Tuesday, August 25, 2009

உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல


உதிர்வது அவ்வளவு
கடினமான காரியமல்ல.
அல்லது அலட்சியமான
ஓர் துர்சம்பவத்திற்கான
பிரயாசையுமல்ல.

உதிர்வது எளிதில்
நடந்துவிடக்கூடியது.
மயிர்போல உதிர்த்துவிடப்படுவது
அல்லது இலைக்கு நிகரான சராசரி உதிர்வின் உச்சமுமாக
ஒலியிலிருந்து சொற்கள் உதிர்வதுபோல
உடலிலிருந்து வயது உதிர்வதுபோல
கண்களிலிருந்து வெளிச்சம் உதிர்வதுபோல
பிடிகளிலிருந்து தளர்ந்து வீழ்வதன் சூட்சமமென
எல்லாமும் ஒரு பிடிகளுக்குள் சிக்கித்தவிக்கும் நிதர்சனத்திற்காக
ஒன்றையொன்று உதிர்த்துக்கொள்வதன் மூலம்
படைப்பின் வேர்களைக் கடந்து செல்ல.

உதிர்வது மிக இரகசியமானது.
ஒரு இலையின் சிறு நுனி காம்புகளில்
ஒளிந்து கிடக்கும் அல்லது
மழைத்துளியின் விளிம்பு சொட்டுகளில்
தளர்ந்திருக்கும்.
உதிர்வு ஒரு அசம்பாவிதம் அல்ல.
உயிர்களுக்குள் உயிர்களுக்கு வெளியில்
பிரபஞ்சகளில் பிரபஞ்ச வெளிக்குள்
நிகழும் சராசரி.

கே.பாலமுருகன்
உயிரோசை - Uyirosai

Sunday, August 23, 2009

இரயில் பயணம்


1
இரு ஆண்களுக்கு மத்தியிலான இருக்கை
பயணம் நெடுக காலியாகவே இருந்தது.
கால் வலிக்க இறுகியிருந்த பெண்களின்
நெரிசலுடன் இரயில் சப்தமின்றி
விரைந்து கொண்டிருந்தது.

2
சிறு இடைவெளியுமின்றி
ஒருவர் முகத்தை ஒருவர் உரசிக்கொண்டு
அடுத்தவர் சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டு
உடல் உறுப்புகள் பற்றிய கவனம் சிதறும்
ஓர் இரயில் பயணத்தில்.

அருகிலிருப்பவனின் அக்குளில்
புதைந்துவிட்ட மற்றவர்களின் முகங்கள்
தெரிவதற்குள்
சரிந்து விழுகின்றன உடல்கள்
ஒவ்வொரு நிலையத்திலும்.

உடல் வியர்த்துக்கொட்ட
ஒரு துர்நாற்றாமாக பரவுகின்றது
நெருக்கடியும் அதிருப்தியும்.
கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில்
யாரிடமிருந்தோ வந்திருந்த குறுந்தகவல்
சப்தமிடுகின்றது.
“நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com