Friday, February 19, 2010

ஒரு வானமும் சில மழைக்காலங்களும்

மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா