Friday, September 10, 2010

கவிதை: முடிவுறுதல்

எல்லாமும் தீர்ந்தவுடன்
முதலில் வருவது அச்சம்
பிறகொரு மௌனம்
இறுதியாக வெறுமை.

காட்சிகள் தீர்ந்தவுடன்
புகைப்படங்கள் சேகரிப்பதை
நிறுத்திக்கொண்டேன்.

முந்தைய புகைப்படங்களில்
தென்படும் எனது இருப்பை
ஒவ்வொன்றிலிருந்தும்
கழற்றி எறிகிறேன்.

காலியான இடங்களிலெல்லாம்
அங்கு இல்லாதவனைப் பற்றிய
அனுமானங்களும் சித்தரிப்புகளும்
பெருகத் துவங்கின.

தீர்ந்துபோன ஒருவனை
எந்த இடத்தில் வைத்து
எந்தத் திருப்பத்தில் வைத்து
எந்த வடிவத்தில் வைத்து
எந்த வர்ணத்தில் வைத்து
மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்
என்கிற தவிப்பும் பதற்றமும்
தண்டனையாக மீந்திருக்கிறது.

வசதிப்பட்டவர்கள்
தெரியாதவர்கள்
தெரிந்தவர்கள்
அந்நியர்கள்
உறவுக்காரர்கள்
நண்பர்கள்
என எல்லோரும்
காலியான புகைப்படங்களில்
தன்னை நிரப்பிக் கொண்டதும்
எல்லாமும் மீண்டும்
முடிவுற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா

2 comments:

Unknown said...

நல்லாயிருக்குங்க.

Learn said...

அருமை, வாழ்த்துக்கள்