Tuesday, August 2, 2011

கவிதை: சத்தத்தின் வரலாறு

இரண்டாம் உலகப் போரில்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.

வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்

400 வருடங்களுக்கு முன்பாக
ஒரு மாபெரும் காட்டிலிருந்து
கதறிய ஒரு கரியினுடையது என
சரியாகக் காலை மணி 11.45
15.07.2011க்கு உணர்கிறேன்.

1917இல்
விமானத் தாக்குதலுக்குப் பிறகு
அனுப்பப்பட்ட உதவிக்கான ஒலி
இன்று 15.07.2011ல் என் வானொலியின்
104ஆவது அலைவரிசைக்கு வந்து சேர்ந்தது.

சத்தங்கள்
தன்னை மீட்டுக்கொள்கின்றன.

கே.பாலமுருகன்

No comments: