Thursday, August 6, 2009

நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

பக்கத்து ஊரிலிருந்து
தப்பித்து வந்த
மழைக்குருவியின் கால்களிலிருந்து
தவறுதலாகச் சொட்டிவிட்டது
சில மழைத்துளிகள்

வெகுநேரமாக தனது சிறகை
சிலுப்பிக் கொண்டிருந்த
சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும்
தேங்கிக் கிடந்தது மழைக்காலம்

உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது
கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீரில்
எப்பொழுதோ அனுபவித்த ஒரு மழைக்காலத்தின்
துயரங்கள் ஒட்டிக் கிடந்தன.

நீ சிரிக்கும்போதெல்லாம்
அதன் ஒலியிலிருந்து பிரிந்து வருகிறது
இருவரும் ஒன்றாக பார்த்து இரசித்து நனைந்து
சாலையின் ஓரங்களில் கைகளை நீட்டி
விளையாட்டாக எக்கிப் பிடிக்க நினைத்த
ஒரு மழைப்பொழுது.


சாரலுக்குப் பிறகு
முழுக்க நனைந்துவிடுகிறது
மனமும் பொழுதுகளும்.


2

எங்கோ பிடித்த மழை
இங்கு வந்து
பழி தீர்க்கிறது.
ஒவ்வொரு சொட்டிலும் துரோகமும் அவமானங்களும்
நிரம்பி ஒழுகுகின்றன.
இனி யார் சொல்லியும்
திரும்பப் பெறாத மழை.

கே.பாலமுருகன்
மலேசியா

thanks:thinnai.com
bala_barathi@hotmail.com

3 comments:

சென்ஷி said...

முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை ரொம்ப நல்லா இருக்குது பாலா..

புதுத்தளத்தை இப்பத்தான் பார்க்கிறேன்..

கே.பாலமுருகன் said...

உங்கள் பார்வைக்கும் வருகைக்கும் நன்றி சென்ஷி.

தயாஜி said...

மறுப்பக்கத்தில் உங்கள்
மனப்பக்கம் தெரிகின்றது....