Friday, March 11, 2011

பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்


எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு
பழைய வீடிருந்த
தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பார்த்த இடங்களிலெல்லாம்
மாற்றங்கள் நினைவுகளைத்
தகர்த்திருந்தன.

முன்பிருந்த மாங்காய்
மரங்கள் அனைத்தும்
செத்திருந்தன.
பெருக்கெடுத்தோடும் ஆற்றில்
மரக்கட்டைகள் விழுந்து
அடைத்துக்கிடந்தன.

முனியாண்டி கோவில் பூசாரி
மாரியாத்தா கிழவி
பெரிய சைக்கிள் தாத்தா
ஒட்டுக்கடை பாட்டி என
எல்லோரும் அப்பொழுது இல்லை.
நான் அங்கில்லாத ஏதோ ஒரு காலத்தில்
ஏதோ ஒரு பொழுதில்
அவர்கள் எல்லோரும் இறந்து போயிருந்தனர்.

4 ஆம் எண் லயத்தில்
ஒரு வீடு மட்டும் தனித்திருந்தந்து
பூக்காரப் பாட்டியுடன்.
அவர் மட்டுமே என்னை ஞாபகப்படுத்திவிட்டால்
மீண்டும் நான் வாழ்ந்த தோட்டத்தின் ஆன்மாவைத்
திரும்பப் பெற்றதைப் போல இருக்கும்.

"பாட்டி நான் யார்ன்னு தெரியுதா?"
என்றேன் குதிகாலிட்டு வீட்டின் சூன்யத்தை
விழுங்கிக் கொண்டு தனிமையில்
அமர்ந்திருந்த பூக்காரப் பாட்டியிடம்.

"பாட்டி. .  தனப்பாக்கியம் மகன்..மூனாவது லயம்"
பூக்காரப் பட்டி இல்லாமல் போய்விட்ட
மூன்றாம் லயத்தின் அமைதியைக் கவனமாகப்
பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினார்.

"ஓ நீயா? அந்த மேட்டு கெணத்துலெ
உழுந்து செத்துப் போய்ட்டியே. . நீதானே"
பாட்டி  மேட்டுக் கிணற்றில்
விழுந்து செத்துப்போன தன் மகனின்
இறப்பிற்குப் பிறகு
வேறு யாரிடமும் பேசியதில்லை.


கே.பாலமுருகன்

No comments: