Tuesday, November 1, 2011

கவிதை: இந்தத் தழலிலும் எரியாத தகவுரை


நான் என்னைப் பற்றி ஒரு தகவுரை வழங்கவேண்டியிருந்ததால்
கொளுந்துவிடும் தழலுக்கு முன்பாக அமர்ந்திருக்கின்றேன்.
காலம் எரிந்து சாம்பலாகிவிடுவதையும்

Thursday, September 22, 2011

கவிதை: உணர்க்கொம்பு

எலும்புகள் சில்லிட
உறையும் பனிக்குள்ளிருந்து
திக்காக வடிகின்றன
உன்னைப் பற்றிய பதிவுகள்.
மரணத்திற்குத் தயாரான
வாய், மூக்கு, கைகள்
மூச்சிரைப்பு என
என் மீதிருந்த அழுக்குகளைக்
குவித்து திட்டுகளாக்கித் தடவுகிறேன்.
வாய் குளறும்போது
சொற்கள் தாரைதாரையாக வழிகின்றன.

Friday, September 16, 2011

கவிதை: பொருந்தாத காலணி


1

அடுத்த வருடம் என் கால்கள்
வளர்ந்துவிடும் எனச் சொல்லி
அம்மா வாங்கிக் கொடுத்த
பொருந்தாத காலணிக்குள்
ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச்
இடைவெளி அப்படியே இருக்கிறது.


2

நடக்கத் துவங்கிய வயதில்
தொந்திமாமாவின் பெரிய சிலிப்பர்
முத்து பெரியப்பாவின் வெளிக்காட்டு சப்பாத்தி

Sunday, September 11, 2011

கவிதை: கடைசி முத்தம்

கடைசி முத்தம்
கொடுக்கும்போதும்
பெறும்பொழுதும்
நடுக்கமாக இருக்கிறது.

கடைசி முத்தத்தில் ஈரத்தைவிட
பயமும் வலியும் துயரமும்
நிரம்பியிருக்கின்றன.

Thursday, September 1, 2011

கவிதை: ஒரு புகைப்படத்தில் நிகழ்ந்த மரணம்


1
இப்பொழுது நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில்
முன்பொருமுறை நானும் இருந்தேன்.

2
புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
வைப்பதற்கு முன்பாக
நான் உங்களிடம் அதில் காணாமல் போயிருக்கும்
என்னைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

3
ஒரு புகைப்படத்திலிருந்து
காலியாவதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை.
ஆனாலும் துரத்தப்படுவதற்கு முன்
வெளியேற வேண்டியுள்ளது.

Tuesday, August 2, 2011

கவிதை: சத்தத்தின் வரலாறு

இரண்டாம் உலகப் போரில்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.

வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்

Tuesday, June 21, 2011

கவிதை: போர் முடிந்தது

சுவரோரம் வந்து நின்ற
சிறுமியின் கால்களில்
ஒட்டியிருந்தது போர்.

பாத வெடிப்புகளில்
ஒளிந்திருந்தார்கள்
போர் வீரர்கள்.

தரைப்புழுதியிலிருந்து
போர் ஆரம்பமாகும்
எச்சரிக்கை.

Monday, May 16, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 20, 2011

கவிதை: நாட்டியம்

இரு பக்க புருவத்தையும் வளைத்து
கால்களை ஒருமுறை தரையில்
உதறிவிட்டு
என்னைப் பார்த்தாள்.

தொடை இரண்டையும்
மாற்றி மாற்றி அந்தரத்தில் வைத்து
உடலைச் சாய்த்தாள்.

பாடலின் ஒவ்வொரு முடிவிலும்
நிசப்தம் பரவ
அவளுடைய கண்கள்
உக்கிரமடைந்தன.

Saturday, March 26, 2011

கவிதை: சந்திப்பு

அப்புவின் விநோதமான
செயல்களும் பறவைகள்
இறந்துபோகும் காலமும்
ஒன்றாக நிகழ்ந்தன.

தலையையும் கழுத்தையும்
திக்கில்லாமல் சடசடவென
திருப்பிக் காட்டுகிறான்.

வயிறை உப்பி கைகளை மடக்கி
காலால் ஓங்கி நடக்கிறான்.

மரக்கிளையில் வந்தமரும்
பறவைகளை ஒலியால்
கொல்வதைப் பற்றி
பேசுகிறான்.

இரவில் அவனுடய
முனகல் பறவையின்
பேரிரைச்சலாக மாறுகிறது.

தோளின் இரு பக்கங்களிலும்
போர்வையைக் கட்டிக்கொண்டு
உயரத்திலிருந்து குதிக்கிறான்.

அவனது அறைக்குள்ளிருந்து
சுவரைக் கொத்தும்
ஒலி அபாரமாக ஒலிக்கிறது.

திடீரென
வீட்டைப் பார்த்து
விசித்திரமாக மிரள்கிறான்.

அப்பு காணாமல் போய்
இரண்டுநாளுக்குப் பிறகு
அவனுடைய அறையில்
நெல்மணியும் ஒரு சில இறகுகளும்
கிடந்தன.

கே.பாலமுருகன்

Wednesday, March 23, 2011

கவிதை: கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.

கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.

கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.

கே.பாலமுருகன்

Friday, March 11, 2011

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்


எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்

பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்


எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு
பழைய வீடிருந்த
தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பார்த்த இடங்களிலெல்லாம்
மாற்றங்கள் நினைவுகளைத்
தகர்த்திருந்தன.

முன்பிருந்த மாங்காய்
மரங்கள் அனைத்தும்
செத்திருந்தன.
பெருக்கெடுத்தோடும் ஆற்றில்
மரக்கட்டைகள் விழுந்து
அடைத்துக்கிடந்தன.

முனியாண்டி கோவில் பூசாரி
மாரியாத்தா கிழவி
பெரிய சைக்கிள் தாத்தா
ஒட்டுக்கடை பாட்டி என
எல்லோரும் அப்பொழுது இல்லை.
நான் அங்கில்லாத ஏதோ ஒரு காலத்தில்
ஏதோ ஒரு பொழுதில்
அவர்கள் எல்லோரும் இறந்து போயிருந்தனர்.

4 ஆம் எண் லயத்தில்
ஒரு வீடு மட்டும் தனித்திருந்தந்து
பூக்காரப் பாட்டியுடன்.
அவர் மட்டுமே என்னை ஞாபகப்படுத்திவிட்டால்
மீண்டும் நான் வாழ்ந்த தோட்டத்தின் ஆன்மாவைத்
திரும்பப் பெற்றதைப் போல இருக்கும்.

"பாட்டி நான் யார்ன்னு தெரியுதா?"
என்றேன் குதிகாலிட்டு வீட்டின் சூன்யத்தை
விழுங்கிக் கொண்டு தனிமையில்
அமர்ந்திருந்த பூக்காரப் பாட்டியிடம்.

"பாட்டி. .  தனப்பாக்கியம் மகன்..மூனாவது லயம்"
பூக்காரப் பட்டி இல்லாமல் போய்விட்ட
மூன்றாம் லயத்தின் அமைதியைக் கவனமாகப்
பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினார்.

"ஓ நீயா? அந்த மேட்டு கெணத்துலெ
உழுந்து செத்துப் போய்ட்டியே. . நீதானே"
பாட்டி  மேட்டுக் கிணற்றில்
விழுந்து செத்துப்போன தன் மகனின்
இறப்பிற்குப் பிறகு
வேறு யாரிடமும் பேசியதில்லை.


கே.பாலமுருகன்

Thursday, January 6, 2011

கவிதை: பொம்மைகள் பிடிக்கும் என்கிற கொடூரம்

எல்லோரும் பொம்மைகளைத்தான்
வாங்கிக் கொடுத்து
என்னைப் பழக்குகிறார்கள்.

சில சமயங்களில் மிதிப்பட்டு
பல நேரங்களில் என்னால் கொடுமைப்படுத்தப்பட்டு
தேவைப்படாத பொழுதுகளில்
மூலைகளில் விசிறியடிக்கப்பட்டு
எனது முழுமையான கோபத்தையும்
அதிகாரத்தையும்
வெறுப்பையும்
அலட்சியத்தையும்
காட்டி காட்டி
சோர்வடையும்வரை
என்னை எதற்காகவோ
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பொம்மைகளுடன் படுக்க வைத்து
அடம் பிடித்த சமயங்களில்
பொம்மையை என்னுள் திணித்து
காலுடன் சேர்த்துப் பொம்மையைக்
கட்டிப்போட்டு
மீண்டும் மீண்டும் ஒன்றும் செய்யாத
அந்தப் பொம்மையை நேசிக்க வைத்திருந்தார்கள்.

வீட்டின் ஏதோ சில பகுதிகளில்
இன்றளவும் பிய்த்து எறியப்பட்டுக்
கிடக்கின்றன
யார் யாரோ வாங்கிக் கொடுத்த
கரடி பொம்மைகளும்
நாய் பொம்மைகளும்.

ஒவ்வொன்றிலும்
நான் திரும்ப திரும்ப
எனக்குப் பொம்மைகள்
பிடிக்கும் என்கிற
கொடூரத்தை உணர்ந்து கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா