Friday, September 4, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்

1
ஒவ்வொருமுறையும்
ஏதையாவது பேசிவிட
தோன்றுகிறது
மார்க்சியம்
ஓஷோ
பாரதி
அரசியல்
உலக சினிமா
அகிரா குரொஷோவா
பாலிஸ்தீனம்
பின்நவீனத்துவம்
தத்துவ ஆய்வான
உரையாடல்களில்
விவாத மேடையில்
குறைந்தது
சினிமா விமர்சனத்தில்
இப்படி எதிலாவது
கலந்து கொள்ள
ஒவ்வொருமுறையும்
என்னைத் தயார்ப்படுத்திப்
பார்க்கிறேன்
வீட்டின்
முன்வாசல்வரைத்தான்
வர முடிகிறது
அதன்பிறகு
சரிந்து
கரைந்துவிடுகிறது
எனக்கான உலகம்

2
வீட்டைக் கடக்கும்
ஒரு குழந்தையாவது
சிறிது நேரம்
என் வீட்டின்
அருகாமையில் நின்று
விளையாடிவிட்டு போகாதா
என்று
என் பொழுதுகள்
விரைத்துக் கொண்டிருக்கும்

3
மீண்டும் மீண்டும்
வரைந்து பார்க்கிறேன்
குழந்தைகளின்
புகைப்படங்களை
என் வீட்டுச் சுவரில்
ஏனோ தெரியவில்லை
மறுநாள்
குழந்தைகள்
நகர்ந்து வெளிச்சுவரில்
காத்திருக்கின்றன

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.

Sunday, August 30, 2009

தொலைத்தூர பயணம்



1

நீண்ட பயணத்தின்போது
வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை
ஏற்படுத்தியிருக்கும்.
அல்லது உருவங்கள் கரைந்து
வெறும் சொற்கள் மட்டும்
மிதக்கக்கூடும்.
தொலைத்தூர பயணம் ஒரு மாயையென
அவதாணிப்பற்ற பொழுதுகளுடன்
வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.
பயணத்தவர்களில் சிலர் காணாமல்
போயிருந்தாலும்கூட
ஒரு மர்மயாய் இருப்பின் சூன்யத்தில்
ஒட்டிக்கிடக்கும் வாக்கியங்களால்
நிரம்பக்கூடும்.


2

எதுவரை நீளும் என்கிற முன்னறிவிப்பு
ஏதுமின்றி பயணம் விரிய
அர்த்தமற்று ஓடிக் கொண்டிருக்கின்றன
காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும்
ஓயாமல் சப்தமிட்டுக் கொண்டிருக்கும்
வானொலி பாடல்களும்.


3
ஒரு தொலைத்தூர பயணத்தில்
சில மௌளனங்களைக் கண்டடைந்தேன்.
எனக்குள்ளே நான் பேசிக்கொள்ளும்
வித்தையைக் கற்றிருந்தேன்.
பேசாமல் விடுப்பட்டுப் போன
உரையாடல்களின் போதாமைகளைச்
சரிக்கட்டிக் கொண்டிருக்கவும் செய்தேன்.
வெறுமனே சில மணிநேரங்கள் அமர்ந்திருப்பதைத் தவிர
சில அதிசயங்களும் நிகழும் தொலைத்தூர பயணத்தில்.

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com