Tuesday, August 4, 2009

மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்



1

சொற்கள் உடைந்து தவறியப்போது
ஒவ்வொரு சொற்களின் வலைவுகளிலும் நெளிவுகளிலும்
சிறு சிறு துண்டுகளென நான் சேர்க்கப்பட்டிருந்தேன்.
கோழைத்தனமாக அதிகாரத்திற்குப் பயந்தபோது
அறைக்குள் நெளிந்து துடித்தழுதபோது
தோல்விகளைக் கண்டு உலர்ந்து கிடந்தபோது
சோம்பலில் நாள்முழுக்க உறங்கிக் கிடந்தபோது
மூத்தவர்கள் காறி உமிழ்ந்து வசைகளை எறிந்தபோது
நண்பர்கள் தூரோகியென விரட்டியடித்தபோது
கதைகளுக்கும் கவிதைகளுக்கும் வார்த்தைகள் தேட அவைகள்
எட்டி நின்று என்மேல் வெறுமையை கரைத்தபோது
என் முகமும் அகமும் அருகாமையின் கலைநேர்த்தியுடனும்
ஒழுங்குகளின் மிகைவடிவங்களுடனும் புகைப்படங்களென
சொற்களுக்குள் சேமிக்கப்பட்டிருந்தன.

சொற்கள் உடைவதில் ஒரு சந்தர்ப்பமென
பல அதிசயங்கள் நிகழலாம்.
அவற்றுள் என் ஆல்பமும்
என் முகங்களும்
பிறர் மிதித்துச் செல்ல
மிக அதீதமான வசதியுடன் சாலைகளில்
சில துரோகங்களையும் சில அவமானங்களையும்
முகப்புகளென அடியொட்டி
இலவசமாக கிடைக்கும்.
குறைந்தபட்சம் விலை அதிகமுள்ள
காலணிகளுடன் வாருங்கள்.

2

பிறரின் வசதிகளுக்கேற்ப
எனது ஆல்பம்
தயாரிக்கப்பட்டது.
முதல் பக்கத்தில் உங்கள் பெயர்களைப்
பதிவிட மறவாதீர்கள்.
மேலும் கடைசிவரை ஆல்பத்தைப் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்கு
என் முகம் பதித்த ஒரு குறுந்தட்டு
இலவசமாகக் கொடுக்கப்படும்.
நீங்கள் விரும்பும்படி சிதைத்துக்கொள்ள.


3

திரையரங்குகளிருந்து படம் முடிந்ததும்
வெளியே சிதறுபவர்களுக்கு
எனது சிதைந்த ஆல்பத்தைப் பார்ப்பதில்
அவசரமிருந்தது.
கைகளுக்கெட்டிய என் புகைப்படங்களை
இலகுவாகக் கிழித்தெறிந்துவிட்டு நகர்ந்தார்கள்.

வேலை முடிந்து “மாமாக்” கடையில்
ஒரு கோப்பை தேநீர் அருந்திவிட்டு வந்தவர்கள்
ஒரு சோம்பலான அசைவுகளுடன் வெறுமனே
என் ஆல்பத்தை எத்திவிட்டு சிறு பரவசத்துடன்
நடந்தார்கள்.

தமிழ் இலக்கியக்கூட்டம் முடிவடைந்து
ஆவேச சொற்களுடன் பொங்கியபடியே வந்த ஆர்வலர்கள்
என் ஆல்பத்தின் ஆபாசங்களைக் கண்டு
நடுங்கி கொதித்தெழுந்து
வீரியமடைந்த மறுகணத்தில்
கொத்தி கொத்தி தின்றார்கள் மீதமிருந்த
புகைப்படங்களை.


4

இவ்வளவு சம்பவங்களுக்கும் சிதைவுகளுக்குப் பிறகும்
மேலும் கலர் படங்களுடன்
இலவசமாகவே கிடைக்கும்
எனது முகங்களையும் அகத்தின்
புகைப்படங்களையும் கொண்டிருக்கும்
ஆல்பம்.


கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

No comments: