் கட்டினான் மலாய் மொழியில். அவனிடமிருந்து எதையும் கேட்கும் மனநிலையில் நானில்லை. 4 நம்பரை மட்டும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்தேன். அப்பாவின் கார் எண்கள். 7169. அவன் அதைப் பார்த்துவிட்டு ஏதோ முனகினான். அந்த அறையின் இருப்பு அமானுடமான சூழலை ஏற்படுத்துவது போல இருக்கும். தொலைவில் எறியும் சிவப்பு விளக்கும் அதன் உக்கிரமும் நமக்குள்ளும் தாவுவது போல ஒரு பிரமை.

“யூ மாவு தேங்கோக் போமோ சீனா? பொலே கென்னா நம்போர்லா”

சீன சாமியாடியைப் பார்க்கிறாயா? உனக்கும் அதிர்ஸ்டம் கிட்டுமென அவன் உதிர்த்த வார்த்தைகள் கனவில் சொல்வது போல தோன்றியது. எப்பொழுது வெளியே வந்தேன் என்று தெரியவில்லை. சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும்போது மோட்டாரில் சென்று கொண்டிருந்தேன்.

கிழக்குப் பார்த்த ஒரு திசையில் அடர்ந்த காட்டுப் பாதையில் ஓர் இருளில் நகர்ந்து கொண்டிருந்தேன். எங்கோ மலையின் உச்சியிலிருந்து உச்சாடனக் குரல்கள் சரிந்து அடிவாரத்தில் இறங்கி காடு முழுக்க பரவுவது போல ஒரு சப்த அதிர்வு. யாரோ என்னைக் கட்டி இழுத்துக் கொண்டுருக்கிறார்கள். தூரத்திலிருந்து அந்தக் குரல் ஏதோ முனகுகின்றது. அந்த முனகல் ஒரு மந்திரம் போல என்னை இயக்குகின்றது. ஒரு மரத்தடியைக் கடக்கும்போது அம்மாவும் அப்பாவும் அங்கு அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை நோக்கி என் வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன். வெறும் காற்று மட்டும் கசிகிறது எனக்குள்ளிருந்து.

“இங்கு வந்து உக்காரு. . உன் பேரு என்னா?”

“முரளிதரன்”

“முரளி. . நீ வந்து சேந்திருப்பது மலையடி சிவசக்தி கோயிலு”

“உனக்குள்ள 4 நம்பரே இறக்கி உங்க உலகத்துலே இருக்கற குரல்களெ சேகரிக்கனும். . நல்லா கேளு. . உன் வயித்துக்குள்ள முளைச்சிருக்கற சுடுகாடு ரொம்ப பயங்கரமானது. . செத்தவன் சும்மா இருக்கமாட்டான். . வெளிய வரப் பாப்பான். . அவன் வெறும் வார்த்தைகளால் உள்ளவன். . உன்ன பயன்படுத்தி ஒரு வார்த்தையா வெளிய வந்துருவான். . அவனுங்களே அடக்க எண்களால் மட்டும்தான் முடியும். . எண்களெ அழிக்கனும். . அது பற்றிய பிரக்ஞையை எல்லாரும் இழக்கனும். . அப்பத்தான் அந்தச் சுடுகாட்டுப் பிணங்கள் அடங்கும். நல்லா கேட்டுக்கெ நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டெ. .”

அறைக் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள். அப்பாவின் கைகள் என் மீது பட்டு என்னை எதுலிருந்தோ மீட்கின்றன.

“டே. . நேத்து எடுத்தியே நம்பரு அடிச்சிருச்சிடா”

கண்களைத் திறந்ததும் வீட்டிற்கு வெளியிலிருந்து நான்கு உருவங்கள் உள்ளே நுழைய காத்திருந்தன. எட்டிப் பார்த்தேன். அதிர்ந்து போவதற்குள் மீண்டும் அப்பாவின் குரல்.

“டே. . போயி சீனன்கிட்ட காசெ வாங்கிட்டு வந்துரு. எப்படியும் 2000 வெள்ளி கிடைக்கும்”

உடல் ஊனமுற்ற குழைந்தைகள் போல அந்த நான்கு உருவமும் வளைந்து நெளிந்து, சுருண்டு, தவழ்ந்த நிலையில் மனித உருவத்திலிருந்து பிசகிய ஓர் அசாத்திய தோற்றத்தில் இருந்தன. மயக்கம் தலைக்கு எட்டி ஓங்கி அடித்தது. மெல்ல அந்த நால்வரும் வீட்டிற்குள் நீர்ப்போல உருகி ஊர்ந்து நுழைந்து கரைந்தார்கள்.


2

அவ்வளவு தூரம் வந்து இன்னும் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதை வளைந்து வளைந்து எங்கோ போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது புதியதாக முதுகில் ஒரு வலி துவங்கியிருக்கிறது. முதுகு தானாக வளைந்து கொள்ளவும் செய்கிறது. பயண அசதியின் வெளிப்பாடாக இருக்கலாம். 14ஆம் எண் தோட்டத்தில் ஒரு சாமியாடி இருப்பதாகக் கூறியிருந்தார்கள். அவரைப் பார்த்து ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று தோன்றியது. பாதையின் இழுவைக்கேற்ப விட்டுக் கொடுத்தவனாக மோட்டாரில் நகர்ந்து கொண்டிருந்தேன். இரப்பர் தோட்டத்து எல்லைவரை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஒரு பாதை இலேசாக நெளிந்து காட்டுக்குள் ஓடியது. வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

“யாம்மா இங்க சாமியாடி இருக்காராமே. . அவர் வீடு எங்க?”

“அதோ அங்க இராமர் கோயிலு இருக்கே, அதுக்குப் பக்கத்துல முனியாண்டி சாமி கோயிலு இருக்கும் பாருங்க. . அங்கத்தான் அவரு வீடு”

உள்ளே நுழைந்ததும் அந்தச் சாமியாடி காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உறங்கிவிட்டிருந்தார். சங்கடத்துடன் இலேசாக அவருக்கு முன்னால் போய் முனகினேன். இல்லை, நான் முனகவில்லை. ஏதோ உள்ளுக்குள்ளிருந்து.

“வாங்க உக்காருங்க. . சாரி. . தூங்கிட்டேன். மத்தியானம் இப்படித்தான் சாப்டுட்டா தூக்கம் வந்திருது. . சொல்லுங்க என்னா விசயம்? ஏதாவது முடி கயிறு கட்டனுமா? இல்லெ பேயு ஓட்டனுமா?”

“சாமி. . என்னோட பிரச்சனயே வேற. . எனக்கு எப்பவும் ஒரு கனவு வருது ஆனா அந்தக் கனவு ஒவ்வொரு நாளும் வளந்துகிட்டே வருது. அன்னாடம் கனவுலே நான் ஒரே பாதையிலே ஒரே மலை உச்சிய நோக்கி போறேன். . அங்க ஒரு கோபுரம் தெரியுது. . சாமியாடி ஒருத்தர் இருக்காரு. . அவர் எனக்குப் புரியாத பல விஷயங்களே பேசறாரு”

“என்னப்பா ஏதோ கனவு கினவுனு புலம்பறே. . இந்த மாதிரி கெட்ட கனவுலாம் வர்றது சாதாரணம்தானே. . அதுக்கு என்னா. . ஒரு முடி கயிறு கட்டனா சரியா போயிரும்”

“இல்ல சாமி . . ஏதேதோ நடக்குது. என் வயித்துக்குள்ள ஒரு சுடுகாடு இருக்குனு அந்தச் சாமியாடி சொல்றாரு. . ஆனா என் வயித்துலேந்தோ இல்ல என் உடம்புக்குள்ளேந்தோ ஏதோ ஒன்னு இந்த வெளி உலகத்தெ எட்டிப் பாக்குது சாமி. .என்னால அதெ உணர முடியுது. கனவுலே நான் என் பயணத்தெ எங்க முடிக்கறனோ மறுநாள் கனவுலே அங்கேந்தே பயணத்தெ தொடர்றேன் சாமி. .”

“என்னப்ப உளர்றே? வயித்துக்குள்ள சுடுகாடா? அட நி ஒன்னு. சும்மா இதெல்லாம் ஏதாவது காக்கி சேட்டெ அடிச்சிருக்கும். காட்டுப் பாதையிலே போயிருப்பெ.இரு துன்னுரு தர்றேன். போட்டுக்கோ”

வந்த நோக்கம் எதற்கும் இடம் கிடைக்கவில்லை. சாமியாடி ஏதோ மந்திரம் ஓதி என் நெற்றியில் திர்நீரை அப்பினார்.

“தம்பி. . ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரியா தெரியறே. தூரத்துலேந்து பாத்தேன் உன் தலெ ரவுண்டா வலைஞ்சி உடம்புலேந்து வெளியே வந்துட்ட மாதிரி இருக்கு. தொங்கிப் போது. பாத்துப்பா. ரொம்ப குனிஞ்ச வேல ஏதாச்சம் செய்யறயா?


3

மலை உச்சியின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அந்தச் சாமியாடி ஒரு மஞ்சள் விளக்குப் போல கோவிலின் கோபுரத்து சுவரிலிருந்து பிளந்து உள்ளே ஊற்றினார். அவரின் உருவம் நீர்ப்போல உருவமற்ற நிலையில் பரவியிருந்தது.

“பயப்படாதெ! நான் உனக்குள் இருக்கும் ஆழ்மன பிரமை! இல்ல இந்தக் கோயிலோட முன்னால் சாமியாடி. எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. எங்கள் உலகம் உன்னெ பயன்படுத்தி பூமியில உள்ள எல்லாம் எண்களையும் மீண்டும் எடுத்துக்க போறோம். நீ எண்களால் உருவானவன். உன்னெ உன் வயித்துக்குள்ள இருக்கற பிணங்களெ திண்றதுக்காக எல்லாம் எண்களும் உனக்குள்ள வந்துகிட்டு இருக்கு. அருவி போல நீர்ப்போல. நீ ஒருநாள் கரைஞ்சி போகப் போற. எல்லாத்தையும் மீட்கப் போறோம்.. சாமியாடிங்க செஞ்ச எல்லாத்தையும் மீட்கப் போறோம். . எண் மேல செலுத்தன எல்லாம் சூனியங்களையும் எடுத்துக்க போறோம். உலகத்துல்ல மனுசாளுங்க மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு எண் பிறக்குது வளருது, ஒவ்வோர் மனுசனோட வயித்துக்குள்ளயும் போயீ உயிர் வாழுது. பிறகொரு சமயத்துலே அவன் ஒரு எண்ணாகவே இருக்கான். அவனுக்குள்ள அந்த எண்தான் எல்லாமுமா இருக்கு.”

4

என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். முதுகு தண்டு ரொம்பவே வளைந்து காணப்பட்டது. அந்தக் கனவுலகிருந்து என்னால் மீளமுடியவில்லை. தினமும் ஒரு கராரான குரல் எங்கோ தொலைவிலிருந்து கேட்கிறது. இது என்ன பித்தநிலையா அல்லது பிரமையா? வீட்டு முன்வாசலில் வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி அங்கிருந்து கொண்டே ஏதோ முனகினார்.

“டே. . ஏதோ நம்பரு அடிச்சிருச்சாம்? நல்ல இராசிக்காரன்தான் நீ. அந்தக் காலத்துலே நம்பரு அடிக்கறதுக்காக என்னனமோலாம் பண்ணுவானுங்க, வசியம் செய்வானுங்க, சுடுகாட்டுலே உக்காந்து பொணத்துலேந்து மை எடுத்து என்னனமோ பண்ணுவாங்க நம்பரு அடிக்க, அடிச்சிட்டா கோயில்லெ போய் கெடா வெட்டுவானுங்க. நீ அதெல்லாம் செய்யாம பெரிய தொகையா அடிச்சிட்டியே. நம்பரு அடிச்சி நல்லா சாப்டு “8” மாதிரி தலெ சிறுத்தும் வயித்துக்குக் கீழே பெருத்தும் இருக்கறயே”

பகீரென்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கண்ணாடியின் முன் என்னைப் பார்த்தேன். முதுகு தண்டு வளைந்து, கால்கள் சுருங்கி “6” போல தெரிந்தேன். தலை காணாமல் போயிருந்தது.


ஆக்கம்

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com