Friday, March 11, 2011

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்


எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்

பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்


எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு
பழைய வீடிருந்த
தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பார்த்த இடங்களிலெல்லாம்
மாற்றங்கள் நினைவுகளைத்
தகர்த்திருந்தன.

முன்பிருந்த மாங்காய்
மரங்கள் அனைத்தும்
செத்திருந்தன.
பெருக்கெடுத்தோடும் ஆற்றில்
மரக்கட்டைகள் விழுந்து
அடைத்துக்கிடந்தன.

முனியாண்டி கோவில் பூசாரி
மாரியாத்தா கிழவி
பெரிய சைக்கிள் தாத்தா
ஒட்டுக்கடை பாட்டி என
எல்லோரும் அப்பொழுது இல்லை.
நான் அங்கில்லாத ஏதோ ஒரு காலத்தில்
ஏதோ ஒரு பொழுதில்
அவர்கள் எல்லோரும் இறந்து போயிருந்தனர்.

4 ஆம் எண் லயத்தில்
ஒரு வீடு மட்டும் தனித்திருந்தந்து
பூக்காரப் பாட்டியுடன்.
அவர் மட்டுமே என்னை ஞாபகப்படுத்திவிட்டால்
மீண்டும் நான் வாழ்ந்த தோட்டத்தின் ஆன்மாவைத்
திரும்பப் பெற்றதைப் போல இருக்கும்.

"பாட்டி நான் யார்ன்னு தெரியுதா?"
என்றேன் குதிகாலிட்டு வீட்டின் சூன்யத்தை
விழுங்கிக் கொண்டு தனிமையில்
அமர்ந்திருந்த பூக்காரப் பாட்டியிடம்.

"பாட்டி. .  தனப்பாக்கியம் மகன்..மூனாவது லயம்"
பூக்காரப் பட்டி இல்லாமல் போய்விட்ட
மூன்றாம் லயத்தின் அமைதியைக் கவனமாகப்
பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினார்.

"ஓ நீயா? அந்த மேட்டு கெணத்துலெ
உழுந்து செத்துப் போய்ட்டியே. . நீதானே"
பாட்டி  மேட்டுக் கிணற்றில்
விழுந்து செத்துப்போன தன் மகனின்
இறப்பிற்குப் பிறகு
வேறு யாரிடமும் பேசியதில்லை.


கே.பாலமுருகன்