Saturday, October 30, 2010

கவிதை: நெடுக வளர்ந்திருப்பது சதை

இரைச்சி விற்பவனின்
கையில் சிக்கிக் கொண்ட
சதையை
துண்டு துண்டாக
அறுத்துக் கொண்டிருந்தான்.

முதல் துண்டு விழும்போது
இனத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

இரண்டாவது துண்டு விழும்போது
நிறத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

மூன்றாவது துண்டு
தரையில் விழுந்து
அவன் கால்களைச்
சுவைத்தது.

நான்காவது துண்டை
அவன் அறுக்கும்போது
மற்ற துண்டுகள்
காட்டிக்கொடுக்கப்பட்டன.

ஐந்தாவது துண்டுக்காக
அவன் கத்தியை
ஓங்கும்போது
மற்ற துண்டுகள்
அடிமையாகின.

ஆறாவது துண்டு
அவனுக்காகத் தலையை
எக்கி நீட்டியது.

ஏழாவது துண்டு
அவனைக் கும்பிட்டு
துதி பாடியது.

எட்டாவது துண்டு
அவனை வருடி
வழித்து சொறிந்து
மகிழ்ச்சிப்படுத்தியது.

ஒன்பதாவது துண்டு விழும்போது
இரைச்சி விற்பவனின்
முன்பாக வாலாட்டி வாலாட்டி
கோமாளி நடனம்
ஆடப்பட்டது.

பத்தாவது துண்டு விழுவதற்கு
முன்பாக
இரைச்சி விற்பவன்
மதிமயங்கி
கைத்தட்டினான்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா