Wednesday, April 20, 2011

கவிதை: நாட்டியம்

இரு பக்க புருவத்தையும் வளைத்து
கால்களை ஒருமுறை தரையில்
உதறிவிட்டு
என்னைப் பார்த்தாள்.

தொடை இரண்டையும்
மாற்றி மாற்றி அந்தரத்தில் வைத்து
உடலைச் சாய்த்தாள்.

பாடலின் ஒவ்வொரு முடிவிலும்
நிசப்தம் பரவ
அவளுடைய கண்கள்
உக்கிரமடைந்தன.


தலைக்கு மேலாக
விரல்களைச் சுழற்றியடித்து
உடலில் நேர்த்தியைப் பிசிறடிக்க முயன்றவள்
பூமிக்கு எதிராகச் சுழன்றாள்.

கதைக்குள்ளிருந்து கதையைத்
தகர்ப்பது போல
அவளுக்குள்ளிருந்து அவளைத் தனியாகப்
பிரித்தெடுத்து ஆடினாள்.

உடல் கோட்டினை
இரண்டாகப் பிளந்து
உச்சந்தலையைக்
குதிகாலுக்குக் கொண்டு வந்தவள்
தனதாளுமையை அதிகப்படுத்தினாள்.

கைகள் இரண்டினையும்
எதிரும் புதிருமாக ஒரே கோட்டில்
நகர்த்தி
பூமியின் புவியீர்ப்பைக் கைவசமாக்கியிருந்தாள்.

வலது காலை இடது கையில் பிடித்து
இடது கையால்
உலகம் மையம் கொண்டிருந்த
ஒழுங்கமைவை துச்சப்படுத்தினாள்.

முதுகு தண்டை மடக்கி
வலது காலின் பெருவிரலை
உச்சந்தலையில் வைத்து
ஆண் வம்சத்தை ஒடுக்கி நின்றாள்.

முட்டிக்கால்களைத் தாழ்த்தி
இரு கைகளையும் நேர்ப்படுத்தி
கண்களை நகர்த்தும்போது
கவனம் கூர்மையாகி
போர்முனைகளின் ஆயுதங்கள்
ஒன்று திரண்டன அவளுக்குள்.

எகிறிக் குதித்து
கால் பாதங்கள் வானத்தைத் தரிசிக்க
கைகளிரண்டும் மனதை விரிக்க
நெத்திப்பொட்டில் குவிந்தது
பிரபஞ்சம்.

வலது முட்டி புடைத்து முன்னகர
பின் முட்டி தரையைத் தொட்டுத் தழுவ
நான்கடி நகர்ந்ததற்குப் பின்
கால் பாதத்தில் சுருண்டிருந்தன
தொன்மையும் வரலாறும் .

கையில் சூழத்தைவிட
கூர்மையான மாயை இறுகிக்கிடக்க
வலது கால் மிதிக்கும் தோரணையில் உயர
கண்கள் நாலாப்பக்கமும் சூழ்ந்துவர
பெருவெளி சூன்யமானது.
அனைத்தும் கரைந்திருந்தன.

இடது காலை உயர்த்தியபடியே
மூச்சிரைக்க
அவள் கடவுளாகியிருந்தாள்.

கே.பாலமுருகன்

No comments: