Wednesday, November 4, 2009

கவிதை: எதிர் பிம்பம்




எதிர்பாராவிதமான சந்திப்புகளில்
கசியவிடும் துரோகங்களுக்குச்
சாட்சியமாக
விட்டு வருகிறேன்
எதிர் பிம்பத்தை
எல்லா இடங்களிலும்.

என்னைப் போன்ற
கண்கள் கால்கள்
கைகள் மூக்கு
மயிர் என
எதிர் பிம்பம்
சுயசிதைவிற்காகத் தயாராகியது.

எனக்கானவர்கள்
எனக்கு நெருக்கமானவர்கள்
நண்பர்கள் எதிரிகள்
துரோகிகள் வழிப்போக்கர்கள்
உறவுக்காரர்கள்
என எல்லோருக்கும்
திருப்தியளிக்கும் வகையில்
போலித்தனத்தின் உக்கிரத்தில்
மீண்டும் சாகவும் சிரிக்கவும்
உபசரிக்கவும் பம்மாத்துப் பண்ணவும்
கற்றுக் கொண்டது
எதிர் பிம்பம்.

எல்லாம் உடைவுகளுக்கும்
உடன்பட்டு
கரைந்துகொண்டிருந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: உயிரோசை வார இணைய இதழ்